316
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
உறவினை வளர்ப்போம்!
இந்து சமூகம் மொழிகளைக் கடந்து இனங்களைக் கடந்து வளர்ந்துள்ள ஒரு சமூகம். இயற்கையான மொழி, இன வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் இந்த மொழி, இன வேறுபாடுகள் மாறுபாடுகளாக முரண்பாடுகளாக உருவம் கொள்ளக் கூடாது. ஆதலால், இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய மொழிகளின்பால் வெறுப்புணர்ச்சி காட்டாது, இந்திய மொழிகள் பலவற்றைக் கற்க முயல வேண்டும். மொழிகளில் வெறுப்புக் காட்டுதல் அறிவுக்குத் தடை விதித்துக் கொள்வதாகும். இதை விட மனித குலத்துக்குப் பெரிய தற்கொலை எதுவும் இல்லை. தமிழில் பக்தியுணர்வை அள்ளி வழங்கும் திருவாசகத்தை அனுபவிப்போர் தெலுங்கில் உள்ள தியாகேசரின் பக்திக் கீர்த்தனைகளை, இந்தியில் உள்ள மீராவின் பக்திக் கீர்த்தனைகளைக் கற்கவும் கேட்கவும் முயலுதல் வேண்டும். இதனால் இதயம் விரியும், பண்பாடு வளரும்.
வாழ்க்கையின் நிலையாமைகளைப் பட்டினத்தார் பாடல்களில் படிக்கும் நாம் கபீர்தாசரின் அருள்மொழிகளைக் கற்றால் சிந்தனையின் இழையோட்டச் சிறப்புகளை உணரலாம். அப்பரடிகள், வள்ளற் பெருமான் ஆகியோரின் பழைமைக்கு உயிருட்டும் புதுமை நல ஆக்கக் கருத்துக்களை கன்னட நாட்டு பசவேசரின் கருத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து வளர்த்துக் கொள்ளவேண்டும்.
ஆதலால், இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமய அடிப்படையில் இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து இந்துக்கள் அனைவரிடமும் உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே இந்து சமூகத்தை வாழ்விக்கும் உயரிய நெறி. உடனடியான தேவையும் கூட. ஆதலால் இந்து சமூகத்தினரிடையில் இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து உறவினை வளர்ப்போம்.