திருவருட்சிந்தனை
261
இறைவா, எந்தையே! நின் பொன்னடிகள் போற்றி! போற்றி!! இறைவா, நாள்தோறும் எண்ணற்ற நொடிகள் ஓடிக் கழிகின்றன. ஆனால் கடமைகள் முடிந்தபாடில்லை.
ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக எனக்குக் கிடைத்த வேலையை முழு முயற்சியின்றி, செய்ய இயன்ற வரையில் செய்தலையே, நான், கடமையைச் செய்து விட்டதாக, நினைத்து மன நிறைவு கொள்கின்றேன்.
இறைவா, கோடிக்கணக்கான செங்கற்கள் கொட்டிக் கிடந்தால் அழகு அமைந்த மாளிகையாகாது. அவற்றைக் கொண்டு அழகு மாளிகை அமைக்க வேண்டும். கடமைகளின் தொகுப்பே வாழ்க்கை.
இறைவா, நான் செய்ய வேண்டிய கடமைகளில் சிறியது இல்லை. பெரியது இல்லை. அனைத்துக் கடமைகளுமே என் வாழ்க்கையை வளர்ப்பன; உறுதிப்படுத்துவன. நான் எந்த ஒரு கடமையைப் புறக்கணித்தாலும் என் வாழ்க்கையைப் பாதிக்கும்.
இறைவா, என் உரிமைகள், என் கடமைகளின் வாயிலாகத்தான் என்னை வந்தடைகின்றன. படைக்கட்டுப் பாட்டுணர்வுடன் செய்யப்பெறின், எந்தக் கடமையும் எளிதில் முடியும். கடமைகள் செயற்பாட்டின் வழி உரிமைகள் வந்தமையும்.
இறைவா, எனக்குக் கடமையே தாய்! கற்பகத் தரு! இறைவா, நான் என் கடமைகளைத் தெரிந்து தெளிவுடன் முடிவு செய்வேன்! தராதரமின்றி எல்லாக் கடமைகளையும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவேன்!
இறைவா, என்னுடைய உரிமைகளுக்குரிய விலையாகிய கடமையைச் செய்தலாகிய பணியை மேற்கொள்ள முழு ஆற்றல் தா! அருள் செய்க!