திருவருட் சிந்தனை
317
அக்டோபர் 27
|
இறைவா, எந்நாட்டவர்க்கும் இறைவா! நான் மிகச் சின்னஞ்சிறு வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றேன். குடை ராட்டினத்தில் ஏறிச் சுற்றும் குழந்தைகளைப் போல என் நிலை பரிதாபமாக இருக்கிறது.
இறைவா, நான், சிறு வட்டத்திலிருந்து வெளியே வர அருள் பாலித்திடுக! ஆம், இறைவா! மனிதகுலம் என்ற பெரிய வட்டமே எனது அன்புக்கு இலக்காக அமைய வேண்டும்.
சாதி, குலம், கோத்திரம், இனம், மதம் என்ற சின்னச் சின்ன வட்டங்களுக்குள்ளேயே சுழலுகிறேன். கிணற்றுத் தவளைபோல, கிணறே கடல் என்று கருதி ஆசைப்படுகிறேன். அமைவு கொள்கிறேன்! இறைவா, மானிடனாகிய எனக்கு ஏன் இந்த வட்டங்கள்!
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று வாழ்ந்திட அருள் செய்க! "ஒன்றே குலம், அதுவே உயிர்க்குலம்" என்ற மேலாய ஒழுக்கத்தில் என்னை நிறுத்துக.
ஆன்மநேய ஒருமைப்பாடு காணும் தவத்தினைப் பயில அருள் செய்க! இறைவா, "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என்ற உண்மையை நான் உணர்ந்து உலகந்தழுவிய ஒழுக்கத்தில் நின்று வாழ்ந்திட அருள் செய்க!