திருக்குறள் கட்டுரைகள்/பீலிபெய் சாகாடு

விக்கிமூலம் இலிருந்து
பீலிபெய் சாகாடு

திருவள்ளுவர் ஒருநாள் சாலை வழியே நடந்து கொண்டிருந்தார் ஒரு வண்டிக்காரன் மயில் தோகைகளைச் சுமைகமையாகக் கட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். வள்ளுவர் கண்களை மயில் தோகையின் கண்கள் கவர்ந்தன. அருகில் சென்று தொட்டுப் பார்வையிட்டார். அது பட்டினும் பளபளப்பாய், பஞ்சினும் மென்மையதாய், எடையிலும் மிக எளிதாய்த் தோன்றியது என்றாலும் அதைக்கொண்டு இரும்புத் துணையும் முறிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டது.

என்னே அவரது துணிவு.! உங்களால் அந்த முடிவுக்கு வர முடியுமா? எண்ணிப் பாருங்கள்.

வள்ளுவர் என்ன செய்தார் தெரியுமா? உடனே வண்டிக்காரனைக் கூப்பிட்டார். “தம்பி, மயில் தோகையாயிருந்தாலும் அளவுக்கு மீறி வண்டியில் ஏற்றாதே; ஏற்றினால் அச்சு முறிந்துவிடும்” என வெகு அருமையாகக் கூறினார் அக்குறள்தான் இது:

பீலியெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

பீலி என்பது மயில் தோகையையும், சகடு என்பது வண்டியையும் குறிக்கும்.

எப்படி மயில் தோகையைக் கொண்டு வள்ளுவர் இரும்பு அச்சை முறித்துக் காட்டியது நூற்றுக்கு நூறு உண்மையான செய்தி.என்னே அவரது அறிவுத் திறன்!

இக்குறளின் பொருள் மயில் தோகையையும் வண்டியையும் பற்றியதாக மட்டுமில்லை. வாழ்க்கையின் பல

திரு-4

துறைகளிலும் அது அடங்கியிருப்பதைக் கண்டு மகிழுங்கள்.

‘அளவுக்கு மீறினால் அச்சு முறிந்துவிடும்’ என்பதில் வண்டியும் சுமையும்தானா அடங்கியிருக்கின்றன. வாயும் உணவும்கூட அடங்கியிருக்கின்றன. சுவை மிகுதியினால் உணவை அதிகமாக உண்டுவிட்டால், அச்சு முறிவதைப் போல இவ்வுலக வாழ்வும் முறிந்துவிடும்’ என்ற கருத்தும் இதில் அடங்கியிருக்கிறது.

நட்புக்கும் அளவுண்டு. அளவுக்கு மீறி விடுமானால், அது நட்புக் கொண்ட உள்ளத்தையே முறித்துவிடும் என்ற கருத்தும் இதில் அடங்கியிருக்கிறது.

தன் நிலைமையை அறிந்து, வருவாயை உணர்ந்து, பொருளை எண்ணிச் செலவு செய்ய வேண்டும்.அளவுக்கு மீறிவிடுமானால், அச்சு முறிவதைப்போல அச்செல்வமும் முறிந்துவிடும் என்பதையும் அவர் கூறாமற் கூறியிருக்கிறார்.

அவைகளில் நிகழ்த்துகின்ற சொற்பொழிவும் ஒரு அளவோடு இருக்க வேண்டும். அது அளவுக்கு மீறி நீண்டுவிடுமானால், அச்சு முறிவதைப்போல அவையோர் உள்ளத்தை முறித்துவிடும் என்பதும் அக்குறளில் பொதிந்தே கிடக்கிறது.

மனைவியை, மக்களை, தம்பியை, தங்கையை அடக்கி வளர்க்க வேண்டியது தன் கடமை எனக் குடும்பத்தின் தலைவன் கருதுகிறான்.உண்மைதான்! என்றாலும், அது அளவுக்கு மீறிவிடுமானால், அச்சு முறிவதைப்போல, அது குடும்பத்தையே முறித்துவிடும் என்ற கருத்தும் இக் குறளில் இல்லாமலில்லை.

மாடிமீது கட்டப்படும் கட்டடங்களுக்கும் ஒரு அளவு இருக்க வேண்டும். அளவுக்கு மீறிவிடுமானால், அச்சு முறிவதைப்போல அவ்வீடும் முறிந்துவிடும் என்பதையும் அக்குறளில் அடக்கித்தான் வைத்திருக்கிறார்.

வேலை செய்யும் ஆட்களிடத்தில் தமது அதிகாரத்தைக் காட்டி மிரட்டுவதற்கும் ஒரு அளவு உண்டு. அளவுக்கு மீறி விடுமானால் அச்சு முறிவதுபோல அதிகாரமும் முறிந்துவிடும் என்ற கருத்தும், அதில் மறைந்துதான் காணப்படுகிறது.

தொழிலாளிகளின் உழைப்பிலிருந்து வருகின்ற வருமானத்தை அடைவதற்கும் ஒரு எல்லையிருக்க வேண்டும் அது அளவுக்கு மீறிவிடுமானால், மயில் தோகைகளின் கட்டுப்பாட்டினால் இரும்பு அச்சும் முறிந்து போவதுபோல “தொழிலாளர்களின் ஒற்றுமையினால் முதலாளித்துவமும் முறிந்துவிடும்” என்ற சமதர்மக் கொள்கையும் இதில் சார்ந்துதான் இருக்கிறது. அரசன் தன் குடிமக்களின் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கவேண்டும். அளவுக்கு மீறி விடுமானால் “சடசடவென்று” அச்சு முறிவதைப்போல, “ஜார் ஆட்சியாயிருந்தாலும் முறிந்துவிடும்” என்ற பொதுவுடைமைக் கொள்கையும், இக் குறளில் புகுந்து கொண்டுதான் இருக்கிறது.

கட்டுரை எழுதுவதற்கும் ஒரு அளவு இருக்கவேண்டும். அளவுக்குமீறி நீண்டுவிடுமானால், அச்சு முறிவது போல அது படிப்போரின் மனதையும் முறித்துவிடும் என்ற கருத்தும் இக் குறளில் அடங்கித்தான் இருக்கிறது.

வள்ளுவர் எப்படி? அவர் செய்த திருக்குறள் எப்படி? இக்குறள் எப்படி? இதில் கூறியுள்ள கருத்துக்கள் எப்படி? மயில் தோகை மற்றவர்களுக்குப் பயன்பட்டது எப்படி? திருவள்ளுவருக்குப் பயன்பட்டது எப்படி? இத்தகைய திருக்குறளைப் படிக்காமல் இருக்கிறோமே நாம் எப்படி?

“நமது நாடு தமிழ்நாடு. நமது மொழி தமிழ்மொழி. நமது வாழ்வும் வளமும் உரிமையும் உயிரும் தமிழ். நாம் தமிழர்கள். வள்ளுவர் நமது முன்னோரில் ஒருவர். குறள் நமது திருமறை” என்ற உணர்ச்சி நம் ஒவ்வொருவருக்கும் உண்டாகவேண்டும். இதற்காகத் தமிழ் நூல்கள் அனைத்தையும் படித்தாக வேண்டும். இன்றேல் திருக்குறள ஒன்றைாவது படித்துத் தீரவேண்டும். அதுவும் முடியாவிடில், திருக்குறளைப் படிக்கவேண்டும் என்ற ஆசையாவது இப்போது உண்டாக வேண்டும்.

வாழட்டும் தமிழ் நாடு!
வளரட்டும் தமிழ் மொழி!