208
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஜூலை 10
|
இறைவா, அவரவர் பணியை அவரவர் செய்ய அருள் செய்க!
இறைவா, சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே. நின் திருவருள் போற்றி! போற்றி!! இறைவா, இந்த மனித குலத்தில் எத்தனை பிரிவுகள். எங்கள் பிரிவுகளுக்கு உன்னையே ஆளாக்கி ஆயிரம் பேர் வைத்து விட்டோமே. ஏன் இந்த நிலை?
ஒருமையுடன் நினது திருவடி நினைக்க வேண்டும். நான் எப்போது ஒருமையுடன் நினது திருவடி நினைப்பது? இன்றுள்ள சூழ்நிலையில் எனக்கு இந்தநிலை எய்துமா? இறைவா, நீ ஒருவனே, உன் அடியோங்களான நாங்கள் ஒரு குடியினர் இல்லையா? ஆம், நாங்கள், அனைவரும் ஒருகுடி. நீயும் எங்கள் குடியில் ஓர் உறுப்பினன்.
இறைவா, எனக்குள்ள கடமைகள் உனக்கும் உண்டு. குடி வழிப்பட்ட எல்லாக் கடமைகளும் செய்ய வேண்டிய நிலையில் உள்ளாய். நானும் அங்ஙனே தலைமுறை தலை முறையாக வருகின்றேன். ஆயினும் பிரிவினை எண்ண்ம் போகவில்லை. என் மனத்தில் மிகவும் வேரூன்றிப் போன தீமையாக அது இருக்கிறது.
நான் பிறந்து விட்டவன். பயனுற வேண்டுமல்லவா. என்னை எடுத்தாள்க! நீயும்நானும் ஒரு குடியைச் சார்ந்தவர்கள். உன்னைத் தலைவனாகப் பெற்றுள்ள நாங்கள் பேறு பெற்றவர்கள்.
இறைவா, என்னை எடுத்தாள்க! "நான்" இனி இல்லை. இறைவா, நம் குடி வளரப் பணிகள் செய்திடவா. எனக்கும் பணி கொடுத்து ஆளாக்கிவிடுக!
இறைவா, நாம் அனைவரும் ஒரு குடி போட்டி வேண்டாம். அவரவர் பணிகளை அவரவர் செய்ய அருள் செய்க!