வேங்கடம் முதல் குமரி வரை 3/011-033

விக்கிமூலம் இலிருந்து

11. கீழ்வேளூர் கேடிலியப்பர்

ர்நாடக சங்கீத மும்மணிகளில் ஒருவர் ஸ்ரீமுத்து சாமி தீக்ஷிதர். இவருடைய தந்தை ராமசாமி தீக்ஷிதர் வைத்தீசுவரன் கோயில் முத்துக்குமரன் சந்நிதியில் நாற்பது நாட்கள் தவங்கிடந்து பெற்றிருக்கிறார் இவரை. இவர் தம் தந்தையிடமே சங்கீதம் கற்றுக் கொண்டவர். கர்னாடக சங்கீதத்தில் மாத்திரம் அல்ல, வடக்கே காசி போயிருந்த போது ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் பத்ததியையுமே நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார். 'யமுனாகல்யாணி ஜம்பூபதே' 'ஸௌந்திரராஜம் ஆச்ரயே' என்ற இரண்டு கீர்த்தனங்களிலும் தம் வடநாட்டு இசைப்பழக்கத்தை நன்கு காட்டி யிருக்கிறார்.

திருத்தணிகை சென்று மெய்ம்மறந்து முருகனைத் தியானித்திருக்கும்போது ஒரு சிறுவன் இவர் வாயில் கற்கண்டைப் போட்டது போல் கனவு கண்டிருக்கிறார். அன்றைய தினத்திலிருந்து அற்புதம் அற்புதமான கீர்த்தனங்களைப் பாடத் துவங்கியிருக்கிறார். தீக்ஷிதர் கீர்த்தனங்களின் விசேஷம் என்னவென்றால், தலங்களின் மகாத்மியங்கள், இறைவன் இறைவி பெயர், அங்குள்ள தீர்த்த விவரம் எல்லாம் ஏதோ அட்டவணையிட்டுக் கூறுவது போல் இருக்கும். இறைவனைப் பாடிய இவர் மனிதனைப் பாடியதில்லை . இந்த தீக்ஷிதர் ஒருநாள் கீழ் வேளூருக்கு வருகிறார். அங்குள்ள அக்ஷயலிங்கரைத் தரிசிக்க விரும்புகிறார். இவர் தம் அனுஷ்டானங்களையெல்லாம் முடித்துக் கொண்டு கோயிலுக்கு வருவதற்கு முன் அர்ச்சகர் கோயில் வாயிலைப் பூட்டிக்கொண்டு போய் விடுகிறார். இவருக்கோ இவைனைத் தரிசிக்க ஆசை. அடைத்த வாசல் முன்பு நின்றே,

அக்ஷயலிங்க விபோ,
ஸ்வாயம் போ,
அகிலாண்ட கோடியிரபோ!
பாஹி சம்போ!
அக்ஷயலிங்க விபோ

என்னும் அழகிய கீர்த்தனத்தைச் சங்கரனுக்குப் பிரியமான சங்கராபரண ராகத்தில் பாடுகிறார். பக்திப் பரவசமாக இவர் நின்று பாடுவதைக் கேட்ட அக்ஷயலிங்கருக்கே இவரைப் பார்க்கும் ஆவல் மேலிட்டிருக்கிறது. உடனே அவர் கதவைத் திறந்திருக்கிறார். இது நடந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே. முத்து சாமி தீக்ஷிதர் காலம் 1775 முதல் 1853 வரை என்பது பிரசித்தம்.

இப்படி மூடிய கதவைத் திறக்க ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்பு அப்பர் அந்தத் திருமறைக் காட்டிலே பாடினார் என்பது வரலாறு. அங்கு அப்பர் தேவாரம் பாடி, மூடிய கதவைத் திறக்கிறார். இந்தத் தீக்ஷிதரோ நல்ல கீர்த்தனம் ஒன்றைப் பாடி கோயில் கதவைத் திறந்திருக்கிறார். பக்தி வலையில் படுபவன் தானே பரமன். பக்தர்கள் பக்திக்குக் கட்டுப்பட்டு அவன் செய்யாத காரியம் என்று ஒன்று உண்டா ? இப்படி முத்துச்சாமி தீக்ஷிதருக்காக மூடிய கதவைத் திறந்தவர் அக்ஷயலிங்கர். அந்த அக்ஷயலிங்கர் கோயில் கொண்டிருக்கும் தலம் கீழ் வேளூர். அந்தக் கீழ் வேளூர் என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

கீழ் வேளூர், திருவாரூர் நாகப்பட்டினம் ரஸ்தாவில் திருவாரூருக்குக் கிழக்கே ஏழுமைல் தொலைவில் உள்ள சிறிய ஊர். காரிலும் போகலாம்; ரயிலிலும் போகலாம். கீழ்வேளூர் என்றெல்லாம் சொன்னால் ரயிலில் டிக்கெட் வாங்க முடியாது. கீவளுர் என்றுதான் சொல்லி டிக்கெட் கேட்க வேண்டும். ரயில்வேயில் மாத்திரம் என்ன, பஸ்ஸிலுமே அப்படித்தான். ஊர்க்காரரும் நெடுஞ்சாலைப் பொறியர்களும் கீவளூர் என்றுதானே ஊரை அழைக்கிறார்கள். குமரனாம் வேளுக்குத் தேவ உலகத்தில் ஓர் ஊர், பூலோகத்தில் ஓர் ஊர் என்று ஏற்பட்டிருக்கின்றன. தேவலோகத்திலுள்ள ஜரை மேல்வேளூர் என்றும் அழைத்திருக்கிறார்கள் என்பது புராண வரலாறு.

ரோட்டு வழியாகச் சென்றால், தெற்கு நோக்கித் திரும்ப வேணும் கோயில் செல்ல. ரயில் வழியாக வந்தால் வடக்கு நோக்கி வரவேணும். ஊர் சிறியதுதான் என்றாலும் கோயில் பெரிய கோயில். நல்ல உயர்ந்த மதில்களும் கோபுரங்களும் உண்டு. கோயில் மாடக் கோயில், சோழன் கோச்செங்கணான் கட்டிய எழுபது மாடக் கோயில்களில் இது ஒன்று. வெளிப்பிரகாரத்தில் சுதையால் செய்த பெரிய நந்தி கொடிமரத்தை அடுத்திருக்கிறது. இது சந்நிதியை விட்டுத் தென் பக்கம் கொஞ்சம் விலகியிருக்கிறது. இங்கும் நந்தன் போல் ஒரு பக்தன் வந்தானா? அவனுக்காக இறைவன் தந்தியை விலகச் சொன்னாரா என்று அதிசயிப்போம். இங்கு வந்தவன் பக்தன் அல்ல, ஒரு பக்தை. இவளுக்காக, இவள் கற்பு நிலையை மக்களுக்குத் தெரிவிக்கவே, நந்தி விலகி இருக்கிறது. சுதை இதுதான்.

கோயிலில் பூசை செய்து வந்த ஆதிசைவர் ஒருவர், தம் மனைவியுடன் வாழ்கிறார். அந்த மனைவி கருவுற்ற இரண்டாவது மாதத்தில் ஆதி சைவர் இறந்து விடுகிறார். கருமுற்றி உரிய காலத்தில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தப் பையன் வளர்ந்து கற்க வேண்டியதைக் கற்றுச் சிவாகம் பண்டிதன் ஆகிறான். அவன் தன் தந்தை செய்து வந்த பூசைமுறை மான்யங்களைக் கேட்கிறான். தாயாதிகளோ அவன் இறந்து போன ஆதி சைவக் குருக்களுக்குப் பிறந்தவன் இல்லை என்று கூறி, அவரது மனைவியின் கற்புக்கே இழுக்குக் கற்பிக்கிறார்கள். அந்த அம்மையோ அக்ஷய லிங்கரின் சந்நிதிக்கு வந்த குறை இரந்து நிற்கிறாள். பெண்ணின் கற்பைக் காக்க, இறைவன் கையிலிருந்த மழு புறப்பட்டுக் கரகர என்று சுழன்று வருகிறது. அது வரும் வேகத்தைக் கண்டு, நந்தியும் பயந்து விலகிக் கொள்கிறது. பெண்ணின் கற்புக்குப் பழுது. கூறிய தாயாதிகள் தலைகளை வெட்டித் தரை மட்டமாக்கி விடுகிறது மழு. இப்படி மழு எறிந்து கண்டித்து அப்பெண்ணின் கற்பைக் காத்த பெருமானாக அக்ஷயலிங்கர் அமைகிறார். அந்த அவசரத்தில் விலகிய நந்தி அப்படியே இருக்கிறது.

இந்த நந்திக்கு வலப் பக்கமாக நடந்து பின்னர் படிக்கட்டு ஏறித்தான் அக்ஷயலிங்கர் சந்நிதிக்கு வந்து சேர வேணும். படிக்கட்டு ஏறுமுன் இத்தலத்துக்கே விசேஷமான பாலசுப்பிரமணியரைத் தரிசித்து விட வேண்டும். சூரபத்மனை சம்ஹரித்த வெற்றி வேலாயுதனை வீர ஹத்திகள் சூழ்ந்து கொள்கின்றன. இந்த ஹத்திகள் நீங்க இறைவன் கட்டளை இட்டபடியே, பதரி வனமாகிய இந்தத் தலத்துக்கு வந்து நவலிங்க பூசையும் துவாரலிங்க பூசையும் செய்து தவம் இருக்கிறான், அந்த பாலசுப்பிரமணியம்.

மஞ்சளால் பிடித்து வைத்த பிள்ளையார் இருக்கும் இடமே மஞ்சாடி: அவர் பிரதிஷ்டை பண்ணிய நவலிங்கங்களே, கோவில் கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பா வாழ்க்கை, வல்லமங்கலம், பட்டமங்கலம், தேவூர் முதலிய இடங்களில் இருக்கின்றன என்று கூறும் தலவரலாறு, இந்தப் பூசையைச் செய்ய ஒட்டாமல் வீரஹத்திகள் இடையூறு செய்ய, அன்னை பராசக்தி கோர ரூபம் எடுத்து வந்து மைந்தனைக் காக்க முனைகிறாள். நான்கு திசைகளிலும் ஆகாயத்திலும் பரவி நின்று காத்த அம்மையையே கோயிலின் வட பக்கத்தில் அஞ்சு வட்டத்தம்மை என்ற பெயரில் காளி வடிவில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். குமரன் தவம் நிறைவேறுகிறது. வீரஹத்திகள் ஓடுகின்றன. அந்தத் தவக் கோலத்திலேயே பாலசுப்பிரமணியம். இந்தப் பாலசுப்பிரமணியரை வணங்கிவிட்டே படியேறி மேலே போகவேணும். அப்படிப் போனாலும் நம் எதிரே காட்சி கொடுப்பவர் சோமாஸ்கந்த மூர்த்தத்தில் உள்ள அக்ஷயலிங்கரே. அதன்பின் வடக்கே திரும்பினால் தெற்கு நோக்கிய கோலத்தில் சபாபதி தரிசனம் தருவார்.

இந்தச் சபாபதி மற்றக் கோயில்களில் உள்ள சபாபதியைப் போல் இல்லையே என்று தோன்றும் நமக்கு. உண்மைதான். விரித்த செஞ்சடையுடன் முயலகன் மீது நடனமாடும் நிலையில் இருப்பதால் அவர் நடராஜர்தான் என்பதைத் தெரிவோம். ஆனால் சாதாரணமாக உள்ள நான்கு திருக்கரங்களுக்குப் பதிலாகப் பத்துக் கரங்கள். வலது காலை ஊன்றி இடது பாதத்தைத் தூக்கி ஆடுவதற்குப் பதிலாக, இடது காலை ஊன்றி வலது காலை ஏதோ வேணுகோபாலன் கால் வைத்து நிற்பது போல் இடப்பக்கம் வைத்து நிற்கிறாரே இவர் என்றும் எண்ணுவோம். அதற்குள் அர்ச்சகர் இடைபுகுந்து. 'ஆம்! இவர்தான் வலது பாத நடராஜர்' என்பார்.

இன்னும் இச் சந்நிதியிலே சிவகாமி அம்மையுடன், சின்னஞ் சிறிய வடிவில் அகஸ்தியர் இருப்பார். தாளம் போட்டுக் கொண்டு பிரமனும், மத்தளம் கொட்டிக் கொண்டு திருமாலும் நிற்பர். மேலும் லக்ஷ்மி கரதாளம் போட, சரஸ்வதி வீணை வாசித்துக் கொண்டிருப்பாள். ஒரே இசை முழக்கம் இந்த நடன அரங்கிலே. இப்படி ஒரு நடனம் எந்தச் சந்தர்ப்பத்திலே என்று தெரியத் தல புராணத்தையே ஒரு புரட்டுப் புரட்ட வேண்டும். தல புராணம் கூறும்வரலாறு இதுதான். கயிலையில் நடக்கவிருந்த இறைவன் திருமணக்கோலம் காண எல்லோருமே வடதிசை செல்ல, அதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயருகிறது. இந்த உயர்வு தாழ்வைச் சமன் செய்ய இறைவன் குறுமுனியாம் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்புகிறார். தம் திருமணக் கோலத்தோடு தென் திசை வந்து அகஸ்தியருக்குத் தரிசனம் தருவதாகவும் வாக்களிக்கிறார். அதன்படியே தென் திசை வந்து அகஸ்தியர் பொதிகையில் தங்குகிறார். இறைவனும், இறைவி உமை சகிதம் தென்திசை வந்து கீழ்வேளூரில் தரிசனம் கொடுக்கிறார் (இந்தத் திருமணக் கோலக் காட்சியை இன்னும் பல தலங்களில் காட்டியதாக அந்தத் தல வரலாறு கூறும்),

இப்படித் திருமணக் கோலங் காட்டியபோது கீழ்வேளூரில் இருந்த அகஸ்தியருக்கு மட்டும் ஒரு பேராசை,

கால்மாறியாடியவர்

தாண்டவக் கோலத்தையும் தரிசிக்க வேண்டுமென்று. அகஸ்தியர் வேண்டியபடியே தாண்டவக் கோலத்தில் ஒரு புதிய கோலத்தை ஆம், கால் மாறி ஆடிய கற்பகமாக நின்று காட்சி கொடுக்கிறார். கால் மாறி ஆடியதற்கு மதுரைத் திரு விளையாடல் புராணத்தில் ஒரு வரலாறு உண்டு. அப்படிப்பாக அங்குள்ள வடிவம் ஒரு நல்ல தாண்டவத் திரு உருவம் கல்லிலே. இங்கு கீழ் வேளூரில் இருப்பது செப்புச் சிலைவடிவில். கால் மாற்றியிருப்பதைத் தவிரத் தாண்டவமாகவே இல்லை. இறைவன் ஆடியது எழுவகைத் தாண்டவம் என்பர். அவற்றுள் எந்தத் தாண்டவத்திலும் வைத்து எண்ணப்படத்தக்கதில்லைதான். என்றாலும் ஆனந்தத் தாண்டவக் கோலத்தையே கோயில்கள் தோறும் பார்த்த நமக்கு, கலை அன்பர்களுக்கு ஒரு நல்விருந்து இப்புதிய நடராஜ வடிவம்.

அந்த நடனராஜனையும் சிவகாமியையும் தரிசித்த பின்னர் அர்த்த மண்டபத்தில் சென்று அக்ஷயலிங்கரை வணங்கலாம். அப்படி வணங்கும்போது ஓதுவார் ஒருதேவாரம் பாடுவார்.

சொல் பாவும் பொருள் தெரிந்து
தூய்மை நோக்கி, மனத்திருளை
வாங்காதானை,

நல் பான்மை அறியாத
நாயினேனை நன்னெறிக்கே
னசெல்லும் வண்ணம் நல்கினானே!

பல்பாவும் வாயாரப் பாடி ஆடி,
பணிந்து எழுந்து, குனிந்து
அடைந்தார் பாவம் போக்க

இல்ப்பானைக் கீழ் வேளூர் ஆளும்
கோவை, கேடு இலியை
நாடும் அவர் கேடிலாரே

என்று அப்பர் தேவாரமாக இருக்கும். இதில் இறைவனைக் 'கேடு இலி' என்பானேன் என்று கேட்கத் தோன்றும். க்ஷயம் என்றால் கேடு; அ என்றால் இல்லை. ஆதலால் அக்ஷயலிங் கரைக் கேடிலி என்று தமிழ்ப்படுத்துவது எவ்வளவு அழகு. இத்தலத்துக்கு வந்த சம்பந்தரும் சுந்தரரும் இத்தலத்தில் உள்ள இறைவனைக் கீழ் வேளூரான் என்று மட்டுமே பாட, அப்பர் மட்டும் அவனைக் 'கேடிலி' என்ற ஒரு நல்ல பெயராலேயே அழைக்கிறார்.

இனி, கோயில் மாடத்தை விட்டுக் கீழே இறங்கலாம். பிரமன், இந்திரன், அக்கினி, யமன் இன்னும் எண்ணிறந்தோர் அங்கு வழிபட்டு முத்தியடைந்திருக்கிறார்கள் என்பர் அர்ச்சகர்கள். அதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க நமக்கு நேரம் இருக்காது. அப்பர் சொல்லியதைவிட, இந்த அர்ச்சகர்கள் என்ன புதிதாகச் செய்துவிடப் போகிறார்கள்? இந்தக் கோயிலின் வடபக்கத்தில் தனிக் கோயில் கொண்டிருக்கும் இறைவியைத் தரிசிக்க வேண்டாமா? ஆம்! அவளே சுந்தர குசாம்பாள்; அவளையே வனமுலை நாயகி என்று சம்பந்தர் தேவாரத்தில் குறிப்பிடுகிறார். அப்பர் இறைவனுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர் கொடுத்தால், சம்பந்தர் இறைவிக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர் கொடுக்கிறார். இவளையே பதரி வன மூல நாயகி என்றும் அழைக்கிறார்கள். இந்த இடமே இலந்தைக் காடாகத் தான் இருந்திருக்கிறது அன்று. அது காரணமாக இத்தல விருக்ஷம் கூட, இலந்தை மரமாகத்தானே இன்றும் இருக்கிறது. அம்பிகை இடது கையைத் தொடையில் வைத்து வலது கையைத் தூக்கி அபயம் அளிக்கும் கோலம் காணக் காண அழகு பயப்பது. ஆனால் இன்னும் கொஞ்சம் நட்ந்து கீழ்ப் பக்கம் வந்தால், இந்த சுந்தர குசாம்பிகையே, காளி உருவில் அஞ்சு வட்டத்து அம்மன் என்ற பெயரில், வடக்கு நோக்கியவளாய்த் தனிக் கோயிலில் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயில் வாயிலில் இருக்கும் துவார பாலகிகளைக் கண்டாலே அச்சம் எழும்.

உள்ளேயுள்ள அஞ்சு வட்டத்தம்மை நம் உள்ளத்தில் அச்சம் பிறக்கும் நிலையில் இருந்தால் வியப்பில்லைதானே. பால சுப்பிரமணியனை, நான்கு திசைகளிலும், வானில் இருந்தும் துயரங்கள் நெருங்காதபடி காக்க அவள் அத்தகைய கோர உருவம் எடுக்கவேண்டியிருந்திருக்கிறது. சுதையால் ஆன வடிவம்தான். நமக்கு ஐந்து திசைகளில் இருந்து மாத்திரம் துன்பங்கள் வருவதில்லையே. ஆயிரம் திசைகளிலிருந்து அல்லவா வருகின்றன. அத்தனை துயரையும் தடுத்து நிறுத்தி நம்மை வாழ்விக்க அஞ்சு வட்டத்தம்மை, ஆயிரம் வட்டத்து அம்மையாக உருவெடுக்க வேண்டியதுதான். அப்படி உருவெடுத்து நம் துயர்களைக்களைய அவளை வேண்டிக்கொள்ளலாம். இங்குள்ள இறைவன் கேடு இல்லாதவர் என்று கண்டோம். இவர் மாத்திரம் கேடு இல்லாதவராக வாழ்ந்தால் நமக்கு என்ன பிரயோஜனம்? நமக்கும் கேடு வராமல் காக்க அல்லவா தெரிந்திருக்க வேணும். அந்த வேலையைத்தான் அஞ்சு வட்டத்து அம்மையிடம் கொடுத்திருக்கிறாரே அவர்; அது போதாதா?

இக்கோயில் பழைய கோயில் என்பதனை, இது மாடக் கோயிலாய், கல்லாலேயே விமானம் அமைந்திருப்பதிலிருந்து தெரியும். இன்னும் இங்குள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்தால் திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜ தேவசோழன் இக்கோயிலுக்கு அளித்த பூதான விவரம் எல்லாம் தெரியும். தஞ்சை மராத்திய மன்னர்களான துகோஜி மகாராஜா துளஜாஜி மகாராஜாக்கள் எல்லாம் செய்த திருப்பணிகள், அவர்கள் செய்து வைத்த திரு ஆபரணங்களைப் பற்றிய விவரங்களும் தெரியும். இவற்றை யெல்லாம் தெரிய ஆவலுடையவர்கள் ஆற அமர இருந்து ஆராய்ச்சி பண்ணலாம். கேடிலியைத் தரிசிப்பதோடு திருப்தியடைகிறவர்கள் திரும்பி வந்து விடலாம்.