334
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இனிய செல்வ! "வரவுக் கேற்ற செலவு” என்பது. இன்றைய அறிவுரை மட்டும் அல்ல. திருக்குறளும்,
"ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை”
என்று பேசுகிறது! இந்தப் பொருள் நெறிமுறை இன்றைய சமூக வாழ்வில் நடைமுறைப் படுத்தக் கூடியதாக அமைந்துள்ளதா? இல்லையென்பதே நமது கருத்து. ஏன்? நாளும் விலைகள் உயருகின்றன. விலைகள் உயருகின்ற அளவுக்கு வருவாய் உயர்ந்து விடுவதில்லை. அப்படியே ஒரோ வழி அரசு அலுவலர்களுக்கு வருவாய் உயர்ந்தாலும் உடன் மீண்டும் விலை உயர்ந்துவிடும். விலை உயர்வும் ஊதிய உயர்வும் ஒரு நச்சுவட்டமாக நமது நாட்டில் சுழன்று வருகிறது. இதுபோக மேலும் ஒரு தீமை! எளிய வாழ்வுக்கு எதிரான நுகர்வுப் பொருள்கள் நாள்தோறும் சந்தையில் வந்து குவிகின்றன. நுகர்தலின் வளர்ச்சி-பொருளாதார வளர்ச்சி-சமூகத்தின் வளர்ச்சி என்பது ஒரு தத்துவம்! இது முற்றிலும் உண்மை! ஆயினும் வருவாய் வளர்ச்சி, தேவையின் பரிணாம அடிப்படையில் இன்றைய நுகர்வுப் பொருள்கள் படைப்பு நிகழவில்லை! இலாப நோக்கத்தில் படைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, நுகர்வுப்பொருள்களைப் பெற்றிருப்பதின் அடிப்படையில் இன்று சமூக மதிப்பீடுகள் வேறு நிகழ்கின்றன. அதனால் சமூக மதிப்பு என்ற பெயரில் இன்று நுகர்வுப் பொருள்கள் வாங்கப்படுகின்றன. இனிய செல்வ, சான்றாக சைக்கிளை எடுத்துகொள்? காலால் நடந்து செல்ல இயலாத-முடியாத தூரத்தைக் கடக்க சைக்கிள் தேவை. இன்று 100 அடி கூடச் செல்ல வேண்டாதவர்களும் மதிப்பு என்ற பெயரில் சைக்கிள் வைத்துள்ளனர்.
அடுத்து ஒன்று! நமது நாட்டில் காலம் களவு போகாமல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகமிகக்