வேங்கடம் முதல் குமரி வரை 3/022-033

விக்கிமூலம் இலிருந்து

22. தென்னரங்கத்து இன்னமுதன்

லங்கை ஓர் அழகான தீவு. இந்தியத் தாயின் கழுத்தில் அணியும் நித்திலப் பதக்கம்போல் அமைந்த தீவு. ஆகவே அதனை நித்திலத் தீவு என்றனர் கவிஞர்கள். நாற்புறமும் கடல் சூழ்ந்து நடுவே மலைச்சிகரம் உயர்ந்து எங்கும் பசுமை கொழித்துக் கொண்டிருக்கும் நாடு அது. காடெல்லாம் பசுமை, மலை எல்லாம் பசுமை, காணும் வயலெல்லாம் பசுமை என்னும்படி தென்னை, கமுகு, வாழை நிறைந்திருப்பதுடன் மலைச் சிகரங்களையெல்லாம் தேயிலைச் செடிகள் வேறே மூடிக் கொண்டிருக்கும், அந்த நாட்டில் கருமையே இல்லை. வானுலாவும் கார்மேகங்களையும், தெருக்களிலே பறந்து செல்லும் மோட்டார் கார்களையும் தவிர வேறு கருமையை அங்கு காண்பதே அரிது. இப்படி வளம் கொழிக்கும் இலங்கையில், சைவம் என்றும் நிலைபெற்று நின்றிருக்கிறது. பௌத்தம் வந்து சேர்ந்திருக்கிறது.

ஆனால் இந்த வைணவம் மட்டும் அங்கு சென்று சேரவில்லை. அந்த மகாவிஷ்ணுவே அங்கு செல்ல மறுத்திருக்கிறார். 'பாஸ்போர்ட்', 'விசா' எல்லாம் கிடைக்கவில்லையோ என்னவோ? விஷ்ணு அங்கு செல்ல மறுத்த காரணம் தெரிய நாம் பழைய இதிகாச காலத்துக்கே செல்ல வேண்டும். இலங்கையில் மலைமேல் கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறான் இராவணன். அவன் அயோத்தி ராமனின் மனைவி சீதையை எடுத்துச்சென்று அசோக வனத்தில் சிறை வைத்திருக்கிறான். சிறையிலிருந்து செல்வியை மீட்க ராமன்படை திரட்டிக் கொண்டு இலங்கைக்கே சென்றிருக்கிறான்.

ராவணன் தம்பி விபீஷணன் ராமனுடன் சேர்ந்து அவன் வெற்றி பெற உதவியிருக்கிறான். ராவணன் வதம் முடித்துத் திரும்பும்போது, இலங்கையையே விபீஷணனுக்குத் தந்து அவனுக்கு அங்கே முடிசூட்டியிருக்கிறான். பின் தம் துணைவியாம் சீதையுடன் அயோத்தி திரும்பித் தானும் பட்டாபிஷேகம் செய்து கொண்டிருக்கிறான் ராமன், இந்தப் பட்டாபிஷேக விழாவுக்கு வந்த விபீஷணனுக்குப் பரிசாகத் தான் ஆராதித்து வந்த அரங்கநாதனையே கொடுத்திருக்கிறான். அரங்கனோடு கூடிய விமானத்தையே எடுத்துச் சென்ற விபீஷணன் காவிரிக்கரை சேர்ந்ததும் அங்கு நீராட எண்ணி விமானத்தை அங்கே இறக்கியிருக்கிறான். அவ்வளவுதான்; நீராடி விட்டு விபீஷணன் விமானத்தை எடுத்தால் அவனால் எடுக்க முடியவில்லை. அரங்கனும் இந்த இடத்தை விட்டுக்கிளம்ப மறுத்து விடுகிறான். விபீஷணன் ஏமாற்றத்தோடு, வெறுங்கையனாகவே இலங்கைக்குத் திரும்பியிருக்கிறான். என்றாலும் விபீஷணன் வேண்டிக் கொண்டபடி இலங்கையை நோக்கிய வண்ணமாகவே காவிரிக் கரையில் சயனித்துவிடுகிறான் அரங்கன்.

குடதிசை முடியை வைத்து,
குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டி,
தென்திசை இலங்கை நோக்கி

அரவணையில் துயில்பவனாகத்தானே இன்னும் காட்சி கொடுக்கிறான் அரங்கநாதன். அந்த அரங்கநாதனைக் காணவே ஸ்ரீரங்கம் செல்கிறோம் நாம் இன்று.

அரங்கன் கோயிலுக்குச் செல்ல வழி ஒன்றும் சொல்ல வேண்டாம். ‘பணியரங்கப் பெரும்பாயல் பரஞ்சுடரையாம் காண, அணியரங்கம் தந்தானை அறியாதார்' என்று ஆயிரம் வருஷ அறியாதார்க்கு முன்பே பாடி வைத்திருக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். அவனைத் தென் தமிழ் நாட்டினர் மாத்திரம் அல்ல மற்ற வடநாட்டினருமே நன்கு அறிவார்கள். திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கி மேற்கு நோக்கி நான்கு பர்லாங்கு நடந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம். இது தவறு. கோயிலின் பிரதான வாயிலுக்கு வருமுன் கோயிலைச் சுற்றிக் கட்டியுள்ள மதில்களையெல்லாம் கடக்கவேணுமே. மதில் முக்கால் மைல் சதுர விஸ்தீரணத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறது. ஏழாவது மதில் சுவரின் நீளம் 3072 அடி; அகலம் 2521 அடி என்றால் கோயில் எவ்வளவு பெரியது என்று தெரியுமல்லவா? சப்த லோகங்களுமே இக் கோயிலின் சப்த பிரகாரங்களாக அமைந்திருக்கின்றன என்பர்.

இங்கு இந்த மதில்கள் எழுந்த வரலாறே சுவையானது. அன்று விபீஷணன் கொண்டு வந்த ரங்க விமானமும், ரங்கநாதனுமே காவிரி மணலில் புதைந்து விடுகிறார்கள். காடு மண்டிவிடுகிறது. தர்மவர்மா என்னும் சோழ மன்னன் வேட்டைக்கு வந்தபோது ஒரு கிளி அவன் காதில் அங்கு ரங்க விமானம் புதையுண்டு கிடந்த ரகசியத்தைச் சொல்கிறது. காடு வெட்டி நிலந்திருத்திச் சோழ மன்னன் ரங்கவிமானத்தை வெளிக் கொணர்கிறான். கோயில் கோபுரம், விமானம், மண்டபம் எல்லாம் கட்டி அரங்க நாதனை அங்கு கிடத்தி வைக்கிறான். கிளி சொன்னதை மறக்காமல் கிளி மண்டபம் ஒன்றையும் கட்டுகிறான். தன் பெயரால் தர்மவர்மா பிரதக்ஷிணம் ஒன்றையும் எழுப்புகிறான். இவன்றன்பின் வந்த மன்னரும் மக்களும் ஒவ்வொரு பிரகாரமாகக் கட்டி முடிக்கிறார்கள். இப்படி எழுந்த பிரதக்ஷிணங்களும் மதில்களும் ஆறு. அவைதாம் ராஜ மகேந்திரன் பிரதக்ஷிணம், குலசேகரன் பிரதக்ஷிணம், ஆலி நாடன் பிரதக்ஷிணம், அகளங்கன் பிரதக்ஷிணம், திரு விக்ரமன் பிரதக்ஷிணம், மாட்ட மாளிகைப் பிரதக்ஷிணம் என்பவை, ஏழு மதில்களையும் ஏழு ஆடைகளாக வனைந்திருக்கிறான் அரங்கநாதன் என்பர். இதனையே அடைய விளைஞ்சான் என்றும் கூறுவர் பாமர் மக்கள். இந்த மதில்கள் எல்லாம் யார் யாரால் எப்போது எப்போது கட்டப்பட்டன என்று விரித்தல் இயலாது. ஒன்று மட்டும் சொல்லாமல் இருக்கவும் முடியாது. இந்தக் கோயிலுக்குப் பெரிய மதிலைக் கட்டியவன் ஆலி நாடனான திருமங்கை மன்னனே. அவனது காதலி குமுதவல்லியின் விருப்பப்படி பரம பாகவதர்களுக்குத் ததியாராதன கைங்கர்யம் செய்வதை மேற்கொள்கிறான்.

தன்கையில் பொருள் இல்லாத போதெல்லாம் வழிப்பறி செய்கிறான். இவனுக்கு அருள் பாலிக்கவே அரங்கனும் அவன்துணைவி ரங்நாயகியும், திருமணத் தம்பதிகளாக வந்து இந்த மங்கை மன்னனாம் கலியன் கையில் சிக்கிக் கொள்கிறார்கள். கலியனும் அந்த ஆடை அணிகளையெல்லாம் கவர்ந்து கொள்கிறான். கவர்ந்த பொருளையெல்லாம் மூட்டையாகக் கட்டியபோது அதை எடுத்துச் செல்ல இயலாதவனாக நின்றிருக்கிறான். அப்படி. எடுக்க இயலாதபடி. செய்த மந்திரம் என்ன என்று கேட்டபோது, மணவாளக் கோலத்தில் வந்த அரங்கன் நாராயணனது அஷ்டாக்ஷர மகா மந்திரத்தையே உபதேசித்திருக்கிறான். இவ்வாறு ஞானோதயம் பெற்ற கலியனே பின்னர் திருப்பதிகள் பலவற்றுக்கும் சென்று பாடிப் பாடி நாராயணனைப் பரவியிருக்கிறான். தேடிச் சேர்த்த பொருளை எல்லாம், அரங்கனுக்கு மதில் கட்டுவதிலேயே செலவழித்திருக்கிறான். இவன் கட்டிய மதிலே ஆலிநாடன் திருமதில் என்ற பெயரோடு நின்று நிலவுகிறது இன்றும்.

ஏழு பிரகாரங்களோடு கூடிய இந்தக் கோயிலுக்கு இருபத்தொரு கோபுரங்கள். அவைகளில் முக்கியமானவை இரண்டு; ஒன்று கீழ்ப்பக்கம் உள்ள வெள்ளைக் கோபுரம்.
விமானம் தென்னரங்கம்

மற்றொன்று தென்பக்கம் உள்ள நான்முகன் கோபுரம். கோயிலுள் நுழையும் பிரதான வாயில் இந்த நான்முகன் கோபுர வாயிலே தென்திசை நோக்கி அரவணையில்துயிலும் அரங்கநாதனைத் தரிசிக்கத் தென் வாயில் வழியாகச் செல்வதுதானே முறை. இந்த வாயில்வரை வண்டியும் காரும் செல்லும். இதற்கும் தெற்கே மண்டபங்கள், முற்றுப் பெறாத கோபுரம் எல்லாம் உண்டு. இனி நாம் நான்முகன் கோயில் வாயிலைக் கடந்து உள்ளே செல்லலாம். அப்போது உங்கள் முன் நிற்பது ரங்க மண்டபம். அதையும் முந்திக்கொண்டு ஒரு நாலுகால் மண்டபம். அதில் முறுக்கு மீசையும் திருகிக் காட்டிய கொண்டையும் உடைய ஒரு பெரியவர் கூப்பிய கையராய் நிற்பார் சிலை உருவில். இவரையே கம்பர் என்பார்கள், அந்த ராமகாதை எழுதிய கபைக் கம்பருக்கும் இந்தச் சிலைக் கம்பருக்கும் யாதொரு ஒற்றுமையும் காண இயலாது. இவர் அந்த ரங்கமண்டபம் கட்டிய நாயக்க மன்னர்களில் ஒருவராக இருக்கலாம்.

ரங்க மண்டபம் - கார்த்திகை மண்டபம் எல்லாம் கடந்துதான் பிரதானக் கோயிலுள் நுழைய வேணும். அங்குள்ள பெரியதொரு மண்டபத்தில் கருடாழ்வார் பெரிய வடிவில்
வெள்ளைக்கோபாம்

அரங்க நாதனைச் சேவித்த வண்ணம் நின்று கொண்டிருப்பார். அவரையும் வணங்கி விட்டு மேல் நடந்தால் அடுத்த கட்டு. அங்கே பொன் போர்த்த கொடி மரம், பலிபீடம் எல்லாம். அவை இரவில் மின்விளக் கொளியில் கண்டால் சோதி மயமாக இருக்கும். இவற்றை யெல்லாம்கடந்துதான் கருவறைப் பக்கம் வரவேணும். இங்குள்ள கருப்பக் கிருஹம் பிரணவாகாரத்தில் அமைந்திருக்கிறது. அந்தக் கருவறையின் பேரில் உள்ள விமானம்தான் ரங்கவிமானம். அந்த விமானத்துக்கே பொன் தகடு வேய்ந்து அதில் பரவாசு தேவனையும் உருவாக்கி நிறுத்தியிருக்கிறார்கள். இந்த விமானமே ஆதியில் விபீஷணன் எடுத்து வந்த விமானம் என்பர். இந்த விமானத்தோடு கூடிய கருவறையிலேயே அரங்கநாதன் அறிதுயில் கொள்ளுகிறான். 'கருது செம்பொனின் அம்பலத்தில் கடவுள் நின்று நடிக்கிறான்' என்று பாடிய கவிஞன், இந்தக் 'காவிரித் திருநதியிலே கருணை மாமுகில் துயில்வதையும்' பாட மறக்கவில்லை. சுமார் பதினைந்து அடி நீளமுள்ள கருவறையை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான் ஆதிசேடன். அவனது பாயலில் அழகாகக் கண்வளருகிறான் அரங்கநாதன். இரண்டு திருக்கரங்களே அவனுக்கு. ஒரு கை தலையைத் தாங்க மற்றொரு கை முழங்கால் வரை நீண்டு கிடக்கிறது. ஆதிசேடனும், அரங்கநாதனும் சுதை உருவில் உருவானவர்களே.

ஆதிசேடன் பொன் முலாம் பூசிய தகடுகளால் பொதியப்பட்டிருக்கிறான். அரங்கனோ நல்ல கன்னங்கரிய வடிவினனாகத் தைலக் காப்புக்குள்ளே புதையுண்டு கிடக்கிறான், அகன்ற மார்பிலே முத்தாரம், கௌஸ்துபம், வனமாலை எல்லாம் புரள்கின்றன. தலையிலே நீண்டுயர்ந்த கிரீடம் அணி செய்கிறது. இத்தனை கோலத்துடன் இருக்கும் அவன் தனிமையை நாடியிருக்கிறான். என்றும் இணைபிரியாத துணைவியரான ஸ்ரீதேவி பூதேவிகளுக்குக் கூட அங்கு இடம் இல்லை. நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவும் எழவில்லை. இதற்கெல்லாம் ஈடு செய்யவே அந்தக் கிடந்த கோலத்தின் முன்பு நின்ற கோலத்தில் செப்புச் சிலை விடிவில் அழகிய மணவாளன் இரண்டு அணங்குகளோடு தங்க மஞ்சத்தில் நின்று கொண்டிருக்கிறான். இந்த உத்சவரே வெளியில் எல்லாம் எழுந்தருளிப் பக்தர்களுக்கு எல்லாம் காட்சி தருகிறார். இருவரையும் கண்குளிரத் தரிசித்தபின் வெளிவந்து பிரகாரங்களை யெல்லாம் சுற்றிக் கொண்டு மேலே நடக்கவேணும்.

இந்த அரங்கநாதன், தன்னை ஆராதித்து வந்த ராமனைப்போல் ஏகபத்னி விரதன் அல்ல. எப்போதும் உள்ள ஸ்ரீதேவி பூதேவியோடு இன்னும் ஐந்து பேர்கள் இவனது மனைவியர். அதனால்தானோ என்னவோ தனிமையை விரும்பிக் கருவறையில் ஒருவரையுமே நுழைய விடாமல் கதவடைத்துக் கொண்டிருக்கிறான். எத்தனை மனைவியர் இருந்தாலும் இவனது பட்டமகிஷி ஸ்ரீரங்கநாயகிதான். இவள் தனிக் கோயிலில் குடியிருக்கிறாள். ரங்கநாதரைத் தரிசித்த பின் கொஞ்சம் சுற்றி வளைத்து நடந்தே இவள் கோயிலுக்குச் செல்லவேணும், செல்லும் வழியிலே ஒரு மண்டபம். அங்குதான் கம்பனது ராமாயண அரங்கேற்றம் நடக்கும்போது சித்திரத்தில் தீட்டிய நரசிம்மமே தலையசைத்துச் சிரக்கம்பம் செய்து பாராட்டியது என்பது வரலாறு. அந்த மண்படத்தை எல்லாம் கடத்தே ஸ்ரீரங்கநாயகி சந்நிதிக்கு வரவேணும். அவள் படிதாண்டாப் பத்தினி. அவள் உத்சவகாலங்களில் கூடத் தன் கோயிலை விட்டு வெளியே வருவதில்லை.

ஸ்ரீரங்கநாதர்தான் அவளைத் தேடிக்கொண்டு அவள் கோயிலுக்கு வருகிறார். ரங்கநாயகிக்கு அடுத்த படியாக ரங்கநாதருக்கு உகந்த மனைவி உறையூர் கமலவல்லிதான், உறையூரிலிருந்து அரசாண்ட நந்தசோழன் மகள் அவள். தாமரை ஓடையிலே கமல மலர்களோடு மலராகப் பிறந்தவள் இக்கமலவல்லி. இவள் அரங்நாதனிடம் ஆராத காதல் கொள்கிறாள். அதிரூப சுந்தரியான இவளை மணக்க இந்த ரங்கநாதருக்குக் கசக்கவா செய்யும்? அவளையும் மணந்து கொள்கிறான். அதன்பின் அரங்கத்திலும் உறையூரிலுமாக இருந்து வாழ்கிறான். இக்கமல்வல்லியைப் போலவே சேரமன்னன் குலசேகரப் பெருமானது மகள் சேரகுலவல்லியும் ரங்நாதனையே காதலித்து மணந்து கொள்கிறாள்.

இவர்களைத் தலிர, ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெரியாழ்வார் திருமகளாக அவதரித்த ஆண்டாளும் இந்த ரங்கநாதனிடத்திலே காதல் கொள்கிறாள். அவளுக்கும் இந்த அரங்கநாதன் ரங்கமன்னாராகவே சேவை சாதித்து அவளையும் மணந்து கொள்கிறான். இவர்கள் எல்லாம் போகட்டும்; டில்லி சுல்தானின் மகள் ஒருத்தியின் உள்ளத்திலும் அல்லவா இவன் காதல் விதை விதைக்கிறான்! முகமதியர்கள் இந்த நாட்டைப் படையெடுத்து இங்குள்ள கோயில் கோபுரங்களை யெல்லாம் இடித்துத் தரை மட்டமாக்கியதெல்லாம் சரித்திரம் கூறும் உண்மை. இப்படிப் படையெடுத்த பாதுஷா ஒருவன், ஸ்ரீ ரங்கம் வரை வந்து இங்குள்ள பல விக்கிரகங்களை எடுத்துச் சென்றிருக்கிறான். விக்கிரகங்களோடு விக்கிரமாக அழகிய மணவாளனுமே சென்றிருக்கிறான். ஆனால் பாதுஷாவின் மகள் இந்த அழகிய. மணவாளனின் அழகில் ஈடுபட்டு அவனை மட்டும் தன் அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறாள். அவன் அழகுக்கு அடிமையாகியிருக் கிறாள்.

பின்னர் ஸ்ரீ ரங்கத்து ஸ்தலத்தார் பாதுவாவை அணுகி அவன் எடுத்துச் சென்ற அழகிய மணவாளைைனத் திரும்பத் தரக் கேட்டிருக்கிறார்கள். பாதுஷாவும் தன் மகள் தூங்கும் சமயம் அறிந்து அழகிய மணவாளனை அவர்களிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறான். விழித்தெழுந்த பாதுஷாவின் மகள் தன் அழகிய மணவாளனைக் காணாது, அவனைத் தேடி ஸ்ரீரங்கத்துக்கு ஓடி வந்திருக்கிறாள். இத்தனை பிரேமை கொண்ட மங்கையை இந்த அரங்கநாதன் பின்னர் மணந்து கொண்டதில் வியப்பில்லை. இந்தப் பாதுஷா மகளே துலுக்க நாச்சியார் என்ற பெயரிலே, ஸ்ரீரங்கம் கோயிலுக்குள்ளேயே தனிக் கோயிலில் இருக்கிறாள். சித்திர உருவிலே இக்கோயிலில் உறையும் பெருமாளுக்கு நிவேதனம் ரொட்டியும் வெண்ணெயும், அக்காரடிசிலும் அரவணையும் அந்தப் பாதுஷா மகளுக்கு ஒத்துக் கொள்ளாதே. பின்னர் அவள் கொடுப்பதைத்தானே இவன் ஏற்றுக் கொள்ள வேணும். இதற்கென்றே மாமனாராகிய பாதுஷா கொற நாட்டில் இரண்டு கிராமங்களையே சீதனமாக வேறு கொடுத்திருக்கிறராம்.

இப்படி யெல்லாம் மனைவியர் பலரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாரே, இதுசரிதானா என்று ஒரு கேள்வி, கண்ணனாகக் கோகுலத்தில் அவதரித்தபோதும் இவர் எண்ணிறந்த கோபியரது காதலனாக வாழ்ந்திருக்கிறாரே. பெருமாளைப் பதியாக உடைய உயிர்களாகிய பக்தர்கள் எல்லோரும் எப்போதுமே தவங்கிடக்கிறார்கள். அருளாளனான பெருமானும் அவர்களை யெல்லாம் தன் காதலிகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை, இந்தத் தத்துவ உண்மையை விளக்குவதற்கே இத்தனை திருவிளையாடல்கள் என்று மட்டும் நாம் தெரிந்து கொண்டால் உண்மை என்ன என்று விளங்கும் அல்லவா?

அரங்கனையும் அவனது துணைவியரையும் தரிசித்து விட்டுத் திரும்பி வெளியே வரும்போது கலை அன்பர்கள் கண்டுகளிக்க வேண்டிய சிறிய கோயில் ஒன்று இங்கு உண்டு. அதுதான் ரங்க மண்டபத்தை அடுத்த வேணுகோபாலன் சந்நிதி. அங்கே உள்ள வேணுகோபாலனை விட அவனைச் சுற்றி நிற்கும் கோபியர்கள் அழகு அழகான சிற்ப வடிவத்தினர். அரங்கத்து அரவணையான் கோயில் சரித்திரத்தைப்பற்றி எளிதாகச் சொல்லிவிட முடியும் என்று தோன்றவில்லை. ராமானுஜர், கோயில் நிர்வாகத்தைச் சீர்செய்திருக்கிறார். மணவாள மாமுனிகள் கைங்கர்யங்கள் பல செய்திருக்கிறார். விஜயநகர சாம்ராஜ்ய நாயக்க மன்னர்களே கோயிலை விரிவாகக் கட்டிப் பல நிபந்தங்கள் ஏற்படுத்திச் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்கள்.

இந்த அரங்கத்து அரவணையானை ஆழ்வார்கள் எல்லோரும் பாடியிருக்கிறார்கள். பதின்மர் பாடிய பாண்பெருமாள் என்ற புகழ் இவர் ஒருவருக்குத்தானே.

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே

என்ற தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரது பாடலை எத்தனை தரம் வேண்டுமானாலும் பாடிப் பாடிப் பரவலாமே. 'திருவரங்கப் பெருநகருள், தெண்நீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு களிக்கும்' குவசேகரது பக்தி எவரது பக்திக்குக் குறைந்தது? அரங்கத்து இன்னமுதரது குழல் அழகிலும், வாய் அழசிலும் தன்னை இழந்து நின்றவள் ஆண்டாள், பெரியாழ்வாரோ,

எய்ப்பு என்னை வந்து நலியும்போது
அங்கு ஏதும் நான் உன்னை
நினைக்கமாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி
வைத்தேன், அரங்கத்து அரவணைப்
பள்ளியானே!

என்று முன்கூட்டியே எச்சரிக்கை செய்து வைத்து முக்தி பெற வழி சொல்லுகிறார். அரங்கனும் இவர்களுக்கெல்லாம் அருள் செய்தது போல், நமக்கெல்லாம் அருள் செய்யத் தவறமாட்டார் என்று உறுதியோடு ஒரு பக்தர் கூறுகிறார் !

நாவுண்டு, நீ உண்டு, நாமம் தரித்தோதப் பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ - பூவுண்டு
வண்டுறங்கு சோலை மதில் அரங்கத்தே உலகை
உண்டு உறங்குவான் ஒருவன் உண்டு.