கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/வெற்றியும் வெகுமதியும்

விக்கிமூலம் இலிருந்து

14. வெற்றியும் வெகுமதியும்

இவ்வாறு ஆர்வத்துடன் உடல் அழகைப் பெருக்கி, ஆண்மையைக் காத்து, திறமையை வளர்த்து பதினோரு மாதங்கள் கடுமையான பயிற்சி செய்து, ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றால் - என்ன பரிசுதந்தார்கள் என்று கேட்கலாம் பரிசு என்பது இலையும் மலரும் கொண்ட ஓர் மலர் வளையம்.

ஆலிவ் என்ற மரத்தின். இலைக்குச்சி மலர்களால் ஆன மலர் வளையம் மலர் வளையமா? இதற்கா இத்தனைப்பாடு? இதற்காகவா இத்தனைப் போராட்டம்? ஆர்ப்பாட்டம்? ஆலிவ் மலர் வளையத்திற்கா இத்தனை ஓட்டம் கூட்டம் எல்லாம்? ஆமாம்! அங்கேதான் கிரேக்கர்களின் தெய்வ பக்தியே நிறைந்து கிடக்கிறது. சிறந்து விளங்குகிறது.

புதிய ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றி பெற்ற வீரர்களுக்குத் தங்கப் பதக்கங்களும், வெற்றியைத் தொடர்ந்தோர்களுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் கொடுக்கின்றார்கள். ஆனால், முன்னாள் ஒலிம்பிக் பந்தயத்தில் ஆலிவ் மலர் வளையம் மட்டுமே சூட்டி மகிழ்ந்தார்கள்.

ஆலிவ் மலர்வளையம் செய்யப் பயன்படுகின்ற ஆலிவ் மரங்கள். தற்போது ரூபியா என அழைக்கப் பெறும் ஆல்பியஸ் என்ற ஆற்றின் கரையிலே வளர்ந்தவை. அவை சிறப்பும் தெய்வாம்சமும் மிகுந்த சீயஸ் கோயிலின் அருகிலே வளர்ந்தமையால், மேலும் புனிதத்தன்மைபெற்று விளங்கின.

அந்த ஆலிவ் மலர் வளையத்தை மணி முடியில் தாங்கிய வெற்றி வீரன். மாபெரும் புண்ணியம் செய்தவன் என்று மக்களால் மதிக்கப் பெற்றான். பாராட்டப் பெற்றான்.

ஆலிவ் மலர் வளையம் சூட்டப்பெற்ற வீரன், அவன் பிறந்த நகரத்திலே சிறந்த பெரிய மனிதனாகக் கருதப்பட்டான். அவனுக்கு மக்கள் தந்த அன்பளிப்புகள், அரும்பரிசுகள் அனைத்தும் மலைபோல் குவிந்து கிடக்கும். நகரத்தைச் சுற்றி மதில்களும், மக்கள் நுழைந்து உள்ளே வர பெரிய வாயில்களும் உள்ள அந்நகரத்திலே இந்த ஒலிம்பிக் வீரன் உள்ளே வர பலர் பயன்படுத்தும் பாதையில் வராமல். நெடிதுயர்ந்த மதிலில் நுழைவாயில் ஒன்றை அமைத்து, தனியாக அவ்வீரனை மட்டும் வரச்செய்வார்களாம்.

இவ்வாறு தனி வழியே செல்லும் இனிய புகழ்கொண்ட அந்த எழில்மிகு வீரனுக்கு காலமெலாம் உணவும், உடையும், உறங்க இல்லமும் இலவசமாகவே கிடைக்கும். இத்தனைக்கும் மேலாக, இன்னுமொரு பெருமையும் கிடைக்கும், வெற்றி பெற்ற வீரனின் பெயரைத் தெருக்களுக்கும் சூட்டுவார்கள் நகரத்தார்கள். அவன் வாழ்க்கையிலே ஓர் உயர்ந்த நிலையை அடைந்துவிடுகிறான் என்பதைக் காணும் மக்கள், ஏன் ஒலிம்பிக் பந்தயத்திற்காக உயிரைக் கொடுத்துப் பழகமாட்டார்கள்? பயிற்சி செய்ய மாட்டார்கள்? நாடே போற்றும் நிலையை, வீரர்களிலே வெற்றி பெற்றவனைக் கண்ட ஒருவன், தன் நண்பனைப் பார்த்துக் கூறுகிறான்!

உணக்கு வந்த புகழும் பொருளும் அளவு கடந்தவை நீ வாழ்க்கையில் பெற முடியாத இன்பத்தை யெல்லாம் பெற்றுவிட்டாய், இனி நீ இறந்துபோனாலும் பரவாயில்லை என்று அவன் அடைந்த சுகத்தின் அளவை வருணிக்கும் தன்மையைப் பார்க்கும்போது, வெற்றி வீரன் பெற்ற மாபெரும் புகழ் இனிதே நமக்கு விளங்கும்.

வீரனுக்குப் புகழ் நிரம்பும், சிலை எழும்பும்... அவனைப் புகழ்ந்து பாடல்கள் பிறக்கும், இத்தனையும் வெற்றி வீரனுக்குத்தான்.

ஒலிம்பிக் பந்தயத்திலே கலந்து கொண்டு தோற்றவனுக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? தலை குனிவுதான்; அவமானம்தான், சரிதான் கிடக்கட்டும் என்ற சமாதானம் கூட கூறவேண்டாம்!.... எவரும் ஏறெடுத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்... ஏளனப் பார்வை எதிரே வந்து அவர்களை அம்பாய் குத்தும், புன்னகை புரிவோர்கூட இருக்க மாட்டார்கள் என்ற இழிநிலை ஏற்படும், அந்த அளவுக்குத் தோல்வியை அவர்கள் எதிர்த்தார்கள். பகைத்தார்கள்.

தோற்றவர்கள் படுகின்ற பாடுதான் அவர்களுக்குத் தெரியுமே! தோல்வியை வீரர்கள் தாங்கிக் கொண்டாலும் அவன் வசிக்கின்ற நகர மக்கள் விரும்ப மாட்டார்கள். தோல்வியைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று போட்டியிடும் வீரர்களுக்கும் தெரியும்! சீயஸ் கோயில் முன்னே, பன்றி ரத்தத்தைத் தொட்டு, நாங்கள் வெற்றி பெறுவதற்காகக் குறுக்கு வழியை, கீழ்த்தரமான செய்கைகளைப் பின்பற்ற மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாலும்கூட, ஒரு சிலர் வெற்றி பெறுவதற்காக குறுக்கு வழியைக் கையாளாமல் இல்லை.

98வது ஒலிம்பிக் பந்தயம் நடந்தபோது ஒரு நிகழ்ச்சி, குத்துச் சண்டையில் கலந்து கொண்ட எபிலஸ் என்ற வீரன், தன்னுடன் போட்டியிடுவதற்காக இருந்த மூன்று வீரர்களுக்கு. லஞ்சம் கொடுத்து, தன்னுடன் போட்டியிட வேண்டா மென்றும், தன்னை வெற்றி வீரனாக (Champion) ஆக்கி உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.

பணம் வாங்கிக் கொண்டு; அவர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள், இந்தச் செய்தி, அதிகாரிக்குத் தெரிந்து விட்டது. அவனை அவமானப்படுத்தியதோடு மட்டுமல்ல. அவனுக்குப் பெருந்தொகை ஒன்றையும் அபராதமாகவும் விதித்தார்கள்.

இவ்வாறு குறுக்கு வழிகளைக் கையாண்டகோணல் மதி கொண்ட வீரர்களிடம், கொடுமையான முறையில் அபராதத்தை வசூலித்தார்கள். வசூலித்தத் தொகையை செலவழித்து, குற்றம் செய்த வீரர்களைப் போலவே சிலைகளை செதுக்கி, ஒலிம்பிக் பந்தயக் களத்தின் தலைவாசலிலே வரிசையாக நிறுத்தி வைத்தனர்.

1300 ஆண்டுகள் ஒலிம்பிக் பந்தயம் நடந்தாலும், இவ்வாறு அபராதம் தந்து சிலை வடிவானவர்களின் எண்ணிக்கை 13பேர் தான் என்று நாம் அறியும்போது, குறுக்கு வழியை யாரும் அதிகமாக விரும்பவில்லை என்றே உணர முடிகிறது. இதுபோன்ற சிலைகளுக்கு சேன் (Zane) என்று பெயர். இவ்வாறு சிலை அடைத்ததன் நோக்கம். இத்தகைய அலங்கோலமான, அவமானகரமான சிலைகளைப் பார்க்கும் போதாவது, மற்ற வீரர்கள் மனிதப் பண்பாட்டுடனும் வீரப் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்வார்கள் என்று நம்பியே, அயோக்கியர்களுக்கும் இந்நாட்டினர் சிலை அமைத்தனர்.

அதிகாரிகள் மட்டும் சிலை சமைக்கவில்லை. நாட்டு மக்களும் தாங்கள் விரும்பிய வீரனுக்கு, அவன் உண்மையாக போரிட்டாலும், தவறினை இழைத்துச் சண்டையிட்டாலும் சரி, எதற்கும் கவலைப்படாமல் சிலை அமைத்தார்கள், அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

தவறாகவே போட்டிகளில் போட்டியிடுவான் என்பதற்காக, தியாஜனிஸ் என்பவனை ஒலிம்பிக் பந்தயங்களிலிருந்தே பங்கு பெறாமல் நீக்கி வைத்திருந்தார்கள் அதிகாரிகள் ஆனால், அவன் ஆற்றலையும் வெற்றிபெறும் விவேகத்தையும் கண்ட அந்நகர மக்கள், அவனுக்கு சிலை ஒன்றைச் செய்து வைத்திருந்தார்கள்.

அந்தச் சிலையைக் கண்டு, ஆத்திரமடைந்த ஒரு வீரன், ஏற்கனவே தியாஜனிசிடம் தோற்றவன் தான். அவனுக்கா சிலை என்று ஆத்திரம் கொண்டு இரவிலே சென்று, அச்சிலையை உதைத்து உடைத்தான். உடைந்துபோன அச்சிலை, அவன்மீதே விழ, அவன் அதே இடத்திலே நசுங்கி இறந்து போனான். அதைக் கண்டு, சிலையான பிறகும் கூட, தன் எதிரியைக் கொன்று வீழ்த்தும் ஆற்றல் தியாஜனிசிடம் தான் உண்டு. என்று கூறி அந்நகர மக்கள் மகிழ்ந்தனராம். எப்படி கதை!

இந்தப் பயங்கரப் போட்டியிலே, இதற்குமுன் நடந்திருந்த ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி வீரனாகத் திகழ்ந்த அரேசியன் என்பவன். இந்தப் பந்தயத்திலும் கலந்து கொண்டு, மீண்டும் வெற்றி பெறத் துடித்துக் கொண்டிருந்தான். போட்டி ஆரம்பமாயிற்று. இருவரும் வீராவேசத்தோடும், இரைமீது பாய்கின்ற புலிபோலும் போரிட்டனர்.

அரேசியன் தான் பலவானாயிற்றே! ஆகவே, அவன் தன் எதிரியின் காலைப் பிடித்துக் கடுமையாக முறுக்கிக் கொண்டிருந்தான். எதிரியோ, அவன் கழுத்தைப் பிடித்து அழுத்தி நெறித்துக்கொண்டிருந்தான். அந்தப்பிடி இறுகியதன் காரணமாக, அரேசியன் அதே இடத்தில் இறந்துபோனான். அதே சமயத்தில், அவனது கைகள் எதிரியின் காலை வலிமையாகப் பிடித்து முறுக்கியதால், வலி பொறுக்க மாட்டாத எதிரி, தன் கையை உயரே தூக்கித் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். எனவே, இறந்தவன் போட்டியில் வெற்றி பெற்றான் என்று அதிகாரிகள் தீர்ப்புக் கூறினர். எப்படி இருக்கிறது முடிவு?

வெற்றிபெற வேண்டும் என்று வீரமாக வந்து, அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னும், நாளைக்குக் குத்துச் சண்டைப் போட்டி உண்டு என்று அறிந்ததும் இரவோடு இரவாக ஒலிம்பியாவை விட்டே ஓடிவிட்டான் என்றும், அவன்பெயர் சாராபியன் என்றும் ஓர் சரித்திரக் குறிப்புக் கூறுகின்றது.

ஆகவே, கோழையான வீரர்களும்கூட அக்கூட்டத்திலே இருந்திருக்கின்றனர் என்பது புரிகிறது.

போட்டியிலே கலந்துகொள்ள வந்துவிட்டால், எக்காரணத்தைக் கொண்டும் பின் வாங்கக்கூடாது. இந்த விதியை மீறினால், 1500க்கு மேற்பட்ட ரூபாய்களை அவர்கள் அபராதமாகக் கட்டவேண்டும். அவனால் அபராதத்தைச் செலுத்த முடியவில்லை என்றால் அவனிருக்கின்ற நகரம் அந்தப் பணத்தைக் கட்டவேண்டும். நகரத்தினரும் கட்ட மறுத்தால், ஒலிம்பிக் பந்தயத்திலிருந்தே அந்நகரம் ஒதுக்கி வைக்கப்படும் என்ற விதி கடுமையாகப் பின்பற்றப் பட்டிருக்கிறது.

ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும், நாட்டின் புகழ் மிக்க நாயகர்களாக விளங்கினர் அவர்கள் இறந்துபோன பிறகுங்கூட சிறு தெய்வங்கள் பெறுகின்ற வழிபாட்டினைப்போல, வழிபாட்டையும் வணக்கத்தையும் மக்களிடமிருந்து பெற்றனர்.

வெற்றி பெற்ற வீரன் வசிக்கின்ற நகரம் அல்லது அவன் வாழ்கின்ற நகர எல்லை முழுவதும் கடவுள்களின் பெருங்கருணை எப்பொழுதும் பொழிகின்ற நிலமாக விளங்கும் என்பது மக்களின் நம்பிக்கை, புனித ஆலிவ் மலர் வளையத்தோடு தான் பிறந்த நகரத்திற்கு வருகின்ற வீரனை, அந்நகர மக்களே ஆரவாரத்துடன் வரவேற்பு தந்து வாழ்த்துரைப்பார்கள் அவர்கள் தரவில்லையென்றாலும்கூட அதுபோன்ற ஆனந்தமயமான கோலாகலமான வரவேற்பை ஒலிம்பிக் வெற்றி வீரன் எதிர்ப்பார்ப்பதும் உண்டு.

சிபாடஸ் என்ற ஒரு வீரன். 6வது ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற்றுத் தன் தாயகம் திரும்பினான். அவ்வீரனைக் கண்டு யாரும் எதிர்கொண்டு அழைக்கவில்லை, வரவேற்கவில்லை. வாழ்த்தொலி எழுப்பவில்லை. மலர்மாரித் தாவவில்லை. மனம் திறந்து அழைக்கவில்லை. ஆத்திரம் கொண்ட அவ்வீரன், தன் நகரத்தைச் சபித்துவிட்டான். விளைவு என்ன தெரியுமா? அவன் இட்ட சாபம் 74வது ஒலிம்பிக் பந்தயம் நடக்கும்வரை தொடர்ந்து வந்தது.

அசையா என்ற அந்த நகரத்தில் இருந்து ஒரு வீரனால் கூட ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற முடியவில்லை வீரன் வயிற்றெரிச்சலோடு இட்ட சாபமல்லவா அது சாபம் நின்று பேசியது எத்தனையோ முயன்றும் வெற்றியே அந்த நகரத்திற்குக் கிடைக்கவில்லை.

இந்த விவரம் அறிந்த அந்நகரத்திலுள்ள பெரியவர்கள் ஒன்றுகூடி, டெல்பி என்ற இடத்திற்குச் சென்று ஆண்டவனை வணங்கிக் கேட்டு என்ன காரணம்? என்று அறியத் துடித்தனர். அங்கிருந்து அசரீரீ ஒன்று எழுந்தது. அதன்படியே, சாபம் இட்ட வீரனான சிபாடஸுக்கு அந்நகர மக்கள் சிலை ஒன்றை அமைத்தனர். அதற்குப் பிறகு வந்த, அடுத்த ஒலிம்பிக் பந்தயத்திலேயே, ஓட்டப் பந்தயத்தில் சாஸ்தரதாஸ் என்ற வீரன் வெற்றி பெற்றான் என்று ஒரு நிகழ்ச்சி நவில்கின்றது. செத்தும் சிலை பெற்றான் சிபாடஸ்.