இந்தியக் கலைச்செல்வம்/தென்னிந்தியக் கோயில் அமைப்பும் பண்பாடும் - கோயில்கள்

விக்கிமூலம் இலிருந்து
13
தென்னிந்தியக் கோயில்
அமைப்பும் பண்பாடும் - கோயில்கள்

னது நண்பர் ஒருவர் பழநிமலை அடிவாரத்தில் குடி இருக்கிறார். அவருக்குப் பழநி ஆண்டவனிடத்திலே நிறைந்த பக்தி. ஒவ்வொரு ஆண்டும் வருஷப் பிறப்பன்று விழித்ததும் முதன் முதல் கண்டு தொழ விரும்புவது பழநி ஆண்டவனையே. அதற்காக, அவர் அன்று படுக்கையை விட்டு அதிகாலையிலேயே எழுந்து ஸ்நானம் எல்லாம் முடித்து விட்டு சுற்றி வரும்போதும், கோயிலுக்குள் நுழைந்து சந்நிதியில் சென்று உட்காரும்போதும் குனிந்து கொண்டே இருப்பார். தலை நிமிரமாட்டார். கண்ணைக்கூட அகல விழிக்காமல் மூடிக் கொண்டேதான் நடப்பார். வலம் வருவார். அர்த்தமண்டப வாயில் திறப்பது வரை இப்படியே இருந்து கதவு திறந்ததும் கண்விழித்து ஆண்டவனைக் கண் குளிரத் தரிசிப்பார். நாம் எல்லாம் நண்பரைப் போல அத்தனை பக்தி உடையவர்கள் அல்ல என்றாலும் கோயில்களுக்குத் தினசரி செல்வோம். இறைவன் சந்நிதியையும் அடைவோம்.

கற்பூர ஆரத்தியைக் கண்டு களிப்போம். இறைவன் திருக்கோலத்தில் ஈடுபட்டு நின்று திரும்பி வீடு வந்து சேர்வோம். இப்படியெல்லாம் கோயிலுக்குப் போய் வரும் நாம் விழித்த கண் விழித்தபடியே நடந்தாலும் கோயிலின் அமைப்பை உற்று நோக்கமாட்டோம். அங்குள்ள கலைச் செல்வங்களைக் கண்டு களிக்கமாட்டோம். சிற்ப வேலைப்பாடுகளைக் கண்டு அதிசயித்து நிற்கமாட்டோம்: பழநி அன்பரைப்போல் இறைவனிடம் பக்தி செலுத்தும் ஒரே ஆர்வத்தோடே வந்து வணங்கிச் சென்று திரும்பி விடுவோம். இரண்டாயிரம் வருஷ காலமாக ஊறி நிற்கும் பண்பாட்டில் வளர்ந்துள்ள கோயில்களுக்குச் சென்றால், அந்தக் கோயில் அமைப்பு எப்படி இருக்கிறது; அங்கு என்ன என்ன மூர்த்திகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்; கோயிலின் மண்டபங்கள், விமானங்கள், ஸ்தூபிகள், தூண்கள் எல்லாம் எக்காலத்தில் யாரால் கட்டப்பட்டிருக்க வேண்டும்; அவை சொல்லும் கதைகள் என்ன என்றெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? தமிழர்களாகிய நாமெல்லாம் கோயில்களின் அமைப்பிலும் அவை வளர்த்த பண்பாட்டிலும் அக்கறை காட்டவே இந்தப் பேச்சுத் தொடர். குடைவரைக் கோயில்கள் தவிர மற்றைய கோயில்களைப் பற்றியே இன்றைய பேச்சு.

பல்லவ மன்னர்களான மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் முதலியோர் மலைகளைக் குடைந்தும், பெரும் பாறைகளை வெட்டிச் செதுக்கியும் குடைவரைகளை அமைத்தார்கள் என்று கண்டோம். அவர்கள் வாழ்ந்த அதே ஏழாம் நூற்றாண்டின் இறுதியில், கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி கோயில் கட்டடக் கற்றுக் கொண்டார்கள் தமிழ் மன்னர்களும், தமிழகத்துச் சிற்பிகளும். இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மன் காலத்தில் இந்தக் கற்றளிகள் அமைக்கும் முறையில் வல்லவர்களாக இருக்கிருக்கிறார்கள் தமிழர்கள். மாமல்லபுரத்திலே கடற்கரைக் கோயில் ஒன்று பிரசித்தமாக இருக்கும், அந்த ஜலசயனர் கோயில் நல்லதொரு கற்றளி. அதேபோல, காஞ்சியில் ஊருக்கு மேற்கேயுள்ள பல்லவர் மேட்டில் கட்டியிருக்கும் கைலாசநாதர் கோயிலும் இந்தக் கற்றளிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதைப்போலவே செஞ்சித் தாலுக்காவிலே பனை மலை என்னும் இடத்திலே அமைக்கப்பட்டிருக்கும் கற்கோயிலும்; பல்லவ மன்னர்கள் அமைத்த கற்றளிகளில் ஒன்று. இந்தப் பல்லவ மன்னர்கள் அமைத்த கற்றளிகளைப் பார்த்தே பின் வந்த சோழ மன்னர்களான ராஜராஜனும், அவன் மகன் ராஜேந்திரனும் அற்புதமான கற்றளிகளைத் தஞ்சையிலும் கங்கை கொண்ட சோழீச்சுரத்திலும் கட்டியிருக்கிறார்கள், இவர்கள் பரம்பரையிலே வந்த இரண்டாம் ராஜராஜன், திரிபுவனச் சக்கரவர்த்தி முதலியவர்கள் தாராசுரத்தில் ஐராவதேஸ்வரருக்கும், திரிபுவனத்தில் கம்பகரேஸ்வரருக்கும் நல்ல அழகான கற்றளிகள் அமைத்திருக்கிறார்கள். சோழ மன்னன் கட்டிய கோயில் என்றால் உபானம் முதல் ஸ்தூபி வரை கல்லாலேயே கட்டப்பட்டிருக்கும் என்பது பிரசித்தம்.

இப்படிக் கோயில்களை எல்லாம் கல்லாலேயே கட்டினார்கள், அன்றைய தமிழர்கள். கோயில்களை எப்படி அமைத்தார்கள் என்று தெரிய வேண்டாமா? பாரத நாட்டின் கோயில் கட்டிடக் கலையை மூன்று பிரிவாகக் கூறுவார்கள. நாகரம், வேசரம், திராவிடம் என்று. நாகரம், என்னும் முறை இந்தியாவில் நருமதை ஆற்றிற்கு வடக்கே நின்றிருக்கிறது. அடி முதல் முடிவரை நான்கு பட்டைச் சதுரமாக கோயில்களை அமைப்பதே இம்முறை. இந்த முறை தமிழ்நாட்டிற்கு வரவே இல்லை. தரை அமைப்பிலும் கட்டிட அமைப்பிலும் விமான அமைப்பிலும் வட்ட வடிவமாக அல்லது நீண்ட அரை வட்ட வடிவமாக அமைப்பதே வேசரம். இம்முறையை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கையாண்டிருக்கிறார்கள். அரங்கத்து அரவணையான் கர்ப்பக்கிரஹம், உத்தரங்கம் என்னும் பள்ளி கொண்டான் கர்ப்பக்கிருஹம் எல்லாம் பிரணவாகாசமாக அமைந்திருப்பதை அறிவோம். இங்குள்ள விமானங்கள், இன்னம்பர் முதலிய கோயில்களில் உள்ள விமானங்கள் கஜப்பிரஷ்டம் என்னும் முறையிலே அரை வட்டமாக அமைந்திருப்பதையும் பார்த்திருக்கிறோம். இவைகள் வேசர முறையில் கட்டப்பட்ட கோயில்கள் என்று கூறலாம். திராவிட முறையில் அமைக்கப்பட்ட கோயில்களே வடக்கே கிருஷ்ணாவிலிருந்து தெற்கே குமரி வரை நிறைந்திருக்கக் காண்கிறோம். இக்கோயில்கள் எல்லாம் பெரும்பாலும் கிழக்கே பார்த்த கோயில்களாகவே இருக்கும். ஒரு சில கோயில்கள் மேற்கு நோக்கியும் இருப்பதுண்டு. இக்கோயில்களில் பெரும்பாலும் கர்ப்பகிருகம் சதுர அமைப்புடையதாகத்தான் இருக்கும். இக்கர்ப்பக் கிருகத்தை அடுத்த அர்த்த மண்டபம் நீண்ட சதுர வடிவினதாக இருக்கும். பல்லவ மன்னர்கள் காலத்தில் கருவறையுடனும் அர்த்த மண்டபத்துடனும் நின்ற கோயில்களில், பின்னர் பலபல மண்டபங்கள் எழுந்திருக்கின்றன. இப்படித்தான் கோயில்கள் விரிவடைந்திருக்கின்றன.

இப்படி வளர்ந்த கோயில் அமைப்பில், குடைவரை கற்றளிகளுக்குப் பின் மாடக் கோயில்கள் உருவாகி இருக்கின்றன. இவைகளில் சில பல்லவர் காலத்திற்கு முன்னும் எழுந்ததுண்டு. அவை செங்கல்லால் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அழிந்து சிதைந்திருக்கின்றன. பல்லவர்களுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள், நாயக்க மன்னர்கள், இந்த மாடக் கோயில்களைப் புதுப்பித்திருக்கின்றனர். மாடிபோல் அமைந்தவை மாடக் கோயில்கள். ஒன்றின் மேல் ஒன்றாக ஒன்பது நிலையுள்ள மாடக் கோயில்களைப் பற்றி சிற்ப நூல்கள் கூறுகின்றன. என்றாலும் தமிழ் கத்தில் மூன்றடுக்குக்கு மேற்பட்ட மாடக் கோயில்கள் இல்லை. சில ஒன்றிரண்டு நிலைகளோடும் நின்றிருக்கின்றன. சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள திருநாங்கூர் மணிமாடக் கோயிலைப் பற்றியும், நாச்சியார் கோயில் என்ற திருநறையூர் மாடக் கோயிலைப் பற்றியும் திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

செம்பியன் கோச்செங்கணான்
சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம்
சேர்மின்களே!

என்பதுதான் திருமங்கை மன்னன் பாசுரம். இன்னும் ஆடுதுறைக்குத் தென் கிழக்கே ஐந்து ஆறு மைல் தொலைவில் உள்ள வைகல் என்னும் ஊரில் ஒரு மாடக் கோயில் இருக்கிறது. வைகல் மாடக் கோயில் என்றே அக்கோயிலுக்கு பெயர் ஏற்பட்டிருக்கிறது. இக்கோயிலும் கோச்செங்கட் சோழன் கட்டினதே என்று சம்பந்தர் கூறுகிறார்,

கொம்பியல் கோதைமுன்
அஞ்ச, குஞ்சாத்
தும்பிய துரி செய்த
துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலை சூழ்
வைகல் மேற்கத்திசை
செம்பியன் கோச் செங்
கணான் செய் கோயிலே

என்பது சம்பந்தர் தேவாரம். இப்படி ஏழாம் நூற்றாண்டிற்கு முன் கட்டப்பட்ட மாடக் கோயில்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டே மாமல்லபுரத்தில் அர்ச்சுன ரதம், தருமராஜ ரதம், சகாதேவ ரதம் எனப்படும். கற்றளிகளை அமைத்திருக்கிறான் பல்லவ நரசிம்மவர்மன். கற்றளிகளாகக் கட்டப்பட்ட மாடக் கோயில்கள் இரண்டு பின்னர் உருவாகி இருக்கின்றன. ஒன்று காஞ்சியில் வைகுண்டப் பெருமாள் கோயில் என்னும் பரமேசுவர விண்ணகரம். மற்றொன்று உத்திரமேரூரில் உள்ள சுந்தரவரதப் பெருமாள் கோயில். இரண்டுமே மூன்று நிலை மாடக் கோயில்கள்; காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயிலைக் கட்டியவன் பரமேசுவர வர்மன். உத்திரமேரூர் சுந்தரவரதர் கோயிலைக் கட்டியவன் நந்தி வர்மன். இருவரும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவ அரசர்கள்.

இப்படி குடைவரை, கற்றளி, மாடக்கோயில் என்றெல்லாம் வகைப்படுத்தும் முறை ஒருபுறம் இருக்க, நாவுக்கரசர் ஒரு புதிய முறையை அவரது அடைவுத் திருத்தாண்டகத்தில் குறித்திருக்கிறார்.

பெறுக்காறு சடைக்கணிந்த
பெருமன் சேரும் பெருங்கோயில்
எழுபதினோடு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில் சூழ்
ஞாழல் கோயில், கருப்பறில்
பொருப்பனைய கொடுடிக் கோயில்
இருக்கோதி மறைவர்கள்
வழிபட்டு ஏத்தும் இளங்கோயில்
மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவன் உறையும்
கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்சத்
தீவினைகள் தீரும் அன்றே?

என்பது அப்பர் பாடல். இந்தத் தேவாரப் பாடலிலே சோழன் செங்கணான் கட்டிய மாடக் கோயில்களைக் குறிப்பதோடு, கரக்கோயில் ‘ஞாழற் கோயில், கொடுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்’ என்று ஆறுவகைக் கோயில்களைக் கூறுகிறார். இந்த ஆறு வகைக் கோயில்களையே சில்ப நூல்களில் விஜயம் ஸ்ரீபோகம், ஸ்ரீவிலாசம். ஸ்கந்த காந்தம், ஸ்ரீகரம், ஹஸ்தி பிருஷ்டம், கேசரம் என்று வடமொழிப் பெயரிட்டு கூறப்பட்டிருக்கிறது. இவைகள் எவை, எவை என்று நிர்ணயிக்கும் ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடாக இல்லை.

கோயில் கட்டிடக் கலை சோழ மன்னர்கள் காலத்தில் நாளும் வளர்ந்து, நாயக்க மன்னர் காலத்தில் விரிந்து பின்னர் தேய்ந்திருக்கின்றன என்று சொல்லி காலவரையறை கணக்கிட்டுவிடலாம். தென் தமிழ்நாட்டுக் கோயில்களின் காலத்தை, அங்குள்ள மண்டபங்களை, அந்த மண்டபங்களில் நிற்கும் தூண்களை, அத்தூண்களில் உள்ள பொதிகைகளை வைத்தே நிர்ணயித்தல் கூடும். இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக இச்சுருங்கிய நேரத்தில் நான் பேச விரும்பவில்லை. கோயில் கட்டிடம் உள்ள உறுப்புகள் அதன் பெயர்கள் எல்லாம் பற்றி சாதார்ண் மக்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறவன் நான். நீண்டுயர்ந்த மலையைக் கண்டு எப்படி கோபுரம் அமைக்க விரும்பினானோ அதுபோல மனிதனது உடல் உருவ் அமைப்பைப் பார்த்தே கோயிலை நிர்ணயிக்க முனைந்திருக்கிறான் அவன். நீண்டு நிமிர்ந்த பெருங்கோயில் உறுப்புகள் நல்ல தமிழில், அடி, உடல், தோள், கழுத்து, தலை, முடி என்று ஆறாகும். இதையே சிற்ப சாஸ்திரத்தில் அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி என்று நீட்டி முழக்கி வடமொழியில் சொல்வார்கள், நல்ல கரை அமைப்பே அடி. இதனையே அதிஷ்டானம், மசூரகம், ஆதாரம், தலம், பூமி என்றெல்லாம் கூறுவர். இந்த அடிமேல் எழுந்த உடலே கருவறை, இதனையே கால், பாதம், ஸ்தம்பம், கம்பம் என்று கூறுவார்கள். கருவறையையே திருஉண்ணாழி என்று கல்வெட்டுகளில் குறித்திருக்கும். இந்த கருவறையின் மீது நிற்பதே தோள் என்னும் பிரஸ்தரம், மஞ்சம், கபோதம் எல்லாம். அதற்கும் மேலே கண்டம், களம் கர்ணம் எனப்படும் கழுத்து. இதன்மேலே இருக்கும் ஸ்தூபியே முடி. இவைள் எல்லாம் என்ன என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிகள் உண்டு.

இன்னும் இந்த உறுப்புகளை ஒட்டிய பல பகுதி கள் பல பெயர்களில் விளங்கும். திருஉண்ணாழி என்னும் கருவறைச் சுவரின் வெளிப் பக்கத்திலே கோஷ்ட பஞ்சரம், கும்ப பஞ்சரம் எனும் மாடக் குழிகள் அமைக்கப்படும். கருவறை, அர்த்தமண்டபம் இரண்டையும் சுற்றி ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள். இவைகளில் கணபதி, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை உருவங்கள் இருக்கும். கோஷ்ட பஞ்சரத்திலே இந்தத் தெய்வத்திருஉருவங்களை அமைக்கும் வழக்கம் சோழ மன்னர்கள் காலத்திலேதான் ஆரம்பித்திருக்க வேண்டும். கோஷ்ட பஞ்சரங்களுக்கு இடையிடையே கும்ப பஞ்சரம். அடியில் குடமும் மேலே சிற்ப வேலையோடு கூடிய கொடியும் இருக்கும், தோள் என்னும் பிரஸ்தாரத்தின் மேலே கர்ணக் கூடு பஞ்சரம். சாலை என்னும் உறுப்புகள், இவைகளின் அமைப்பை எல்லாம் விவரிப்பதைவிட கோயிலுக்குச் செல்லும்போது நேரே பார்த்துத் தெரிந்து கொள்ளுதல் நலம்.

கோயிலுக்குள் இருக்கும் மற்ற பரிவார ஆலயங்களைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள், பத்தாம் நூற்றாண்டில் சோழன் விஜயாலயன் காலத்திற்குப் பின்தான் சிவன் கோயில்களில் அம்பிகைக்கு என்று தனி ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு முந்திய காலத்தில் அம்பிகைக்கு என்று தனிக் கோயில்கள் இருக்கவில்லை. காஞ்சியில் உள்ள அத்தனை சிவன் கோயில்களுக்கும் இன்றும் அம்பிகை சந்நிதி கிடையாது. எல்லோருக்கும் சேர்த்து ஒரே அம்பிகையாய், ஒப்பற்ற அம்பிகையாய், தனிக் கோயிலில் இருப்பவள்தான் அன்னை காமாட்சி. சோழ மன்னர்கள் காலத்தில்தான் அம்பிகைக்கு தனி சந்நிதி அமைத்தார்கள். முதலில் பிரதான கோயிலிலேயே ஒரு சிறு கோயில் கட்டி தெற்கே பார்க்க நிறுத்தினார்கள். அதன்பின் எப்படியோ அம்பிகைக்கு இறைவன் வலப்பக்கத்திலே கட்டினார்கள். செய்த தவறை உணர்ந்து பின்னர் அநேகமாக எல்லாக் கோயில்களிலும் இறைவனுக்கு இடப்பக்கத்திலேயே அம்பிகைக்குப் பெரிய கோயிலையும் கட்டி முடித்திருக்கிறார்கள். சோழர்கள் காலத்தில் இறைவனுக்கு இடப்பக்கத்தில் இருந்த அம்பிகை நாயக்க மன்னர்கள் காலத்திலே திரும்பவும் வலப்பக்கத்திற்கே வந்து கோயில் கொண்டிருக்கிறாள். பெரிய சிவன் கோயில்களிலே ஆதியில் முருகன், கணபதி முதலியவர்களுக்குத் தனித்தனி கோயில்கள் இல்லை. பின்னர்தான் கோயிலின் தென்மேற்கு மூலையிலே விநாயகரும் அவருக்கு எதிர்த்த வடமேற்கு மூலையில் சுப்பிரமணியரும் இடம் பெற்றிருக்கிறார்கள். நடராஜருக்குத் தனிச் சந்நிதி என்பதெல்லாம் மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுந்ததுதான். தெய்வத் திருமுறைகளை எல்லாம் வகுத்த பின்பே, அடியார்கள், நாயன்மார்கள் எல்லாம் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நவக்கிரக வழிபாடு எல்லாம் மிகவும் பிற்காலத்திலேதான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சிவன் கோயில்களைப் போலவே பெருமாள் கோயில்களிலும் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு தாயார் சந்நிதி இருந்ததில்லை. இன்னும் ஒப்பிலியப்பன் கோயில், நாச்சியார் கோயில் முதலிய இடங்களில் தனித்த தாயார் சந்நிதி இல்லை என்பது பிரசித்தம். கருவறைக்குள்ளேயே இருந்த தாயாரைப் பிரித்து, அவளைத் தனிக் கோயிலில் இருத்தியதெல்லாம் பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்புதான். ஆழ்வார்களும், ஆச்சாரியார்களும் மற்றும் ராமன், கண்ணன், விஸ்வக்சேனர் எல்லாம் தனிக் கோயில்களில் அமர்ந்தது இன்னும் பிந்திய காலத்திலேயே, இங்கு கூட ஒரு பாரபட்சம். பெருமாள் கோயில்களில் ஆண்டாளுக்கு என்று ஒரு தனி சந்நிதி. பன்னிரு ஆழ்வார்களில் ஒருத்தியான ஆண்டாளுக்கு மட்டும் தனிச் சந்நிதி ஏற்படுவானேன்? விஜயநகர மன்னனான கிருஷ்ண தேவராயன் ஆண்டாளிடம் அத்யந்த பக்தி கொண்டவன். அவனது கைங்கர்யமே இந்த ஆண்டாளுக்கு தனித்த சந்நிதி. இவ்வளவுதானா சொல்லலாம் இக்கோயில்களின் அமைப்பைப் பற்றி? இன்னும் எவ்வளவோ சொல்லலாம். சொல்லிடில் எல்லை இல்லை என்றே சொல்லலாம்.

சமுதாய வாழ்வினை வளர்க்க இக்கோயில்கள் எப்படி உதவியிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளாவிட்டால் இந்தப் பேச்சு பூரணம் அடைந்ததாகாது. நகர நிர்மாணத்திலேயே கோயில்கள் முக்யஸ்தானம் வகித்திருக்கின்றன. எந்த ஊரிலும் ஊருக்கு நடுவில் தான் கோயில், அதைச் சுற்றித்தான் தெருக்கள், கடை வீதிகள், வீடுகள் எல்லாம். மதுரையைப் பாருங்களேன். நகர நிர்மாணத்திற்கே சிறந்த எடுத்துக்காட்டு என்றல்லவா மேல்நாட்டு அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு வாயில்கள். வாயில் ஒவ்வொன்றிலும் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி நாட்டையும் நகரத்தையும் காத்து நிற்கும் காவல் கூடமாக அல்லவா கோயிலை உருவாக்கி இருக்கிறார்கள், தமிழர்கள்.

கோயில்களைச் சுற்றிய வீதிகளில் வியாபாரங்கள் வலுத்திருக்கின்றன. வியாபாரம் பெருகப் பெருக நாட்டின் வளம் பெருகியிருக்கிறது. பல நாடுகளில் இருந்து வியாபாரிகள் தங்கள் பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்து தங்கள் நாட்டில் கிடைக்காத பண்டங்களை இங்கிருந்து வாங்கிப் போயிருக்கிறார்கள். இப்படி வருகின்றவர்களது வசதிகளைத் தெரிந்தே கோயிலை ஒட்டிச் சந்தைகள் உத்ஸவங்கள், திருவிழாக்கள் எல்லாம் வளர்ந்திருக்கின்றன. பொருளாதாரக் கண் கொண்டு பார்த்தால் ஒவ்வொரு விழாவுமே ஒரு பெரிய சந்தைதான். கூட்டுறவு சம்மேளனம்தான்.

பல பக்கங்களிலிருந்தும் மக்கள் இப்படி வந்து கூடக் கூட நாட்டின் வளம், நகரத்தின் வளம் பெருகியிருக்கிறது. வந்தவர்களுக்கு உணவு அளிக்க அன்ன சத்திரங்கள் தோன்றியிருக்கின்றன. கோயிலை ஒட்டிக் குளங்கள், குளங்களை ஒட்டி நந்தவனங்கள் உருவாகி இருக்கின்றன, இவைகளை நிர்மாணித்தவர்கள் அவரவர்கள் காலத்திற்குப் பின்னும் இவைகள் சரியாக நடக்க நிலங்களை மான்யமாக வழங்கியிருக்கிறார்கள். ‘நிபந்தங்கள்’ ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவைகளைக் கோயிற் சுவரில் கல்வெட்டாக எழுதி வைத்திருக்கிறார்ர்கள். இப்படித்தான் தேவதானங்கள், தேவபோகங்கள் எல்லாம் எழுந்திருக்கின்றன.
கோயில்களால் விவசாயம் விருத்தியடைந்திருக்கிறது.. கைத்தொழில் பெருகியிருக்கின்றது. கட்டிட நிர்மாணத்தில் கைதேர்ந்த தச்சர்கள், சிற்பிகள், வர்ண வேலைக்காரர்களுக்கு எல்லாம் தக்க ஆதரவாய் கோயில்கள் இருந்திருக்கின்றன. அதனால் பரம்பரை வேலைக்காரர்கள் பெருகி இருக்கிறார்கள். மேலும், கோயில்கள் கலை நிலையங்களாக, கலைக் கூடங்களாக வளர்ந்திருக்கின்றன. இசையும் நடனமும் கோயில்களின் நித்யோத்சவத்தில் பங்கு பெற்றிருக்கின்றன. கல்விச் சாலைகள், பொருட்காட்சிச் சாலைகள் எல்லாம் கோயிலுக்குள்ளேயே அமைத்திருக்கிறார்கள். வியாக்யான மண்டபம், வியாகர்ண மண்டபம், சரஸ்வதி மண்டபங்கள் முதலியன கோயில்களுக்கு உள்ளேயே நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றன. தென்னார்க்காடு ஜில்லாவில் எண்ணாயிரத்திலும், செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுக்கூடலிலும் பெரிய பெரிய கலாசாலைகளே நடந்திருக்கின்றன. எண்ணாயிரம் கோயிலில் ஒரு சமஸ்கிருத பாடசாலை நடத்த முந்நூறு ஏக்கர் நிலம் மான்யமாக விடப்பட்டிருக்கிறது. 340 மாணவர்களுக்கு தங்க இடமும், உண்ண உணவும், உடுக்க உடையும் இனாமாக வழங்கப்பட்டிருக்கிறது. திருமுக்கூடல் பள்ளி இத்தனைச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கவில்லை என்றாலும் 60 பிள்ளைகள் படிக்க உதவியாக இருந்திருக்கிறது. ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதுடன், மற்ற பணிகளையும் செய்து ஊதியம் பெற்றிருக்கின்றனர். இப்படியே பல இடங்களில் பல கல்விச் சாலைகள் கோயில்களின் ஆதரவிலேயே நடந்து வந்திருக்கின்றன.

மக்களின் அறிவு விருத்திக்கு கல்விச் சாலைகள் ஏற்பட்டது போலவே மக்கள் உடல் நலத்தைப் பாதுகாக்க மருத்துவ சாலைகளும் கோயில்களுக்குள்ளேயே இருந்திருக்கின்றன. பதினோராம் நூற்றாண்டில் உள்ள ஒரு சோழர் கல்வெட்டிலிருந்து 15 படுக்கைகள், ஒரு மருத்துவர், ஒரு ரண வைத்தியர், இரண்டு தாதியர் இன்னும் இதர சிப்பந்திகள் கொண்ட ஒரு மருத்துவ சாலையே நடந்திருக்கிறது ஒரு கோயிலில் என்பது தெரியவருகிறது. மருந்துகளும் மூலிகைகளும் கூட அங்கு ஏராளமாய்ச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதோடு கால்நடை மருத்துவசாலைகள் கூட கோயில் ஆதரவில் நடந்திருக்கின்றன என்றால் கேட்பானேன்.

கோயிலை ஒட்டி எழுந்த இந்த ஸ்தாபனங்களை நிர்வகிக்க ஸ்தானீகர்களும் காரியஸ்தர்களும் இருந்திருக்கின்றனர். பொருளைக் காவல் காக்க பண்டாரிகள், பூசைகள் எல்லாம் சரியாய் நடக்கிறதா என்று பார்க்க தேவகர்மிகள், இவர்களுக்கு எல்லாம் மேலே அதிகார புருஷர்கள், அவர்களுக்கு ஆலோசகர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். இப்படி மக்களை எல்லாம் சமுதாய வாழ்விலும், கலை ஆர்வத்திலும், பொருளாதாரத் துறையிலும் ஒன்று சேர்க்கும் பெரிய நிலையமாக அல்லவா இக்கோயில்கள் உருவாகி இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு கலா நிலை யத்தை நடுநாயகமாகக் கொண்டே மக்கள் வாழ்வு சிறந்திருக்கிறது. என்றுமே சிறந்திருக்க இவை உதவுதல் கூடும் என்றும் நமக்குத் தெரிந்தால் போதாதா?