பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

261


மேலை நாட்டினர் "Behaviorial Science" என்று வள்ர்த்துள்ளனர்.

பழகும் பண்பியலில் தலையாயது எது எனில் யாரோடும் அன்பாகப் பழகுவது. அந்நியமாவதற்குரிய செய்திகளைப் பின்தள்ளி வைத்து, ஒன்றுபடுதலுக்குரிய களங்களை உரமூட்டி வளர்த்தல். ஒருவர் இல்லாத இடத்தில் அவருடைய புகழ்மிக்க குணங்களைப் பலர் அறியக் கூறவேண்டும். அவரை நேரில் காணும்போது அவரிடம் முகமன் பேசாமல்-புகழ்ந்து கூறாமல் இடித்தும் எடுத்தும் கூறுவனவற்றைக் கூறித் திருத்த முற்படுதல் வேண்டும்.

குணங்கள் சொல்வியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்

என்று பழகும் பண்பியலுக்கு இலக்கணம் கூறுகின்றார் அப்பரடிகள்.

உழவாரத் திருத்தொண்டு

தமிழகத் திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையங்கள் ஆதலால் திருக்கோயில்களைப் பேணுவதில் அப்பரடிகள் ஆர்வம் மிகுதியும் காட்டினார். திருக்கோயில்களைப் பேணும் ஆர்வத்தினாலேயே உழவாரத்தினைக் கையிலேந்தி திருத்தொண்டு செய்தார். சேக்கிழார் “கைத்திருத் தொண்டு” என்று இதனைப் பாராட்டினார். அப்பரடிகள்,

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே