பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூறுமாறு காணப்படுவதில்லை! நெஞ்சினைக் காணமுடியுமானால் அங்கு இறைவனைக் காணலாம்.

இறைவன், அன்பால் வழிபடுவோர் உள்ளத்தில் எழுந்தருள்கின்றான். அப்பரடிகள் காட்டும் வழிகாட்டுதலில், தன்னையறிதல், தன்னைக் கட்டுப்படுத்துதல். உயிருக்குயிராக உடம்பினுள் எழுந்தருளும் இறைவனை உணர்தல், வழிபாடு செய்தல் ஆகியன தேவை.

மனித வாழ்க்கையில் காலமும் நியதியும் இன்றியமையாதன. காலம் போற்றியதில் அப்பரடிகள் தலை நின்றவர். காலத்தை வீணாக்குபவர்களைப் “பொழுது போக்கிப் புறக்கணிப்பார்” என்று கூறுகிறார். உலக இலக்கியங்களிலேயே இல்லாத புதிய செய்தி, “காலம் களவு போதல்” என்பது. பயன்படாது செலவழிக்கப் பெறும் காலம் களவுபோன காலம் என்கிறார். “களவு படாததோர் காலம்” - இது அப்பரடிகள் அருள்வாக்கு.

ஆனால் உலகியற் சூழலில் ஐம்பொறிகளின் கொட்டத்தை நோக்குழி வாழ்வதே அரிதாகிவிடுகிறது என்றார். உடம்பே கால்! கள்ளமே நாழி! துயரமே ஏற்றம்? துன்பமே கோல். பாழுக்கே நீர் இறைத்தல். பயிர்களோ காய்கின்றன. ஐவர் பயனில் செயலிலே தலைப்பட்டு அயர்ச்சியைத் தருகின்றனர்.

உடம்பொடு உயிர் தாங்கிப் பிறந்ததன் பயன் என்ன? இந்த உடம்பினைத் திருக்கோயிலாக்குதல்; உடம்பினுள் உத்தமனைக் காணுதல், இங்ஙனம் பயன் காணா வாழ்நிலையே “பயிர் அழிய விடல்” அதாவது பயிர் தீய்ந்து போகவிடுதல்.

இந்த உடலொடு கூடிய பிறப்பு ஒரு வாய்ப்பு. துன்பத்திலிருந்து நிலையாகத் தப்பித்துக் கொள்ளுதலுக்குரியது இப் பிறப்பு. இப் பிறவியின் அருமையினை அப்பரடிகள் விளக்கி உணர்த்துகின்றார்.