கொல்லிமலைக் குள்ளன்/17

விக்கிமூலம் இலிருந்து
17

ங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் ஆற்றின் மறுகரையில் உள்ள காட்டிலிருந்து தாழிவயிறன் தூங்குகிற சமயத்தில் பரிசலிலே தப்பிப்போன செய்தியறிந்ததும் தாழிவயிறனையும், மற்றொருவனையும் அவர்களைப் பிடிக்க மற்றொரு பரிசலில் குள்ளன் அனுப்பினானல்லவா? அன்றிரவு முழுவதும் அவன், இனிமேல் தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி யோசனை செய்து. திட்டமிட்டுக்கொண்டிருந்தான். தங்கமணி முதலியவர்களைத் தாழிவயிறன் மீண்டும் பிடித்துவிடுவான் என்று அவன் உறுதியாக நம்பினான். அடுத்த நாள் காலை நேரத்திற்குள் அவர்கள் பிடிபட்ட சேதி தனக்குக் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தான். அப்படிச் செய்தி கிடைத்திருந்தால் அந்த நிலைமையில் என்ன செய்வது என்று அவன் முடிவு செய்து வைத்திருந்தான்.

ஆனால், அவன் எதிர்பார்த்தபடி மறு நாள் காலை ஒன்பது மணிவரையிலும் யாதொரு தகவலும் கிடைக்கவில்லை. அதனால் அவன் தனது திட்டத்தையே மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. இனிமேலும் காலதாமதம் செய்தால் தனக்கு ஆபத்து நேரலாம் என்று அவனுக்குப் பட்டது. அதனால் அவன் வேகமாக எல்லாம் செய்யலானான். தான் கட்டிப்பிடித்து வைத்திருக்கும் பேராசிரியர் வடிவேலையும் பரிசலில் ஏற்றிக்கொண்டு முதலில் வஞ்சியாற்றின் வழியாகத் தச்சுப் பட்டறைக்குப் போக வேண்டுமென்பது அவனது திட்டம். வழியிலே தாழிவயிறனையும், அவன் பிடித்து வைத்திருக்கும் தங்கமணி முதலியவர்களையும் சந்திக்க முடிந்தாலும் அவர்களையும் தச்சுப்பட்டறைக்குக் கொண்டு செல்ல விரும்பினான். பேராசிரியரையும், சிறுவர்களையும் தச்சுப்பட்டறையில் ரகசியமாகப் பூட்டி வைத்துவிட்டு, கொல்லிமலையிலுள்ள ரகசியக் குகைக்குச் சென்று, தான் திருடிய நடராஜர் சிலையை எடுத்துக்கொண்டு முதலில் பஞ்சாபிற்குச் செல்வதென்றும், அங்கிருந்து தரை வழியாகக் காபூல் சென்று, அங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்வதென்றும், அந்தச் சிலையை ஏராளமான பணத்திற்கு விற்று விட்டு ரகசியமாக எங்காவது வாழ்வதென்றும் அவன் முடிவு செய்துகொண்டான். தங்கமணி தன்னை யாரென்று கண்டு கொண்டது பெருந்தொல்லையாக இருந்தது. ஆனால், கொலைக் குற்றம் புரிய அவன் அப்பொழுது துணியவில்லை. தான் தப்பிப்போகும் வரையில் அவர்களையெல்லாம் பாதுகாவலில் வைப்பதென்றும், தப்பிய பிறகு இது போன்ற திருட்டுத் தொழிலை நடத்துவதில்லை என்றும் அவன் முடிவு செய்துகொண்டான். இப்போதே அவன் பணம் ஏராளமாக வெளிநாடுகளில் வைத்திருந்தான். நடராஜர் சிலை விற்பதிலும் நிறையப் பணம் கிடைக்கும். அவற்றை வைத்துக்கொண்டு எங்கேயாவது நிம்மதியாக வாழ்வதென்று அவன் எண்ணினான்.

அடுத்த நாள் காலை சுமார் ஒன்பது மணிக்கு மற்றொரு பரிசல் தயாராக, யாருமில்லாத இடத்திலே, வஞ்சியாற்றுக் கரையில் நின்றது. கொல்லிமலைக் குள்ளனின் ஆள்களில் ஐந்து பேர், பேராசிரியர் வடிவேலைப் பரிசலுக்குத் தூக்கி வந்தார்கள். அவருடைய கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அவரை அவர்கள் பரிசலில் கிடத்திவிட்டுத் தாங்களும் ஏறிக் கொண்டனர். கொல்லிமலைக் குள்ளன் பிறகு வந்து பரிசலில் ஏறினான். பரிசல் உடனே வேகமாகச் செல்லத் தொடங்கிற்று. அந்த ஆள்கள் ஐந்து பேருக்கும் துடுப்புப் போட நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் மாறி மாறித் துடுப்புப் போட்டதால் பரிசல் வேகமாகச் சென்றது. குள்ளன் யாரிடமும் பேசவேயில்லை. ஆற்றின் பரப்பையும், கரைகளையும் மட்டும் கூர்ந்து கவனித்து வந்தான், தாழிவயிறனுடைய பரிசல் கண்ணுக்குப் படுமா என்று பார்த்துக்கொண்டிருந்தான். கரையிலே எங்காவது தங்கமணி முதலியவர்களைத் தாழிவயிறன் பிடித்து வைத்திருக்கிறானா என்று தெரிந்துகொள்வதே அவன் நோக்கமாயிருந்தது. ஆனால், அவன் எதிர்பார்த்தபடி அவர்களையோ, பரிசலையோ அங்குக் காண முடியவில்லை. பரிசல் வஞ்சியாற்றின் வழியாக மலைக்கணவாயில் நூலேணி

 இருக்கும் இடத்திற்கு வந்தது. எதிர்பாராத விதமாக நூலேணி கீழே தொங்கிக்கொண்டிருப்பதைத் தொலைவில் வரும் போதே அவன் கண்டு திகைப்படைந்தான். அது வழக்கமாக மேலே இழுக்கப்பட்டுச் சுருட்டிவைக்கப்பட்டிருக்கும். அது எதற்காகத் தொங்கிக்கொண்டிருக்கிறது என்று அவன் மலைத்தான். அதற்குள் பரிசல் நூலேணிக்குச் சற்று அருகில் வந்துவிட்டது, அங்கே கரையில் ஒரு பரிசல் இழுக்கப்பட்டுக் கிடப்பதையும் கண்டு மேலும் அவன் திகைப்படைந்தான். உடனே அவன் பரிசலை அங்கு நிறுத்தும்படி கட்டளையிட்டான்.

பரிசல் நின்றதும் கொல்லிமலைக் குள்ளன் கீழே இறங்கி விரைந்து சென்று, அங்கே இருந்த பரிசலை உற்றுக் கவனித்தான். தாழிவயிறன் தங்கமணி முதலியவர்களைத் தேடிப் பிடிக்க அனுப்பப்பட்ட பரிசல் அதுவல்லவென்றும், அப்பரிசல் தங்கமணி முதலியவர்களைக் காட்டிற்கு ஏற்றிச் செல்ல உதவிய பரிசலென்றும் அவனுக்குத் தெரிந்தது; அது அவனுக்கு மேலும் ஆச்சரியத்தையும், திகைப்பையும் உண்டாக்கிற்று.

அதனால் தான் அவன் தன் ஆள்களை அங்கேயே இருக்கும்படி செய்துவிட்டு, நூலேணி வழியாக மலைக்கு மேலே வந்தான். தில்லை நாயகம் சமையல் செய்யும் குகையில் யாருமில்லாததைக் கண்டு அவன் தனது ரகசியக் குகையை நோக்கி வேகமாகப் புறப்பட்டான். அப்படிப் புறப்பட்டு வந்துதான் அவன் தங்கமணி முதலியவர்களை உட்குகையில் கண்டான். பின்பு அவன் மூர்ச்சையுற்று விழுந்ததுவரை நடந்த நிகழ்ச்சிகளை முன்னமேயே அறிவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/17&oldid=1101626" இலிருந்து மீள்விக்கப்பட்டது