கொல்லிமலைக் குள்ளன்/8

விக்கிமூலம் இலிருந்து

8

ரவு எட்டு மணி சுமாருக்கு வடிவேலும் குழந்தைகளும் திரும்பி வந்துவிடுவார்கள் என்று கொல்லிமலைக் குள்ளன் வள்ளிநாயகியிடம் தெரிவித்திருந்தானல்லவா? அதன்படி அவர்கள் வராததால் அவள் கவலைப்பட்டுப் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிடுவாளோ என்று குள்ளன் ஐயம் கொண்டான்.

வள்ளிநாயகியையும் சூழ்ச்சியால் கைப்பற்றி எங்காவது ஓர் இடத்திற்குக் கொண்டுபோய் வைத்துவிடலாமா என்றும் அவன் நினைத்துப் பார்த்தான். ஆனால், அவளை அப்படிப் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவனுக்குத் தோன்றியது. வடிவேலும் குழந்தைகளும் வராததற்கு ஏதாவது தகுந்த காரணம் ஒன்றைச் சொல்லிவிட்டால் அவன் திருப்தியடைந்துவிடுவாள். எதற்காக அவளையும் பிடித்து வைக்க வேண்டும்? அவளை நம்பும்படி செய்வது எளிது என்று குள்ளன் கருதினான். அதற்கான திட்டமொன்றை மனத்தில் உருவாக்கிக்கொண்டு சத்திரத்தை நோக்கிப் புறப்பட்டான். அங்கே வள்ளிநாயகி இல்லாதிருந்தது முதலில் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. பிறகு, அவன் மனத்தைச் சமாதானப்படுத்திக்கொண்டு சமையற்காரப் பையனிடம், "பேராசிரியர் கொல்லிமலையின் இடையிலே ஓடும் வஞ்சியாற்றின் வழியாகப் பரிசலில் சென்று பார்க்க வேண்டுமென்று சொன்னார். அதற்கு நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். மாலை நேரத்தில் புறப்படும் போது சுற்றியுள்ள காட்சி மிக அழகாக இருந்தது. அதையெல்லாம் பார்க்கவேண்டுமென்று குழந்தைகள் மிகவும் பிரியப்பட்டார்கள். அதனால் அவர்களையும் பேராசிரியர் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். ஆற்று வழியாகக் கூடல் பட்டணம் வரை சென்றுவிட்டு, வர மூன்று நாள்களாகுமாம். அதுவரை அம்மாளையும் உன்னையும் இங்கேயே இருக்கும்படி தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார். கொல்லிமலைச் சாரலிலிருந்து திரும்பி இங்கு வந்துவிட்டுப் போக நேரமில்லை. இதை அம்மாளிடம் சொல்லிவிடு" என்று அவன் சொன்னான்.

இப்படிக் கூறியதோடு அவன் திரும்பிப் போய்விடவில்லை. "மூன்று நாளைக்கு எல்லோருக்கும் வேண்டிய துணி மணிகளை வாங்கி வரும்படி என்னிடம் சொன்னார். இப்பொழுது அவை வேண்டும். நான் மற்றொரு பரிசலிலே அவற்றை அனுப்ப வேண்டும்! மிகவும் அவசரம்" என்று அவன் சொன்னான். அவன் வார்த்தையை நம்பிச் சமையற்காரப் பையனும் வேண்டிய துணிமணிகளை ஒரு சிறிய தோல் பெட்டியில் வைத்துக் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு கொல்லிமலைக் குள்ளன் அவ்விடத்திலிருந்து வேகமாகப் புறப்பட்டான்.

தங்கமணி முதலியவர்களை வஞ்சியாற்றின் மறு கரையிலுள்ள காட்டிலிருந்து வேறு இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்பது அவனுடைய அடுத்த திட்டம். அவர்களையும் வேறு இடத்தில் இரண்டு மூன்று நாள்களுக்கு யாருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டால் அவனுடைய காரியம் வெற்றியோடு முடிந்துவிடும். அந்த இடத்திலிருந்து நடராஜ சிலையோடு அடுத்த நாளே பம்பாய்க்குப் போய், அங்கிருந்து எகிப்து, ரோம் வழியாக அமெரிக்கா செல்ல அவன் ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தான். அதற்கு வேண்டிய விமானப் பிரயாணச் சீட்டுகளும் வாங்கியிருந்தான். அப்படி அவன் சென்றுவிட்டால் அவனை யாருமே பிடிக்க முடியாது. யார் அந்த நடராஜ சிலையைக் களவு செய்தார்கள் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது. இதுதான் அவனுடைய திட்டம்.

தனது ஜாகைக்குச் சென்றதும் இரண்டு ஆள்களை ஒரு பரிசலில் சென்று தாழிவயிறனையும் தங்கமணி முதலியவர்களையும் அழைத்து வரும்படி சொன்னான். அவர்கள் உடனே புறப்பட்டுச் சென்றனர். ஆனால், கொல்லிமலைக் குள்ளன் எதிர்பார்த்தபடி அவர்கள் மற்றவர்களோடு விரைவில் திரும்பவில்லை. "ஏன் இவ்வளவு நேரமாகிறது? அக்கரைக் காட்டிற்குப் போய்விட்டுவர முக்கால் மணிக்கு மேல் பிடிக்காதே?" என்று அவன் கொஞ்சம் பதட்டத்தோடு எண்ணிக்கொண்டு தன் ஜாகையின் முன்னால் உலாவிக் கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில் ஆள்கள் தாழிவயிறனோடு திரும்பி வந்தார்கள். தங்கமணி முதலியவர்களைக் காட்டில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றும், பரிசலைக் காணாததால் அவர்கள் தாழிவயிறன் தூங்கிக்கொண்டிருக்கிற சமயம் பார்த்துப் பரிசலில் ஏறிக்கொண்டு ஆற்றின் வழியாகவே போயிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள். தாழிவயிறன் மேல் கொல்லிமலைக் குள்ளனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவனை வாய்க்கு வந்தவாறெல்லாம் திட்டினான். தாழிவயிறனையும் மற்ற இருவரையும் உடனே ஒரு பரிசலில்

 ஏறிப்போய்க் குழந்தைகளைத் தேடிப் பிடிக்க வேண்டுமென்றும் ஆணையிட்டான். "உடனே புறப்படுங்கள். பரிசலை வேகமாகச் செலுத்தி அந்தப் பயல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களோடு கொல்லிமலைக்கு அப்பால் உள்ள நமது தச்சுப்பட்டறைக்கு வந்து சேருங்கள். அங்கேயே அவர்களைப் பத்திரமாக யார் கண்ணிலும் படாமல் வைத்திருங்கள். ஜாக்கிரதை” என்று சொல்லி அவர்களை விரட்டி அனுப்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/8&oldid=1100355" இலிருந்து மீள்விக்கப்பட்டது