புறப்பொருள் வெண்பாமாலை/உழிஞைப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

ஆறாவது

உழிஞைப்படலம்[தொகு]

உழிஞை யோங்கிய குடைநாட் கோளே
வாணாட் கோளே முரச வுழிஞை
கொற்ற உழிஞையோ டரச உழிஞை
கந்தழி யென்றா முற்றுழி ஞையே
காந்தள் புறத்திறை யாரெயி லுழிஞை
அருந்தோ லுழிஞை குற்றுழி ஞையொடு
கோட்புறத் துழிஞை பாசி நிலையே
ஏணி நிலையே யிலங்கெயிற் பாசி
முதுவுழி ஞையே முந்தகத் துழிஞை
முற்று முதிர்வே யானைக்கைக் கோளே
வேற்றுப்படை வரவே யுழுதுவித் திடுதல்
வாண்மண்ணு நிலையே மண்ணுமங் கலமே
மகட்பா லிகலே திறைகொண்டு பெயர்தல்
அடிப்பட விருத்த றொகைநிலை யுளப்பட
இழுமென் சீர்த்தி இருபத் தொன்பதும்
உழிஞை யென்மனா ருணர்த்திசி னோரே.
  1. உழிஞை
  2. குடைநாட்கோள்
  3. வாள்நாட்கோள்
  4. முரசவுழிஞை
  5. கொற்ற உழிஞை
  6. அரச உழிஞை
  7. கந்தழி
  8. முற்றுழிஞை
  9. காந்தள்
  10. புறத்திறை
  11. ஆரெயில் உழிஞை
  12. தோல் உழிஞை
  13. குற்றுழிஞை
  14. புறத்துழிஞை
  15. பாசிநிலை
  16. ஏணிநிலை
  17. எயிற்பாசி
  18. முதுவுழிஞை
  19. அகத்துழிஞை
  20. முற்றுமுதிர்வு
  21. யானைக்கைக்கோள்
  22. வேற்றுப்படை வரவு
  23. உழுதுவித்திடுதல்
  24. வாண்மண்ணுநிலை
  25. மண்ணுமங்கலம்
  26. மகட்பால் இகல்
  27. திறைகொண்டு பெயர்தல்
  28. அடிப்படவிருத்தல்
  29. தொகைநிலை

என்று 29 துறைகளைக் கொண்டது உழிஞைத்திணை

உழிஞை[தொகு]

முடிமிசை யுழிஞை சூடி யொன்னார்
கொடி நுடங் காரெயில்கொளக்கரு தின்று. - கொளு
உழிஞைப் பூவைத் தலையில் அணிந்துகொண்டு பகைவரின் கோட்டையைக் கைப்பற்றக் கருதுதல்
உழஞை முடிபுனைந் தொன்னாப்போர் மன்னர்
விழுமதில் வெல்களிறு பாயக் – கழிமகிழ்
வெய்தாரு மெய்தி யிசை நுவலுஞ் சீர்த்தியனே
கொய்தார மார்பினெங் கோ.
உழிஞைப் பூவைத் தலையில் சூடிக்கொண்டு
பகைவர் மதிலில் தன் யானை பாய
என் அரசன் தன் தார்ப்படையை நடத்திச் சென்றான்

குடைநாட்கோள்[தொகு]

செற்றடையார் மதில்கருதிக்
கொற்றவேந்தன் குடைநாட்கொண்டன்று. - கொளு
தன்னிடம் பணிவாக வந்தடையாத மன்னரின் மதிலைக் கொள்ளக் கருதி
வெற்றிவேந்தன் தன் குடையை நடத்தி விழாக் கொண்டாடுதல்
நெய்யணிக செவ்வே னெடுந்தேர் நிலைபுகுக
கொய்யுமோ கொல்களிறு பண்விடுக – வையகத்து
முற்றக் கடியரண மெல்லா முரணவிந்த
கொற்றக் குடைநாட் கொள்
வேலுக்கு எண்ணெய் பூசுங்கள்
தேரைப் பூட்டுங்கள்
யானை போர் பண்ண விடுங்கள்
என்று சொல்லி நம் வேந்தன் குடை நடத்தியதும்
பிறர் கோட்டைகளின் பகைமை அவிழ்ந்தது

வாணாட்கோள்[தொகு]

கலந்தடையார் மதில்கருதி
வலந்தருவா ணாட்கொண்டன்று - கொளு
பகைவர் மதிலைக் கைப்பற்றக் கருதி வெற்றி தரும் வாளுக்கு நாள்விழா நடத்துதல்
வாணாட் கொளலும் வழிமொழிந்து வந்தடையாப்
பேணார் பிறைதொடும் பேமதிற் – பூணார்
அணிகொள் வனமுலையா ராடரங்க மேறிப்
பிணிகொள்பே யாடும் பெயர்த்து.
வேந்தன் பகைவர் மதிலைக் கொள்ளக் கருதித் தன் வாளுக்கு நாள்விழா கொண்டாடினான்
அதனை அறிந்த பகைவர் மதில்மறவரின் மனைவியர் மன்றுக்கு வந்து அச்சத்தால் ஆடினர்

முரச வுழிஞை[தொகு]

பொன்புனை யுழிஞை சூடி மறியருந்தும்
திண்பிணி முரச நிலையுரைத் தன்று. - கொளு
பகைவர் மதிலைக் கைப்பற்றக் கருதிய வேந்தன் உழிஞைப் பூவைச் சூடி
முரசுக்கு நாள்விழா நடத்துதல்
கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி
உதிரா மதிலு முளகொல் – அதிருமால்
பூக்கண் மலிதார்ப் புகழ்வெய்யோன் கோயிலுள்
மாக்கண் முரச மழை.
புகழ் வெய்யோன் அரண்மனையில் முரசு மேகம் முழங்குகிறது
அவன் யானையால் உதிர்க்கப்படாத மதிலும் இருக்குமா (இருக்காது)

கொற்ற வுழிஞை[தொகு]

அடையாதா ரரண் கொள்ளிய
படையோடு பரந்தெழுந்தன்று. - கொளு
பகைவரின் அரணைக் கைப்பற்றப் படையுடன் பரந்து செல்லல்
வெள்வாட் கருங்கழற்கால் வெஞ்சுடர்வேற் றண்ணளியான்
கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான் – நள்ளாதரர்
அஞ்சுவரு வாயி லருமிளைக் குண்டகழி
மிஞ்சிவரு ஞாயின் மதில்.
வெள்ளை வாள்
கருமைக் கழல்
வெய்ய வேல்
இரக்கக் கொடை
கொண்ட வேந்தன்
பகைவரின் மதில்வாயில், மிளைக்காடு, ஆழமான அகழி ஞாயில் ஆகியவற்றைக் கொள்ளக் கருதி,
கொடிப்படையுடன் புறப்பட்டான்

அரச வுழிஞை[தொகு]

தொழில்காவன் மலிந்தியலும்
பொழில்கா வலன் புகழ்விளம்பின்று - கொளு
காவல்காட்டை விஞ்சிய காவலனின் புகழைச் சொல்லுதல்
ஊக்க முரண்மிகுதி யொன்றிய நற்சூழ்ச்சி
ஆக்க மவன்க ணகலாவால் – வீக்கம்
நகப்படா வென்றி நலமிகு தாராற்
ககப்படா வில்லை யரண்
ஊக்கமும் சூழ்ச்சியும் அவனிடம் இருப்பதால்
வேந்தனுக்கு அகப்படா அரண் இல்லை

கந்தழி[தொகு]

மாவுடைத்தார் மணிவண்ணன்
சோவுடைத்த மறநுவலின்று. - கொளு
கந்து = காவல்-வலிமை
மணிவண்ணன் ‘சோ’ என்னும் கோட்டையை அழித்த வரலாற்றைக் கூறி எழுச்சி பெறுதல்
அன்றெறிந் தானு மிவனா லரண்வலித்
தின்றிவன் மாறா வெதிர்வார்யார் – என்றும்
மடையார் மணிப்பூ ணடையாதார் மாரபிற்
சுடராழி நின்றெரியச் சோ.
அன்று சோ என்னும் அரணைத் தன் ஆழியை வீசி வென்றவனும் இவன்தான்
இன்று கோட்டையைக் கைப்பற்றப் போருக்கு எழுபவனும் அவன்தான்

முற்றுழிஞை[தொகு]

ஆடிய லவிர் சடாயான்
சூடியபூச் சிறப்புரைத்தன்று. - கொளு
சடை விரித்து ஆடும் சிவன் பூவின் சிறப்பினை உரைத்தது
மயங்காத தார்ப்பெருமை மற்றறிவார் யாரே
இயங்கரண் மூன்று மெரித்தான் – தயங்கிணர்ப்
பூக்கொ ளிதழிப் புரிசெஞ் சடையானும்
மாக்கொ ளுழிஞை மலைந்து.
இவன் உழிஞை சூடிப் போரிடுகிறான்
முப்புரம் எரித்தவன் சூடிய இதழி (கொன்றை)ப் பூ போல அது இருக்கிறது
இதன் பெருமையை உணரவல்லார் யார்

காந்தள்[தொகு]

கருங்கடலுண் மாத்தடிந்தான்
செழுங்காந்தட் சிறப்புரைத்தன்று. - கொளு
கருங்கடலில் சூரபன்மாவைக் கொன்ற முருகன் சூடிய காந்தள் போவோடு ஒப்பிட்டு உழிஞைப் பூவைச் சிறப்பித்தல்
குருகு பெயரிய குன்றெறிந் தானும்
உருகெழு காந்தண் மலைந்தான் – பொருகழற்
கார்கருதி வார்முரச மார்க்குங் கடற்றானைப்
போர்கருதி யார்மலையார் பூ.
குருகு பெயரிய குன்றம் எறிந்த முருகன் சூடிய காந்தள் பூப்போல்
படையுடன் சென்று மதிலைத் தாக்குபவன் சூடிய உழிஞை இருக்கிறது

புறத்திறை[தொகு]

மறத்துறை மலிந்து மண்டி மாற்றார்
விறற்கொடி மதிலின் புறத்திறுத் தன்று. - கொளு
மற வலிமை மிக்கு, மாற்றான் கொடிமதிலின் புறத்ததே படையுடன் நிற்றல்
புல்லார் புகலொடு போக்கொழியப் பொங்கினனாய்ப்
பல்லார் மருளப் படைபரப்பி – ஒல்லார்
நிறத்திறுத்த வாட்டானை நேரார் மதிலின்
புறத்திறுத்தான் பூங்கழலி னான்.
எளியோர் புகவோ, போகவோ முடியாதபடி தடுத்துக்கொண்டு
பலரும் மருளும்படியாகத் தன் படையைப் பரப்பி
மதிலின் புறத்தே நிறுத்தியிருக்கிறான்

ஆரெயிலுழிஞை[தொகு]

வாஅண்மறவர் வணங்காதார்
நீஇண்மதிலி னிலையுரைத்தன்று. - கொளு
எயில் காக்கும் மறவர் வணங்காமை பற்றிக் கூறுவது
மயிற்கணத் தன்னார் மகிழ்தேற லூட்டக்
கயிற்கழலார் கண்கனல் பூப்ப – எயிற்கண்ணார்
வீயப்போர் செய்தாலும் வென்றி யரிதரோ
மாயப்போர் மன்னன் மதில்.
மகளிர் ஊட்டிய தேறலை உண்ட மறவர்
கையில் கழல் அணிந்து
கண்ணில் தீப்பொறி பறக்கப் போரிட்டாலும்
மதில் மன்னன் வெற்றி வெறுதல் அரிது

தோலுழிஞை[தொகு]

வென்றி யோடு புகழ்விளைக் கும்மெனத்
தொன்று வந்த தோன்மிகுத் தன்று. - கொளு
வெற்றியோடு புகழையும் விளைவிக்கும் என்று
தோல்படையைப் பாராட்டுதல்
நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி
இன்றுநாம் வைக லிழிவாகும் – வென்றொளிரும்
பாண்டி னிரைதோல் பணியார் பகையரணம்
வேண்டி னெளிதென்றான் வேந்து.
நின்ற புகழ் வேண்டும்
நில்லா உயிரைப்பற்றிக் கவலையில்லை
என்று போரிடும் மார்புக் கவசம் அணிந்த மறவர் விரும்பினால்
பகைரின் கோட்டையைக் கைப்பற்றுதல் எளிது

குற்றுழிஞை[தொகு]

கருதாதார் மதிற்குமரிமேல்
ஒருதானாகி யிகன்மிகுத்தன்று. - கொளு
பகைவரின் அழியா மதில்மேல்
தனியொருவனானகக் குற்றுதல் (தாக்குதல்)
குளிறு முரசினான் கொண்டா னரணம்
களிறுங் கதவிறப் பாய்ந்த – ஒளிறும்
அயிற்றுப் படைந்த வணியெழு வெல்லாம்
எயிற்றுப் படையா விடந்து.
முரசு முழக்கத்துடன் கோட்டையைக் கைப்பற்றினான்
கோட்டைக் கதவினை அதன் ‘எழு’த் தாழ்ப்பாள் உடையும்படி,
களிறு தன் கோட்டால் குத்தி முறித்தது

இதுவுமது

வளைஞரல வயிரார்ப்ப
மிளைகடத்தலு மத்துறையாகும்.- கொளு
சங்கு, கொம்பு ஊதிக்கொண்டு
மிளை என்னும் காவல் காட்டு அரணைக் கடத்தலும் இந்தத் துறை
அந்தரந் தோயு மமையோங் கருமிளை
மைந்தர மறிய மறங்கடந்து – பைந்தார்
விரைமார்பின் வின்னரல வெங்கணை தூவார்
வரைமார்பின் வைகின வாள்.
வானளாவும் மூங்கில் கொண்டு அந்த மிளை
கணைமழை பொழிந்தும்
வாளால் தாக்கியும்
அதன் வலிமையைத் தகர்த்தனர்

இதுவுமது

பாடருந்தோற் படைமறவர்
ஆடலொடடையினு மத்துறையாகும் - கொளு
தோல்படை மறவர் திறம் பற்றிச் சொன்னாலும் இந்தத் துறை
நிரைபொறி வாயி னெடுமதிற் குழி
வரைபுகு புள்ளின மான – விரைபடைத்தார்
வேலேந்து தானை விறலோன் விறன்மறவர்
தோலேந்தி யாட றொடர்ந்து.
பகைவரை வீழ்த்தும் பொறிகள் கொண்டது அந்த மதில்
மலையில் நுழையும் பறவைகள் போல அதில் நுழைந்தனர்
அது வேல்மறவர் படை
தோல்மறவர் படை

புறத்துழிஞை[தொகு]

விண்டோயு மிளைகடந்து
குண்டகழிப் புறத்திறுத்தன்று. - கொளு
வானளாவ உயர்ந்த மரங்களைக் கொண்ட மிளை என்னும் காவல் காட்டைக் கடந்து
அகழியின் புறத்தே படையை நிறுத்துமல்
கோள்வாய் முதலைய குண்டகழி நீராக
வாள்வாய் மறவேந்தன் வந்திறுத்தான் – நீள்வாயில்
ஓங்க லரணத் தொளிவளையார் வெய்துயிர்ப்ப
ஆங்கொ லரிய வமர்.
முதலை மேயும் ஆழமான அகழியின் புறத்தே
நுழைவாயிலில் தன் படையை நிறுத்தியுள்ளான்
ஓங்கி உயர்ந்த இந்தக் கோட்டை
அதன் உள்ளே இருக்கும் மகளிர் பெருமூச்சு விடுமாறு ஆகிவிடுமோ

பாசிநிலை[தொகு]

அடங்காதார் மிடல்சாயக்
கிடங்கிடைப் போர்மலைந்தன்று. - கொளு
பகைவரின் வலிமையைக் குறைக்க கிடங்கில் போர் புரிதல்
நாவாயுந் தோணியு மேல்கொண்டு நள்ளாதார்
ஓவார் விலங்கி யுடலவும் – பூவார்
அகழி பரந்தொழுகு மங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் வீழ்ந்தார் பலர்.
அகழியில் நாவாய், தோணி ஆகியவற்றில் இருந்துகொண்டு பகைவர் விலகி ஓடும்படி குருதிப்போர் புரியும்போது வீழ்ந்துபட்டோர் பலர்.

ஏணிநிலை[தொகு]

தொடுகழன் மறவர் துன்னித் துன்னார்
இடுசூட் டிஞ்சியி னேணிசாத் தின்று. -கொளு
மதிலைக் கடக்க ஏணி சார்த்திப் போரிடுதல்
கற்பொறியும் பாம்புங் கனலுங் கடிகுரங்கும்
விற்பொறியும் வேலும் விலக்கவும் – பொற்புடை
பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சாத்தினார்
ஏணி பலவு மெயில்.
மதிலின்மீது கல் எறியும் பொறிகளும், கடிக்கும் பாம்புகளும், எறியும் தீப் பந்தங்களும், கடிக்கும் குரங்குகளும், ஆள் இல்லாமல் தானே எய்து தாக்கும் வில்பொறிகளும் வேல்களும் இருக்கும்.
அவை தாக்கும்போதும் குதிரையிலும் களிற்றிலும் வந்த மறவர்கள் மதிலின் மேல் ஏணியைஞ் சாத்தி ஏறினர்

எயிற்பாசி[தொகு]

உடல்சினத்தார் கடியரணம்
மிடல்சாய மேலிவர்ந்தன்று. - கொளு
உடலும் சினம் கொண்டவர்
காப்பு மிக்க கோட்டையின் வலிமை சாய
ஏணி வழியே மதிலில் ஏறுதல்
சுடும ணெடுமதில் சுற்றிப் பிரியார்
கடுமுர எஃகங் கழிய – அடுமுரண்
ஆறினா ரன்றி யரவு முடும்பும்போல்
ஏறினா ரேணி பலர்.
சுடுமண் செங்கல் வைத்துக் கட்டப்பட்ட மதில்
மதிலின் நெடுமை கண்டு விலகிச் செல்லாமல்
தாக்கும் வேல்களை ஒதுக்கிக்கொண்டு
பாம்பு போலவும், உடும்பு போலவும்
ஏணி வழியே மதிலில் ஏறினர்

முதுவுழிஞை[தொகு]

வேய்பிணங்கிய மிளையரணம்
பாய்புள்ளிற் பரந்திழிந்தன்று. - கொளு
காவல் காட்டு அரணில் மள்ளர் பறவைப் பட்டாளம் பாய்வது போலப் பாய்ந்து போரிடுதல்
கோடுயர் வெற்பி னிலங்கண் டிரைகருதும்
தோடுகொள் புள்ளின் தொகையொப்பக் – கூடார்
முரணகத்துப் பாற முழவுத்தோண் மள்ளர்
அரணகத்துப் பாய்ந்திழிந்தா ரார்த்து.
மலைநித்தில் இருக்கும் இரையைக் கண்டு பறவை இனம் பாய்வது போல மள்ளர் போர்க்களத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டு பாய்ந்து போரிட்டனர்

இதுவுமது

செருமதிலோர் சிறப்புரைத்தலும்
அருமுரணா னத்துறையாகும். - கொளு
போரிடும் மதிலில் உள்ள மள்ளர்களின் சிறப்பினைச் சொன்னாலும் இந்தத் துறை ஆகும்
அறியார் வயவ ரகத்திழிந்த பின்னும்
நெறியார் நெடுமதிலு ணேரார் - மறியாம்
கிளியொடு நேராங் கிளவியார் வாட்கட்
களியுறு காமங் கலந்து.
மதிலைக் கடந்து மறவர் உள்ளே நுழைந்த பின்னரும்
அதனைப் பொருட்படுத்தாமல் மகளிர் கண்ணோடு கண் விளையாடும் போர் நடத்திக்கொண்டிருந்தனர்

அகத்துழிஞை[தொகு]

முரணவியச் சினஞ்சிறந்தோர்
அரணகத்தோரை அமர்வென்றன்று. - கொளு
முரண்பாடு அவியுமாறு
சினம் சிறந்த மறவர்
மதிலுக்கு உள்ளே இருந்துகொண்டு போரிடுவோரை வென்றது
செங்கண் மறவர் சினஞ்சொரிவாள் சென்றியங்க
அங்கண் விசும்பி னணிதிகழும் – திங்கள்
முகத்தா ரலற முகிலுரிஞ்சுஞ் சூழி
அகத்தாரை வென்றா ரமர்.
மறவர் சிவந்த கண்ணுடன் தாக்கிப் போரிட்டு
நிலா முகம் கொண்ட மகளிர் அலறும்படி
மதிலகத்தோரை வென்றனர்

முற்றுமுதிர்வு[தொகு]

அகத்தோன் காலை யதிர்முர சியம்பப்
புறத்தோன் வெஞ்சினப் பொலியுரைத் தன்று. - கொளு
மதிலகத்தோன் காலையில் போர் முழசு முழக்கக் கேட்டு,
மதிலின் புறத்தே இருப்பவர் வஞ்சினம் கூறலின் சிறப்பினை எடுத்துரைத்தல்
காலை முரச மதிலியம்பக் கண்கனன்று
வேலை விறல்வெய்யோ னோக்குதலும் – மாலை
அடுக மடிசிலென் றம்மதிலு ளிட்டார்
தொடுகழலார் மூழை துடுப்பு.
மதிலின் அகத்தே இருப்பவர் காலை முரசம் முழங்குவதைக் கேட்டு
மதிலுக்கு வெளியில் இருப்பவர்
மாலையில் பிணச்சோறு சமைப்போம் என்று கூறி,
தம் போர்க்கருவிகளைத் துடுப்பாக இட்டனர்

யானை கைக்கோள்[தொகு]

மாறுகொண்டார் மதிலழிய
ஏறுந்தோட்டியு மெறிந்து கொண்டன்று. - கொளு
எதிர்த்துப் போரிடுவோரின் மதில் அழியுமாறு
தன் யானைமீது அங்குசம் பாய்ச்சுதல்
ஏவ லிகழ்மறவர் வேய விகல்கடந்து
காவலும் யானையுங் கைக்கொண்டான் – மாவலான்
வம்புடை யொள்வாண் மறவர் தொழுதேத்த
அம்புடை ஞாயி லரண்.
வாள் மறவர் தொழுது வணங்கும்படி
பகைமறவர் தாக்கத்தைக் கடந்து
பகைவரின் கோட்டையையும் யானைகளையும் கைக்கற்றினான்

வேற்றுப்படை வரவு[தொகு]

மொய்திகழ் வேலோன் முற்றுவிட் டகலப்
பெய்தார் மார்பிற் பிறன்வர வுரைத்தன்று. - கொளு
முற்றுகை இட்ட மன்னன் படையை விலக்கிக்கொள்ளும்படி
மதிலத்துள்ளேரைக் காப்பாற்ற வேற்றுப்படை வரல்
உவனின் அறுதுயர முய்யாமை நோக்கி
அவனென் றுலகேத்து மாண்மை – இவனன்றி
மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரணம்
முற்றியார் முற்று விட.
மதிலின் உள்ளிருப்போர் துயரம் கொள்ளாமல் இருக்க
நண்பன் படை வர
முற்றியவன் படை விலகிச் சென்றது

உழுது வித்திடுதல்[தொகு]

எண்ணார் பல்லெயில் கழுதையே ருழுவித்
துண்ணா வரகொடு கொள்வித் தின்று. - கொளு
மதில் போரில் தோற்றவர் நிலத்தில்
கழுதை ஏர் பூட்டி உழுது
வரகும் கொள்ளும் விதைப்பது
எழுதெழின் மாடத் திடனெலா நூறிக்
கழுதையேர் கையொளிர்வேல் கோலா – உழுததற்பின்
வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்
கள்விரவு தாரான் கதம்.
மதிலகத்தோரை அழித்து
அவர்கள் நிலத்தில் கழுதை ஏர் பூட்டி உழுது
வரகும் கொள்ளும் விதைத்த பின்னும்
மன்னன் சினம் தணிந்தபாடில்லை

வாண்மண்ணுநிலை[தொகு]

புண்ணிய நீரிற் புரையோ ரேத்த
மண்ணிய வாளின் மறங்கிளந் தன்று - கொளு
வென்ற கோட்டைக்குள் இருந்த புனித நீரில்
உழிஞைப் போரில் வென்ற மற வாளை
நீராட்ட மேலோர் பாராட்டல்
தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கத்
கூர்த்தவாண் மண்ணிக் கொடித்தேரான் – பேர்த்துக்
இடியார் பணை துவைப்ப விம்மதிலுள் வேட்டான்
புடையா ரறையப் புகழ்.
கொடித்தேரான் திசையெல்லாம் விளங்கும்படி, தன் கூர்த்த வாளை,
முரசு முழக்கத்துடன் பூவிட்டு, வென்ற மதிலுக்குள் நீராட்டி வேள்வி வேள்வி செய்தான்
சூழ்ந்திருந்தவர் புகழ்ந்தனர்

மண்ணுமங்கலம்[தொகு]

வணங்காதார் மதிற்குமரியொடு
மணங்கூடிய மலிபுரைத்தன்று. - கொளு
தன்னை வணங்காதவர் மதிலாகிய குமரிப் பெண்ணோடு
வேந்தன் திருமணம் செய்துகொண்ட மகிழ்ச்சியைக் கூறுவது
எங்கண் மலர வெயிற்குமரி கூடிய
மங்கல நாள்பா மகிழ்தூங்கக் – கொங்கலர்தார்ச்
செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே
மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி.
எங்கள் கண்கள் மலர்ந்து காணுமாறு
எயிலாகிய குமரிப் பெண்ணை
மங்கல நாண் பூட்டித் தனதாக்கிக் கொண்ட நாளை
மகிழ்வுடன் பாடி மகிழும்படி
மதில் மன்னன் முடி
வென்ற மன்னன் அடியை வணங்கிற்று

மகட்பாலிகல்[தொகு]

மயிற்சாயன் மகள்வேண்டிய
கயிற்கழலோ னிலையுரைத்தன்று. -கொளு
மயில் போன்ற சாயலை உடைய மகளை அடைய விரும்பி
கங்கணம் கட்டிக்கொண்ட நிலையை உரைத்தல்
அந்தழை யல்குலு மாடமை மென்றோளும்
பைந்தளிர் மேனியும் பாராட்டித் – தந்தை
புறமதில் வைகும் புலம்பே தருமே
மறமதின் மன்னன் மகள்.
தழையணிந்த அல்குல்
மூங்கில் போன்ற தோள்
தளிர் போன்ற மேனி
கொண்டவளைப் பாராட்டி
அவள் தந்தையின் மதில் புறத்ததை மன்னன் வளைத்துக்கொண்டிருக்கிறான்
அதனால்
மறமதில் மன்னன் மகள் நமக்குப் புலம்புதலையே தருகிறாள்

திறைகொண்டு பெயர்தல்[தொகு]

அடுதிற லரணத் தரசு வழிமொழியப்
படுதிறை கொண்டு பதிப்பெயர்ந் தன்று. - கொஒளு
மதிலக மன்னன் வழிமொழிந்து திறை கொடுக்க வாங்கிக்கொண்டு
முற்றிய மன்னன் தன் ஊருக்குத் திரும்புதல்
கோடும் வயிரு மிசைப்பக் குழுமிளை
ஓடெரி வேய வுடன் றுலவாய்ப் – பாடி
உயர்ந்தோங் கரணகத் தொன்னார் பணியப்
பெயர்ந்தான் பெருந்தகையினான்.
சங்கு, கொம்பு இசைக்க
காவல் காட்டில் தீ பற்றி எரிய
மதிலரசன் பணிய
வேந்தன் தன் ஊர் திரும்பினான்

அடிப்பட விருத்தல்[தொகு]

பேணாதார் மறங்கால
ஆணைகொண் ட்டிப்படவிருந்தன்று. - கொளு
தன் பகைவர் மறத்து வெளிப்படுத்த
தன் ஆணையை நடத்தி
தன் அடியின் கீழ்க் கொண்டுவந்தது
ஒன்றி யவர்நா டொருவழித்தாய்க் கூக்கேட்ப
வென்றி விளையா விழுமதிலோர் – என்றும்
பருந்தார் செருமலையப் பாடி பெயரா
திருந்தா னிகன்மறவ ரேறு.
இகல் மறவன்
பருந்துகள் பிணம் தின்னும் போர் நடத்தி
ஒரு வழியாக, தன் அடிப்பட்ட நாட்டு மக்கள் கூவி அழும் கூக்குரலைக் கேட்டுக்கொண்டு
மதிலகத்துத் தன் வெற்றியை விளைவித்தான்

தொகைநிலை[தொகு]

எம்மதிலி னிகல்வேந்தரும்
அம்மதிலி னடியடைந்தன்று. - கொளு
மதிலுக்காகப் போரிட்ட இரு வேந்தரும் அம்மதிலின் அடியிலேயே மாண்டது
நாவல் பெயரிய ஞாலத் தடியடைந்
தேவ லெதிரா திகல்புரிந்த – காவலர்
வின்னின்ற தானை விறல்வெய்யோற் கம்மதிலின்
முன்னின் றவிந்தார் முரண்.
நாவலந்தீவு எனப் பெயர் கொண்ட இந்த உலகத்தில்
பிறர் ஏவலுக்குக் கட்டுப்படாமல் எதிராளியாகிப் போரிட்ட காவலர் இருவரும்
அம்மதிலின் முன்னேயே அவிந்துபோயினர்

ஆறாவது உழிஞைப்படலம் முற்றிற்று.