கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/விதியால் வீழ்ந்த டோரியஸ்

விக்கிமூலம் இலிருந்து



26. விதியால் வீழ்ந்த டோரியஸ்


டோரியஸ் எனும் வீரனின் கதை வீரக்கதையா சோகக் கதையா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இவன் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற வீரனே வீரன் என்பதால், இவனுக்குத் தனி மரியாதையும் இனிய புகழும் இருக்கத்தான் இருந்தது.

கிரேக்கத்தின் முக்கிய இரு நாடுகள் ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் ஆகும். இவ்விரு நாடுகளுக்கிடையே அடிக்கடி சண்டை நடப்பது சகஜமாக நடக்கக் கூடியதுதான். அந்தச் சண்டை டோரியஸ்ஸின் தலைவிதியையே மாற்றக்கூடியதாக இருந்தது.

டோரியஸ் ஏதென்ஸ் நாட்டில் வசிப்பவன். ஏதென்ஸ் ஸ்பார்ட்டாவுடன் சண்டையிடும் போது, ஏதென்ஸ் நாட்டுக்காகப் பணியாற்றாமல் எதிர்ப்புப் பணியில் இறங்கி வேலை செய்தான். அவனை எதிரி என்று தீர்மானித்து, கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு நாடு கடத்தி விடலாம் என்று தீர்மானித்து, இத்தாலியில் உள்ள தூரி என்னும் இடத்திற்கு அனுப்பிவிட்டனர்.

வேறு இடம் போனதும்தான் டோரியஸுக்கு வீரம் வந்தது போலும், அங்கிருந்து படையைத் திரட்டிக் கொண்டு வந்து கி.மு. 410ம் ஆண்டு ஏதென்ஸ் மீது படையெடுத்தான். அந்தப் போரில் டோரியஸ் தோற்றான். கைதியானான். மீண்டும் நீதி மன்றம் அவனை விசாரித்தது. இப்பொழுது மரண தண்டனை விதித்தது.

டோரியஸ் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கு பெற்று, வெற்றியடைந்து, ஏதென்ஸ் நாட்டுக்குப் புகழ் தேடித்தந்தான் என்ற ஒரே காரணத்திற்காக, அவன் மரண தண்டனையை ரத்து செய்தார்கள், மரணத்தின் கோரப்பிடியிலிருந்து விடுதலையடைந்தான் டோரியஸ்.

இதற்கிடையில் ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவுக்கும் நடைபெற்ற போரில், ஸ்பார்ட்டா வெற்றி பெற்றது. ஸ்பார்ட்டாவின் கீழ் ஏதென்ஸ் வந்து விட்டது. எந்தச் சண்டையிலும் கலந்து கொள்ளாமல் டோரியஸ் இருந்தபோது, ஸ்பார்ட்டா அரசால் கைது செய்யப்பட்டான். குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனைக்குள்ளானான்.

மனிதாபிமானம் நிறைந்த விதியானது, அவனது மரண தண்டனையை மாற்றி வைத்தது. ஆனால் டோரியசின் தலைவிதி, அவனை வாழவிடவில்லை. மரண தண்டனையாலேயே உயிரை இழந்தான். ஆற்றங்கரையின் மரமும், அரசனறிய வாழ்கின்ற மக்கள் வாழ்வும் எப்பொழுதும் ஆபத்துக்குள்ளாகும் என்பது பழந்தமிழ் பாட்டன்றோ! ஆற்றங்கரையில் இருக்கின்ற மரம் அடி பெயர்ந்து விழுந்ததுபோல, அரசுக்குத் தெரிந்த புகழ்பெற்று வாழ்ந்த டோரியஸ், விதியால் வீழ்ந்தான் என்றாலும் வரலாறு அவனை மறக்காமல் வாழ வைத்திருக்கிறது.