பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என்று விதி நிர்ணயித்தது. ஆனால் மார்க்கண்டேயர் தம்முடைய வழிபடும் நாயகனை நம்பிக்கையோடு இறுகப் பற்றிக்கொண்டு, தன்னை வெளவ வந்த கூற்றுவனிடமிருந்து தப்பித்து விட்டார். பெருமானும் தமக்கு அன்புபட்ட மார்க்கண்டேயரின் உயிரை வெளவ வந்த காலனைத் தன் காலால் உதைத்து வீழ்த்தினான். “கால காலன்” என்று பெயர் பெற்றான். திருக்கோயில் நாகரிகம் மரணத்தை வென்றது; மரணத்தை வெல்லத் துணை செய்வது என்பதை அறிக.

வரலாற்று ஏடு

மனிதகுலத்தின் நிகழ்வு என்பது வரலாற்றை வளர்க்கும் உந்து சக்தி! இன்றைய நிகழ்வு, நாளைய வரலாறு. தமிழ் நாட்டுத் திருக்கோயில்களின் சுவர்கள் வரலாற்று ஏடுகளாக விளங்கும் மாண்பின! தமிழ்நாட்டில் நிலவிய மொழி, கலை, பண்பாடு, சமூகம், அரசியல், பொருளியல், சமயம் முதலியவற்றின் வரலாற்றுச் செய்திகளைத் திருக்கோயில் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. ஆகத் திருக் கோயில்கள் சென்ற கால வரலாற்றைக் கூறும் ஏடுகளாகவும் எதிர்கால வரலாற்றை இயக்கும் உந்து சக்திகளாகவும் விளங்கி வருகின்றன.

செய்ய வேண்டுவன

தமிழக வரலாற்றைச் செழுமைப்படுத்திய திருக்கோயில் தத்துவத்தைக் கண்டோம்! திருக்கோயில் சமுதாயத்தின் ஆற்றல்மிக்க மையமாக விளங்கியது. “கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” எனப் பழந்தமிழ்ச் சமுதாய அமைப்பு விளங்கியதை அறிய முடிகிறது. இன்று நமது திருக்கோயில்களுக்கும் நமது சமுதாயத்திற்கும் நெருக்கமான உறவில்லை. திருக்கோயில் வணிகக் கூடாமாக உருமாற்றம் பெறுவதைத்