கொல்லிமலைக் குள்ளன்/7

விக்கிமூலம் இலிருந்து

7

ரிசலிலிருந்து ஆற்று வெள்ளத்தில் குதித்த ஜின்கா உற்சாகமாகக் கரையை நோக்கி நீந்தியது. இருட்டாக இருந்தும் அது விரைவிலே மறு கரையை அடைந்துவிட்டது. பிறகு, அது சற்றும் நின்று பாராமல் சத்திரத்தை நோக்கித் தாவிச்சென்றது. வடிவேலையும் குழந்தைகளையும் எதிர் பார்த்த விதமாக வள்ளிநாயகி வெளித் திண்ணையிலே அமர்ந்திருந்தாள். ஜின்கா மட்டும் தனியாக அங்கே வருவதைக் கண்டு அவளுக்கு ஒருவகை அச்சமேற்பட்டது. அவள் அறைக்குள்ளே ஜின்காவை அழைத்துக்கொண்டு சென்றாள். கற்றாழை மடலில் எழுதியிருந்த கடிதத்தைக் கண்டாள். அவளுக்கு விஷயமெல்லாம் புரிந்துவிட்டது. கொல்லிமலைக் குள்ளன் பேராசிரியர் வடிவேலையும் சேர்த்து ஏமாற்றி விட்டதையும், அவரையும் குழந்தைகளையும் வஞ்சகமாகத் தன் வசப்படுத்தியிருப்பதையும் அறிந்து துடித்தாள்.

கொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே அவளுக்குப் புலப்படவில்லை. துக்கம் அப்படி அவளைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. அவள் கண்களிலே கண்ணீர் வழிந்தோடலாயிற்று.

ஆனால், சற்று நேரத்திலே அவளுக்கு ஒரு தெளிவு பிறந்தது. இவ்வாறு கவலைப்பட்டுக்கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்று அவளுக்குப் புலப்பட்டது. அதனால் அவள் உடனே செயலில் இறங்கினாள். தங்கமணிக்குக் கீழ்க்கண்டவாறு ஒரு கடிதம் முதலில் எழுதினாள்.

அருமைக் குழந்தைகளே,

நீங்கள் அனுப்பிய செய்தி கிடைத்தது. அந்தக் குள்ளன் அப்பாவையும் ஏமாற்றி எங்கோ அழைத்துக்கொண்டு போய்விட்டான். ஆனால் நீங்கள் தைரியமாய் இருங்கள். இப்பொழுதே ஒரு பரிசலில் சில போலீஸ் வீரர்களை உங்களுக்கு உதவி செய்ய அனுப்புகிறேன். அப்பாவைக் கண்டுபிடிக்கவும், குள்ளனைக் கைது செய்யவும் முயற்சி செய்கிறேன். போலீஸ் வீரரோடு காரிலேயே புறப்பட்டு, கொல்லி மலைக்கு மறுபக்கத்தில் உள்ள கூடல் பட்டணத்திற்கு நான் வந்து சேருவேன். அங்கே சந்திப்போம். கடவுளை நம்பி. தைரியத்தை விடாமல்
இருங்கள். உங்களுக்கு எவ்விதத் தீங்கும் நேராது. சுந்தரம் தன்னுடைய கேலிப் பேச்சினால் எல்லாருக்கும் தைரியமூட்டுவான் என்று நம்புகிறேன்.
உங்கள் அன்புள்ள,
வள்ளிநாயகி.

இவ்வாறு கடிதம் எழுதி, அதை மடித்து. ஓர் உருண்டையான சிமிழுக்குள் மடித்துப் போட்டு நன்றாக மூடினாள். ஜின்கா அதைத் தன் வாயில் போட்டு, கன்னத்தில் அடக்கிக் கொண்டு புறப்படத் தயாராயிற்று. ஆனால், அதைக் கொஞ்ச நேரம் தாமதிக்கும்படி வள்ளிநாயகி சைகை செய்தாள். ஒரு தட்டிலே அதற்கு வேண்டிய உணவுகளையெல்லாம் அவசரம் அவசரமாக எடுத்து வைத்தாள்.

"ஜின்கா, சாப்பிடாமல் நீ போகக்கூடாது. எத்தனை தூரம் நீ போக வேண்டியிருக்குமோ! ஆற்றில் நீந்தி நீந்திச் செல்லவும் வேண்டியிருக்கும். பசியோடு நீ போகக்கூடாது. நன்றாகச் சாப்பிடு" என்று அன்போடு கூறிக்கொண்டே அதைத் தட்டிக்கொடுத்தாள். ஜின்காவும் அவளுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டது. உடனே அந்த உருண்டைச் சிமிழைக் கீழே வைத்துவிட்டு வேகமாக உணவருந்தலாயிற்று. வள்ளிநாயகி ஒரு தாயின் அன்போடு அதைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

உணவு முடிந்ததும் உருண்டைச் சிமிழை வாயில் எடுத்துப் போட்டுக்கொண்டு, ஜின்கா ஆவலோடு வள்ளி நாயகியைப் பார்த்தது. வள்ளிநாயகி அதன் தலையைத் தன் கையால் வருடிக்கொண்டே, "ஜின்கா, இனி நீ போகலாம். உன்னால் தான் குழந்தைகளுக்குத் தைரியம் ஏற்பட வேண்டும்" என்று கூறினாள். ஜின்கா உற்சாகத்தோடு வெளியே பாய்ந்து புறப்பட்டது. வள்ளிநாயகி தானும் வேமாக உணவருந்திவிட்டு வெளியே புறப்படத் தயாரானாள். அப்பொழுது சமையற்காரப் பையனிடம், "யாராவது வந்து விசாரித்தால் நான் கோயிலுக்குப் போயிருப்பதாகச் சொல். கோயிலிலே அங்காளம்மனுக்கு இன்று விசேஷப் பூஜையெல்லாம் நடக்கிறது. அதைப் பார்த்துவிட்டு ரொம்ப நேரம் கழித்துத்தான்

கொ. ம. கு -3 திரும்புவேன் என்று சொல். நீ இங்கேயே இரு. எங்காவது வேடிக்கை பார்க்கப் போய்விடாதே" என்று கூறிவிட்டு, காரில் ஏறிக்கொண்டு புறப்பட்டாள். கார் ஓட்டத் தெரிந்திருந்தது இந்தச் சமயத்தில் அவளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.

முதலில் அவள் கோயிலுக்குச் சென்று அங்காளம்மனைத் தரிசித்துக்கொண்டாள். பிறகு, திருவிழா பந்தோபஸ்திற்காக வந்திருந்த போலீஸ் இலாகாவினர் தங்கியிருந்த முகாமிற்குச் சென்றாள். அங்கே ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருந்தார். அவருடன் வள்ளிநாயகி தனித்துப் பேசி நிலைமையை விளக்கினாள். போலீஸ் இன்ஸ்பெக்டர் உடனே செயலில் இறங்கினார். முதலில் பரிசல் தள்ளுவதில் வல்லவர்களான இரண்டு பேரை ஏற்பாடு செய்து அவர்களோடு மூன்று போலீஸ் ஜவான்களையும் ஒரு பரிசலில் ஏற்றி அனுப்பினார். "அந்தக் குழந்தைகள் ஏறியுள்ள பரிசலைக் கண்டுபிடித்து அவர்களை உங்களுடைய பரிசலிலேயே அழைத்துக்கொண்டு கூடல் பட்டணம் போய்ச் சேருங்கள். அதற்குள் நாங்களும் தரை மார்க்கமாக அங்கு வந்து சேருவோம்" என்று கூறிவிட்டு அவர் பரிசலை வேகமாக விடுமாறு ஆணையிட்டார்.

பிறகு, வள்ளி நாயகியின் யோசனைப்படி சிலரைக் கொல்லிமலைக் குள்ளனைப்பற்றி அறிந்துகொள்ளவும் பேராசிரியர் வடிவேல் இருக்குமிடத்தை அறியவும் ஏவி விட்டார். அவரும் வள்ளிநாயகியோடு காரிலே புறப்பட்டார். நான்கு போலீஸ் ஜவான்களும் துப்பாக்கிகளுடன் உடன் சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/7&oldid=1100350" இலிருந்து மீள்விக்கப்பட்டது