வேங்கடம் முதல் குமரி வரை 5/003-019

விக்கிமூலம் இலிருந்து
3. குடந்தை கீழ்க்கோட்டம்

னது அமெரிக்க நண்பர் ஒருவர். அவருக்கு நம் தமிழ் நாட்டுக் கலைகளின் மீது ஆர்வம் அதிகம். அவரும் நம் கோவில்களில் காணும் இன்பவடிவங்களின் அழகில் மெய் மறப்பார். அவை என்ன என்ன அடிப்படைத் தத்துவங்களை விளக்குகின்றன என்று நான் சொல்லி விளக்கினால் அதிசயித்து நிற்பார்.

நான்கைந்து வருஷம் U.S.I.S.ல் பணியாற்றி விட்டு அமெரிக்கா திரும்புகின்ற அவசரத்தில் என் வீட்டிற்கு வந்தார். தன் மனைவியையும் உடன் அழைத்து வந்திருந்தார். அப்போது நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த காலம். “மிஸ்டர் தொண்டைமான். நான் இன்னும் சில தினங்களில் என் சொந்த நாடு திரும்புகின்றேன். அப்படித் திரும்புமுன் தமிழ் நாட்டில் இன்பச் சிறப்புகளை எல்லாம் விளக்கும் ஒரு கோயிலைப் பார்த்து விட வேண்டும். அக்கோயிலும் அங்குள்ள இன்ப வடிவங்களும் என் நினைவில் என்றும் பசுமையாக இருக்க வேணும். உம்மைப் பற்றி என் மனைவியிடம் பிரமாதமாகச் சொல்லியிருக்கிறேன். என்னைப் போல அவளுக்கும் ஆசை. எங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா? என்று மிக்க பரிவோடு பேசினார். தஞ்சைப் பெரிய கோயிலக் காட்டுகிறதா. காட்டினால் தக்ஷணமேரு என்னும் விமானத்தையும், பெருவுடையார் வடிவத்தையும் தானே காட்ட வேண்டும். இல்லை கோனேரிராஜபுரம் நடராஜனைக் காட்டலாமா? ஆக்கூர் ஆயிரத்து ஒருவரைக் காட்டலாமா? அடம்பர் இராமனைக் காட்டலாமா? இல்லை. வழுவூர் கஜ சம்ஹாரனையும் பிக்ஷாடனரையும் காட்டலாமா? இதையெல்லாம் காட்டுவதில் ஒரு சங்கடம் வேறே இருக்கிறதே.

இவர்கள் அமெரிக்கர்களாக இருப்பதால் கோயில்களில் அனுமதிக்க மாட்டார்களே, ஆகவே கோயில் உள்ளே அல்லாமல் பிராகாரத்திலேயே சிறந்த வடிவங்கள் இருக்கும் ஒரு கோயிலையல்லவா காட்ட வேண்டும் என்று பலபல எண்ணினேன். கடைசியில் ஒரு நண்பரது காரிலேயே ஏறிக்கொண்டு கும்பகோணத்தில் அருகே ஒரு கோயிலுள் நுழைந்தோம்.

அக்கோயிலின் ராஜ கோபுர வாயிலே மிகவும் பெரிதாக அகன்றும் உயர்ந்தும் இருந்தது. அந்த வாயிலில் நண்பர்களை நிறுத்திக்கொண்டு சொன்னேன், 'இக் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை அதிசயம் நிகழ்கிறது. கோயில் கோபுரத்திற்கும் கருவறையில் உள்ள லிங்கர் இடையில் உள்ள தூரம் கிட்டத்தட்ட முன்னூறு அடி, இடையில் இரண்டு வாயில்கள், ஒரு கொடிமரம், பலிபீடம், பெரிய நந்தி எல்லாம் உண்டு.

ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் 10,11;12 தேதிகளில் {about 'April 24, 25, 26) காலை 6 மணிக்கு உதிக்கின்ற சூரியனின் ஒளி இவ்வாசல் வழியாய் புகுந்து, இடையில் இருக்கும் தடங்கல்களை எல்லாம் கடந்து கருவறையில் உள்ள இறைவன் உருவை ஒளிமயமாக்குகிறது.“ என்று.

இத்தலவரலாற்றில் சூரியனும். இந்திரனும் வந்து இங்கு வழிபாடு இயற்றியிருக்கின்றனர் இவ்வரலாற்றை உண்மை என இன்றைய மக்கள் உணர இப்படி ஒரு கட்டிட அமைப்பும் கோபுர வாயில் அமைப்பும் என்றேன். நண்பரின் மனைவி இதைக்கேட்டு அப்படியே அதிசயித்து நின்றாள். நண்பர், “இது அவ்வளவு பெரிய விஷயமல்ல தொண்டைமான், கொஞ்சம் விஷயம் அறிந்தவன் கோயிலைக் கட்டி இருக்கிறான். அவன் ஒரு சிறந்த கலைஞனாகவே இருக்க வேண்டும். தன் கற்பனைக்கு ஒரு நல்ல உருவம் கொடுத்து ஒரு கோயிலை கட்டத் தெரிந்திருக்கும் அவனுக்கு நாம் தலை வணங்க வேண்டியதுதான் என்று பாராட்டிவிட்டு மேல் நடந்தார்.

கோயிலில் வெளிப்பிராகாரத்தைக் கடந்து அடுத்த பிராகாரத்துள்ளே நுழைந்த உடனே அங்கே ஒரு தனிக் கோயில் நடராஜருக்கு. அக்கோயிலை தேர்போல் அமைத்து அத்தேரின் முன்பக்கம் இரண்டு யானைகள் தேரை இழுப்பதுபோல ஒரு அமைப்பு. அதை விட தேரின் இருபக்கத்திலும் இரண்டு சக்கரங்கள். தேரினை இழுத்துக் கொண்டு ஓடுவது போல் ஒரு பாவனை.

உடன் வந்த நண்பர்களைக் கொஞ்சம் கண்மூடி மூடித் திறக்கச் சொன்னேன். அப்படியே செய்து விட்டுச் சொன்னார்கள், தொண்டைமான் அப்படி கண்ணை மூடிமூடித் திறந்தால் தேர் ஓடவே ஆரம்பித்து விடுகிறது, தேரின் கீழ் சிக்கிவிடக் கூடாதே என்று பயமாக வேறு இருக்கிறது என்றார்கள். அவ்வளவு தத்ரூபமாக தேர் அமைந்திருக்கிறது. எல்லாம் கல்லில், அதன் பின் நடராஜர் சந்நிதிக்கே நண்பர்களை அழைத்துச் சென்றேன். கிட்டதட்ட 5,6 அடி உயரத்தில் நடராஜர் கம்பீரமாக எழுந்து நிற்கிறார், செப்புச் சிலை வடிவில். சிவகாமியும் 5 அடி உயரத்தில் நிற்கிறாள்.

மற்ற கோயில்களில் இருக்கும் சிவகாமி போல கைகளை ஒயிலாய் போட்டுக் கொண்டிருக்காமல் தன் காதலன் ஆடும் ஆட்டத்திற்கு ஏற்றவாறு தாளமிடும் பாவனையில் அவள் கைகளை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறாள்.

'அறம் வளர்த்தாள் தாளம் ஏந்த நடம்புரியும் சித்திரப் பொற் பொது உடையான் கோலம் போற்றி, என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் பாடியதற்கு ஏற்ப அமைந்த சிலை வடிவோ என்னும்படி மிக்க அழகாக இருந்தது. இதை எல்லாம் அமெரிக்க நண்பர் அனுபவிக்க முடியாவிட்டாலும், சிலை வடிவில் உள்ளதை அனுபவித்தார்கள் இருவரும். அங்கிருந்து அவர்களை இழுத்துச் செல்வது பெரும் பாடாகிவிட்டது.