அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/005

விக்கிமூலம் இலிருந்து

அகிம்சை நெறியின் ஆரம்பம்

நேட்டால் என்ற நகரில் 'இந்தியர் காங்கிரஸ்' என்ற ஓர் இயக்கத்தைத் துவக்கி, அதற்குரிய உறுப்பினர்களைச் சேர்த்தார் காந்தியடிகள் இதற்கிடையில் அவரைத் தாக்க வந்த வெள்ளையர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தென்னாப்ரிக்க இந்தியர்கள் அவரை வற்புறுத்தினார்கள்.

தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாது வெள்ளையர்கள் என்மீது கோபமடைந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். அவர்களை மன்னித்து விடுவது தான் மனிதத் தன்மை என்று இந்தியர்களுக்குக் கூறி அவர்களை அமைதிப்படுத்தினார். தனது அகிம்சா நெறிக்கு கால் கோள் விழா நடத்தும் வகையில் வெள்ளையர்களை மன்னித்து விட்டார். இதனை அறிந்த வெள்ளையர்களிற்கு காந்தி மீது ஒருவித அனுதாபத்தை உருவாக்கிவிட்டது.

இந்தியாவிலிருந்து டர்பன் நகர் வந்த காந்தி, கஸ்தூரி பாயுடனும், தனது பிள்ளைகளுடனும் நேராகத் தென் ஆப்ரிக்காவிலே உள்ள இந்தியர்கள் வாழும் நேட்டால் என்ற நகருக்கு வந்து, ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் என்ற தனி வீடு ஒன்றை எடுத்துக் குடும்பத்தை நடத்தி வந்தார்.

நேட்டால் நகரிலே உள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி, அதன் மூலமாக, வெள்ளையர்களின் நிற வெறியை எதிர்க்கத் திட்டமிட்டுக் காந்தி பணியாற்றி வந்தார்.

குடியிருக்கத் தனி வீடு கிடைத்து விட்டதால், இனி சுகமாகத் தனிக் குடித்தனம் நடத்தலாம் என்று கணவர் காந்தியுடனும் பிள்ளைகளுடனும் கஸ்தூரிபாய் குடும்பத்தைக் கவனித்து வந்தார்.

நேட்டால் இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தினந்தோறும் காந்தியின் வீட்டிற்கு வருவதும், இரவு பகலாக அவரது இல்லத்தில் தங்குவதும் அதிகமானதால், அவர்களுக்குரிய உணவு வகைகளைச் சமைத்துப் போட்டுப் பரிமாறும் பணிகள் கஸ்தூரிபாய்க்கு அதிகரித்து விட்டன.

மருத்துவ மனைகளில் உடல் நலம் குன்றிச் சிகிச்சை பெறும் இந்தியர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கும் உணவு சமைத்துப் போடும் பணிகள் நாளுக்கு நாள் கஸ்தூரிபாய்க்கு பெருகிவந்தன.

தொழு நோயாளிகளைக் காந்தி தனது வீட்டுக்கே அழைத்து அவர்களையும் அதே வீட்டில் தங்கும்படி செய்வார். அவர்களது புண்களைத் தினந்தோறும் கழுவி சுத்தம் செய்து மருந்து போடுவார் காந்தி. கஸ்தூரி பாயும் அவருடன் சேர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய கஸ்தூரிபாய் முகம் சுளித்தால், அருவருப்புக் காட்டினால் காந்தி தனது மனைவியிடம் எரிந்து விழுவார். வாயில் வந்தபடியெல்லாம் திட்ட ஆரம்பிப்பார்:

வருவோர் போவோருக்குச் சமைத்துப் போடவும், அவர்களுக்குரிய பணிகளைச் செய்யவும் கஸ்தூரி பாயினால் முடியவில்லை. உடல் வலிக்க, களைக்க வேலைகளைச் செய்து வருவார்.

'நான் நினைப்பதை எல்லாம் நீயும் நினைக்க வேண்டும். நான் செய்வதை எல்லாம் நீயும் செய்ய வேண்டும்; எனக்கு வேண்டியவர்கள் எல்லாம் உனக்கும் வேண்டியவர்கள் தான் என்று நீ எண்ண வேண்டும்; முகம் சுளித்தால் உன் முகத்தில் நான் விழிக்கமாட்டேன்' என்று அதட்டிப் பேசுவார் காந்தி,

இந்தக் குடும்பச் சூழ்நிலைகளை இதற்கு முன்பு கஸ்தூரி பாய் அனுபவித்தவர் இல்லை! அதனால் அவருக்கு இவரது பொது வாழ்க்கை தொல்லைதரும் அனுபவங்களாக இருந்தன. இருந்தாலும், கணவன் என்ற முறையிலே அவர் இடும் கட்டளைகளை ஏற்று உழைத்துத் தேய்ந்து வந்தார் கஸ்துரி பாய்.

காந்திக்கு வழக்குரைஞர் தொழிலில் நல்ல வருமானம் வந்தது. அந்தப் பணம் எல்லாம் காந்தியின் செயல்களால் செலவாகும் நிலையும் ஏற்பட்டது.

கஸ்தூரி பாய் கூறும் குடும்ப கஷ்டங்களைச் சிந்தித்தார்; செலவாகும் வழிகளைக் குறைத்தார்; தனது வாழ்க்கையை எளிமையாக நடத்தி வரப் பழகினார் காந்தி.

காந்தியின் வீடு நாகரீக முறையில் கட்டப்பட்டது தான் என்றாலும், அந்த வீட்டில் கழிவு நீர் போக நல்ல சாக்கடை வசதி இல்லை. ஒவ்வொரு அறையிலும் சிறுநீர் கழிப்பதற்கு ஒவ்வொரு மண் சட்டிதான் இருக்கும். விருந்தாளிகளாக வந்து தங்கியிருப்பவர்களின் மண் சட்டிகளை எல்லாம் கஸ்தூரி பாய் தான் எடுத்து வெளியே கொட்டிச்சுத்தம் செய்ய வேண்டும் என்று காந்தி கட்டளையிடுவார் கஸ்தூரிபாய்க்கு இந்தப் பணிகளை எல்லாம் இதற்கு முன்பு செய்து பழக்கம் இல்லாததால் அவர் மனம் தீராத வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தது.

ஒருநாள் ”இது என்ன அருவருப்பான வேலை? அவரவர் மண்சட்டிகளை அவரவர் சுத்தப்படுத்திடக் கூடாதா? இதை எல்லாம் நான் செய்ய வேண்டும் என்பது எனது தலை எழுத்தா?" என்று கேட்டுவிட்டார் கஸ்தூரி பாய். 

’நீ செய்துதான் ஆகவேண்டும்’ என்று ஆங்காரமாக உரத்த குரலில் பேசினார் காந்தி. ஒருநாள் கிறிஸ்துவர் ஒருவர் காந்தி வீட்டில் வந்து தங்கினார். அவர் நேட்டால் நகருக்குப் புதியவர். அவருடைய படுக்கை அறையை சுத்தப் படுத்துவதைக் காந்தியோ, கஸ்தூரிபாயோ செய்து வந்தார்கள். மல ஜலம் கழிக்கும் பீங்கான் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதையும் கஸ்தூரி பாய் தயக்கமின்றி காந்திக்குப் பயந்து செய்தார்.

ஆனால் ஹரிஜனன் ஒருவருடைய மல ஜலம் கழித்த பீங்கான் பாத்திரத்தைக் கழுவிச் சுத்தம் செய்ய கஸ்தூரி பாய்க்கு மனம் இடம் தரவில்லை. தான் மட்டுமல்ல; தனது கணவர் காந்தியும் அந்தப் பணியைச் செய்ய அவர் விரும்ப வில்லை. இதனால் கணவருக்கும் மனைவிக்கும் சண்டையும் சச்சரவுகளும் மூண்டன. இருப்பினும், கஸ்தூரி பாய்தான் அப்பீங்கானைக் கழுவ வேண்டும் என்று காந்தி கட்டளையிட்டார்.

கஸ்தூரிபாய் கண்கள் நெருப்புக் கோளமாகச் சிவந்து விட்டன; மளமளவென்று கண்ணிர் சிந்தினார். மனவேதனையுடன் கஸ்தூரி பாய் பீங்கான் பாத்திரத்தைக் தூக்கிக் கொண்டு படியிறங்கி வரும்போது; காந்தி மனைவியை கோபக் கண்களுடன் பார்த்து ஆத்திரப் பட்டார். இது போன்ற வேலைகளை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டுமே தவிர, வெறுப்புடன் முகம் சுளித்துக் கொண்டு அருவருப்பாக எனது வீட்டில் செய்யக் கூடாது என்று இரைச்சலிட்டுப் பேசினார் காந்தி.

இதைக் கேட்ட கஸ்தூரி பாய் பொறுமை இழந்து, "அப்படியா உங்கள் வீட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; நான் போகிறேன்" என்று எதிர்த்து கூச்சலிட்டுக் கத்தினார். 

உடனே கோபம் கொதித்து வந்த காந்தி மனைவியை உதைத்து, அறைந்து பரபரவென்று கையைப் பற்றி இழுத்துக் கொண்டு கதவைத் தாண்டிக் கொண்டு வந்து வெளியே தள்ளி விட எண்ணினார் கதவைத் திறந்தார்! பாவம் கஸ்தூரிபாய்! கண்களில் கண்ணிர் சிந்தியபடியே அழுது கொண்டு நின்று விட்டார்.

எங்கே போவார் கஸ்தூரி? கண்காணாத தென்னாப்பிரிக்காவில் யார் தயவுக்கு ஏங்குவார்? எவர் வீட்டுக்குப் போவார்? அப்படிப் போனால் கணவனுக்கு அல்லவா அவமானம்? என்றெல்லாம் எண்ணிக்கொண்டு என்ன செய்வது என்று திகைத்து நின்றுவிட்டார்.

"ஐயோ என்ன செய்வேன்! கோபத்தில் நான் அப்படி நடந்து கொண்டு விட்டேனே! இந்தியாவா இது? இங்கே யார் இருக்கிறார்கள் எனக்கு ஆதரவாக? எங்கே போவேன்?” என்று மீண்டும் அழுது கொண்டே இருந்தார் கஸ்தூரி

கோபம் கொந்தளித்த காந்தி, மனைவியின் கண்ணீரைக் கண்டு மனமிரங்கி சமாதானம் செய்தார்! ’சரி போ வீட்டிற்குள் என்று சொன்னார் பிறகு காந்தியே வெட்கப் பட்டு, கதவை மூடிக் கொண்டு ஆறுதல் கூறினார் மனைவிக்கு.

இந்த சம்பவத்தைப் பற்றி மேலும் விரிவாகக் காந்தி தனது சுய சரிதையில் எழுதும் போது, "என் மனைவி என்னை விட்டுப் பிரிய முடியாது என்றால், நானும் அவளை விட்டுப் பிரிய முடியாது. எங்களுக்குள் பலமுறை சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது உண்டு. ஆனால், முடிவு எப்போதும் சமாதானம் தான். ஒப்பற்ற பொறுமையாலும், எதையும் சகித்துக் கொள்ளும் தன்மையாலும், இறுதியிலே வெற்றி பெறுகிறவள் என் மனைவி கஸ்தூரி பாய்தான்”. என்று குறிப்பிடுகிறார்.

தென்னாப்பிரிக்காவில் குடியேறிய காந்தி, பொது வாழ்க்கை, மனிதநேயம், சாதி ஒழிப்பு என்ற பெயரால் தனது மனைவியிடம் ஒரு கொடுங்கோலராக, ஆணாதிக்கம் கொண்ட ஒரு சாதாரண மனிதராகவே நடந்து கொண்டார்.

மாதரசி கஸ்தூரி பாய் கணவனது இந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, காந்தியை மகாத்மாவாக உருவாக்கிக் கொண்டு வந்தார்.

xxx