புறப்பொருள் வெண்பாமாலை/நொச்சிப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

ஐந்தாவது

நொச்சிப்படலம்[தொகு]

நுவலருங் காப்பி னொச்சி யேனை
மறனுடைப் பாசி யூர்ச்செரு வென்றா
செருவிடை வீழ்த றிண்பரி மறனே
எயிலது போரே யெயிறனை யழித்தல்
அழிபடை தாங்கன் மகண்மறுத்து மொழிதலென
எச்ச மின்றி யெண்ணிய வொன்பதும்
நொச்சித் திணையுந் துறையு மாகும்.
  1. நொச்சி
  2. மறனுடைப் பாசி
  3. ஊர்ச்செரு
  4. செருவிடை வீழ்தல்
  5. குதிரை மறம்
  6. எயிற்போர்
  7. எயில்தனை அழித்தல்
  8. அழிபடை தாங்கல்
  9. மகள் மறுத்து மொழிதல்

என நொச்சி 9 துறைகளைக் கொண்டது

நொச்சி[தொகு]

ஏப்புழை ஞாயி லேந்துநிலை யரணம்
காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று. - கொளு
கோட்டையைக் காப்போர் சூடிய பூ பற்றிக் கூறுவது நொச்சித் துறை
ஆடரவம் பூண்டா னழலுணச் சீறிய
கூடரணங் காப்போர் குழாம்புரையச் – சூடினார்
உச்சி மதி வழங்கு மோங்கு மதில்காப்பான்
நொச்சி நுதிவே லவர்.
பகைவர் சீறி வரும்போது கோட்டையைக் காப்பதற்காக வேல்வீரன் நொச்சிப் பூவைச் சூடிக்கொண்டான்

மறனுடைப் பாசி[தொகு]

மறப்படை மறவேந்தர்
துறக்கத்துச் செலவுரைத்தன்று. - கொளு
பரந்து தாக்க வந்தவர் துறக்கம் செல்ல அனுப்பியது
பாயினார் மாயும் வகையாற் பலகாப்பும்
ஏயினா ரேய விகன்மறவர் – ஆயினார்
ஒன்றி யவரற வூர்ப்புலத்துத் தார்தாங்கி
வென்றி யமரர் விருந்து.
கோட்டைக்கு வெளியில் பரந்து நிற்கும் மறவரைத் தாக்கி,
அமரர்க்கு விருந்தாக்கினர்

ஊர்ச்செரு[தொகு]

அருமிளையொடு கிடங்கழியாமைச்
செருமலைந்த சிறப்புரைத்தன்று.
வளையும் வயிரு மொலிப்பவாள் வீசி
இளையுங் கிடங்குஞ் சிதையத் – தளைபரிந்த
நோனார் படையிரிய நொச்சி விறன்மறவர்
ஆனா ரமர்விலக்கி யார்ப்பு.

செருவிடை வீழ்தல்[தொகு]

ஆழ்ந்துபடு கிடங்கோ டருமிளை காத்து
வீழ்ந்த வேலோர் விறன்மிகுத் தன்று. -கொளு
மிளைக் காட்டையும் அகழியையும் காத்து நின்றவன்
போரில் வீழ்ந்த செய்தியைச் சொல்வது
ஈண்டரில் சூழ்ந்த விளையு மெரிமலர்க்
காண்டகு நீள்கிடங்குங் காப்பாராய் – வேண்டார்
மடங்க லனைய மறவேலோர் தத்தம்
உடம்பொடு காவ லுயிர்.
புதர் மிகுந்த காவல் காட்டையும்
கிடங்கையும்
காத்து நின்ற மறவேலோன்
தன் உடம்பையும் உயிரையும் அதற்காகக் கொடுத்தான்

குதிரைமறம்[தொகு]

ஏமாண்ட நெடும்புரிசை
வாமானது வகையுரைத்தன்று. - கொளு
கோட்டையைக் காக்கும் குதிரைவீரன் திறம் பற்றிப் பேசுவது
தாங்கன்மின் றாங்கன்மின் றானை விறன்மறவிர்
ஓங்கன் மதிலு ளொருதனியா – ஞாங்கர்
மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார்
உயிருணிய வோடி வரும்.
தாங்க மாட்டீர்கள்
அந்தக் குதிரை வீரன்
உங்கள் உயிரைக் கொல்ல வருகிறான்

எயிற்போர்[தொகு]

அயிற்படையி னரண்காக்கும்
எயிற்படைஞ ரிகன்மிகுத்தன்று. - கொளு
வேல் படையை வைத்துப்பவண்டு அரணைக் காக்கும் எயில்படை மறவர்களின் போர் பற்றிக் கூறுவது
மிகத்தாய செங்குருதி மேவரு மார்பின்
உகத்தா முயங்கியக் கண்ணும் – அகத்தார்
புறத்திடைப் போதந் தடல்புரிந்தார் பொங்கி
மறத்திடை மானமேற் கொண்டு.
தம் மார்பில் செங்குருதி வழியத் தாக்கியபோதும்
கோட்டைக்கு உள்ளிருந்து வெளியில் வந்து
பகைவரைத் தாக்கி அந்த மறவன் போரிடுகிறான்

எயிறனையழித்தல்[தொகு]

துணிவுடைய தொடுகழலான்
அணிபுரிசை யழிவுரைத்தன்று. - கொளு
துணிவு கொண்ட தொடுகழலானின் அழகிய கோட்டையின் அழிவு நிலை பற்றிக் கூறுவது
அகத்தன வார்கழ னோன்றா ளரணின்
புறத்தன போரெழிற் றிண்டோள் – உறத்தழீஇத்
தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட
வாட்குரிசில் வானுலகி னான்
கோட்டையின் உள்ளே இருக்கும் வீரன்
வெளியில் வந்து வாளால் தாக்கிப் போரிட்டபோது
அவனது மனைவி பாராட்டும்படி விண்ணுலகு அடைந்தான்

அழிபடை தாங்கல்[தொகு]

இழிபுடன் றிகல்பெருக
அழிபடை யரண்காத்தன்று. - கொளு
எண்ணிக்கையில் குறைந்தவராக இருந்தாலும்
பெருகித் தாக்கும் பகைவர்களிடமிருந்து
தம் அரணைக் காப்பது
பரிசை பலகடந்து பற்றா ரெதிர்ந்தார்
எரிசெ யிகலரணங் கொண்மார் – புரிசை
அகத்தடி யுய்யாமை யஞ்சுடர்வா ளோச்சி
மிகத்தடிந்தார் மேனின் றவர்.
பகைவர்கள் படைகள் பலவற்றை வென்றனர்
போரிட்டுக்கொண்டு உள்ளே உள்ளே நுழையும்போது
எயில் காப்போர் அவர்களை உள்ளே நுழைய விடாமல் காத்தனர்

மகண்மறுத்து மொழிதல்[தொகு]

வெம்முரணான் மகள்வேண்ட
அம்மதிலோன் மறுத்துரைத்தன்று. - கொளு
மாறுபட்ட வேந்தன் மகளைத் தரும்படி வேண்ட
மதில் காப்போன் மறுத்துக் கூறுதல்
ஒளிவான் மறவ ருருத்தெழுந் தும்பர்நாட்
கள்வார் நறுங்கோதை காரணமாக் – கொள்வான்
மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக்
கருங்கண்ணி வெண்கட்டிற் கால்.
மதிலகத்தானின் மகளைத் தரும்படி வேண்டி
களிற்றின் மேல் வந்து தாக்கியபோது
மகளைத் தர மறுத்துச் சினத்துடன் போரிட்டான்


ஐந்தாவது நொச்சிப்படலம் முற்றிற்று.