பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நகமும்-செல்வமும்

உடல் வளத்திற்கேற்ப நகம் வளர்கிறது; விரலின் நீளத்தைக் கடந்தும் அது வளரும். அப்படி வளர்வது இயற்கை. எனினும், நகத்தை எல்லை மீறி வளர்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததல்ல; அழகாகவும் இருக்காது. பிறருக்கு அருவருப்பாக மட்டுமல்ல அபாயத்தை விளைவிப்பதாகவும் இருக்கும். அதனாலேயே நகம் வளர்ந்தவுடன் அதை நாம் வெட்டிவிட்டுக் கொள்ளுகிறோம். அப்படி நகத்தை நாம் வெட்டும்பொழுது, நமக்குத் துன்பம் ஏற்படுவதில்லை; செங்குருதியும் சிந்துவதில்லை. அது போலத்தான் ஒரு தனி மனிதனிடத்தில் நியாயமான தேவைக்குமேல் குவியும் செல்வத் தேக்கமும். அத்தேக்கத்தைக் குறைப்பது, எல்லை கடந்து வளர்ந்துள்ள நகத்தை வெட்டி எடுப்பது போன்றதுதான்.

உறக்கமும்-வழிபாடும்

பகலெல்லாம் பாடுபடுகிற மனிதன், தனது உடற் சோர்வு நீங்கிப் புதிய தெம்பு பெற உறக்கம் பயன்படுகிறது; அதுபோல, வாழ்க்கையில் உழலும் உயிரின் ஆன்மாவின் சோர்வு நீங்கிப் புதிய ஆற்றல் பெறுவதற்கு வழிபாடு பயன்படுகிறது.

உடலும்-உள்ளமும்

ஆரோக்கியமான உடம்பில் ஒரு புண் ஏற்பட்டால் அது விரைவில் மேவி ஆறிவிடும். ஆரோக்கியக் குறைவான உடம்பில் ஏற்பட்ட புண் அப்படி ஆறிவிடுவதில்லை. அது போல, ஆரோக்கியமான மனம் உடையவர்களிடத்தில் சில நேரங்களில் கோபதாபங்கள் ஏற்பட்டாலும் அது மிக விரைவில் மாறி, மீண்டும் பழைய பரிவும், பாசமும் ஏற்படும். ஆரோக்கியமில்லாத மனமுடையவர்களிடத்தில் ஏற்படுகிற கோபதாபங்கள் அப்படி மாறுவதில்லை.