கொல்லிமலைக் குள்ளன்/6

விக்கிமூலம் இலிருந்து

6

ங்கமணி எண்ணியபடியே பேராசிரியர் வடிவேலைக் கொல்லிமலைக் குள்ளன் சும்மா விட்டுவைக்கவில்லை. தங்கமணி முதலியவர்களைப் பரிசலில் ஏற்றி அக்கரைக் காட்டிற்கு அனுப்பிவிட்டதும் அவன் நேராகச் சத்திரத்திற்குச் சென்றான். அங்கு ஏதோ ஒரு துப்பறியும் நாவலைப் படித்துக் கொண்டிருந்த வடிவேலைச் சந்தித்தான்.

"உங்களிடம் ஒரு சிறு விபத்தைப்பற்றித் தெரிவிக்க வத்தேன். அது ஒன்றும் பெரிதில்லை. சின்னக் காயந்தான். ஆற்றிலே சிறுவர்கள் இரண்டு பேரும் ஒரு பாறையின்மீது ஏறி ஏறித் தண்ணீரில் குதித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு தடவை அப்படிப் பாறையில் ஏறும் போது சுந்தரம் கால் வழுக்கி விழுந்துவிட்டான். நெற்றியிலே கொஞ்சம் காயம் ஏற்பட்டுவிட்டது" என்று ஆங்கிலத்திலே சொன்னான்.

சுந்தரத்திற்குக் காயமா? ஏதாவது பலமாக அடிபட்டு விட்டதா?" என்று வடிவேலு கொஞ்சம் பரபரப்புடன் கேட்டார்.

"அப்படியொன்றும் பெரிதாக இல்லை. அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நான் என்னுடைய ஜாகைக்குக் குழந்தைகளை உடனே அழைத்துக்கொண்டு போனேன். அங்கே என்னுடன் வந்திருக்கும் மருத்துவரைக் கொண்டு தகுந்த சிகிச்சை செய்திருக்கிறேன். எல்லோருக்கும் அங்கேயே உணவும் ஏற்பாடு செய்துவிட்டேன். நீங்கள் பார்க்க வருவதானால் என் காரிலேயே என்னுடன் வரலாம்" என்று விரைவாக மறுமொழி சொன்னான்.

இந்தப் பேச்சையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வள்ளிநாயகி சமையல் அறையிலிருந்து வேகமாக வந்து, "போய்ப் பார்த்துவிட்டு அப்படியே எல்லாரையும் அழைத்து வாருங்கள். காயம் பலமோ என்னவோ !" என்று கூறினாள்.

"அப்படியொன்றுமில்லை. உங்களுக்குக் கவலை வேண்டாம். எல்லாரும் இப்பொழுது உணவருந்திக்கொண்டிருக்கிறார்கள்" என்று குள்ளன் மீண்டும் ஆங்கிலத்தில் தெரிவித்தான்.

 பேராசிரியர் குள்ளனோடு புறப்பட்டார். கார் கொஞ்ச தூரம் சென்றவுடன் மக்கள் நடமாட்டமில்லாத ஓர் இடத்திலே குள்ளனும் அவனுடன் காரிலே வந்திருந்த இரண்டு ஆள்களுமாகச் சேர்ந்து வடிவேலை ஒரு கயிற்றைக்கொண்டு கட்டிவிட்டார்கள். மூன்று பேர் திடீரென்று அவர் மீது பாய்ந்து பிடித்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் சத்தம் போடாதபடி ஒருவன் அவர் வாயில் துணியால் கெட்டியாக மூடிப் பிடித்துக்கொண்டான். இவ்வாறு சற்றும் எதிர்பாராத விதமாக வடிவேல் குள்ளனிடம் அகப்பட்டுவிட்டார்.

குள்ளன் இதோடு நிற்கவில்லை. வள்ளிநாயகிக்குக் கவலை உண்டாகாதவாறு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். வடிவேலைப் பத்திரமாக ஓர் இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்படி தன் ஆள்களிடம் ஏற்பாடு செய்துவிட்டுச் சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சத்திரத்திற்குத் திரும்பி வந்தான். வள்ளிநாயகி ஆவலோடு சுந்தரத்தைப்பற்றி விசாரித்தாள்.

"காயமெல்லாம் ஒன்றும் பிரமாதமில்லை. குழந்தைகள் எல்லாம் கொல்லிமலைக் காட்சிகளைக் காணப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் வடிவேல் அங்கே போய்ப் பார்க்க விரும்பினார். அவரை என் காரிலேயே அனுப்பி வைப்பதாகச் சொன்னேன். நீங்கள் எங்காவது வெளியிலே கோயிலுக்கோ மற்ற இடங்களுக்கோ செல்வதற்காக உங்கள் கார் இங்கேயே இருக்கட்டும் என்று அவர் தெரிவித்தார். குழந்தைகளும் அவரும் மாலை ஏழு எட்டு மணி சுமாருக்குத் திரும்பிவிடுவார்கள். இரவு உணவுக்கு இங்கேயே வருவதாகச் சொல்லச் சொன்னார்கள்" என்று ஆங்கிலத்திலேயே தெரிவித்துவிட்டு அவன் புறப்பட்டான்.

குள்ளனுடைய சூழ்ச்சி நல்ல பலன் அளித்தது. வள்ளிநாயகி அவன் கூறுவதை உண்மையென நம்பிக் கவலையின்றி இருந்தாள். கொல்லிமலைக் காட்சிகளைக் காணத் தன்னையும் ஏன் அழைத்துச் செல்லவில்லை என்ற ஐயம் அவளுக்கு அப்பொழுது ஏற்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/6&oldid=1100340" இலிருந்து மீள்விக்கப்பட்டது