நூறாசிரியம்/என்றுங் காண்குவம்

விக்கிமூலம் இலிருந்து

70 என்றுங் காண்குவம்


குன்றுசிர் வைத்த கொடையி லாளரைத்
தின்றுயும் பொருட்டுத் தேய்கா லோயச்
சென்று கேட்குநர் அல்லேம் யாமே
அன்றுநாட் கவளம் அலைந்துண் மாரை
ஒன்றும் பெறுவே மல்ல மாயினும்
என்றுங் காண்குவம் இனிதே நெடுங்கரைத்
தெண்ணீர் நனையடி யேறி யடர்த்த
தண்புற் சின்னிழல் தங்குவ தன்றிக்
கரிநிழல் மடங்கற் படுத்தல்
விரிநீர் உலகத் தியாண்டு மிலானே!


பொழிப்பு :

யாம் உணவுண்டு உயிர் வாழும் பொருட்டு, மலைபோலும் திரண்ட செல்வத்தை வைத்திருந்தும் வள்ளன்மைக் குணம் இல்லாதாரை, எம் தேய்வுற்ற கால்கள் சோர்வுறுமாறு தேடிச் சென்று அவரிடத்துப் பொருள் வேண்டுவே மல்லேம், அற்றைநாள் உணவையும் பாடுபட்டுத் தேடியுண்ணுபவரிடத்து யாம் ஏதும் பெறுவேம் அல்லேம் ஆயினும் அவரை; மனமகிழ்வொடு காண்பேம். நெடிய கரையையுடை யாற்றின் தெளிந்த நீரில் நனைந்திருக்கும் படுகையின் கண்ணே ஏறிச்சென்று செறிந்த குளிர்ச்சி பொருந்திய பொதும்பரின் சிறுநிழலில் தங்குவதல்லாது, கரிந்த மரநிழலின்கண் படுத்தல் பரந்த கடலாற் சூழப்பெற்ற இவ்வுலகின்கண் யாங்கணும் இல்லையாதலின்.

விரிப்பு :

இப்பாடல் புறப்பொருள் பற்றியது

பெருஞ்செல்வராயினும் வள்ளன்மைக் குணம் இல்லாரை யாம் தேடிச் செல்லேம். வறியராயினும் பண்புநலம் உடையாரை என்றும் காண்பேம் என்னும் உள்ளக்கிடக்கையைப் புலப்படுத்துவதாக அமைந்தது இப்பாட்டு,

குன்று சீர்வைத்த கொடையிலாளரை-மலைபோலும் திரண்ட செல்வம் பெற்றிருந்தும் வள்ளன்மைக் குணம் இல்லாதாரை.

திரண்ட பெருஞ் செல்வமேனும் பயனின்றிப் பாழ்படக் கிடத்தலின் அச் சிறுமை தோன்றக் குன்றுசீர் என்றார். குன்று என்னுஞ் சொல் வெளிப்படையாய்க்பெயர்ப்பொருள் பயப்பினும் குறிப்பாய் வினைப்பொருள் தரும் நயங்கண்டு மகிழ்க

உயரிய நோக்கமின்றி உயிர் வாழும் பொருட்டே வயிறு நிரப்புதல் என்னும் இழிவு தோன்றத் தின்று என்றார்.

தின்று உயும் பொருட்டு - யாம் உணவு உண்டு உயிர்வாழும் பொருட்டு

உய்தலாவது பசியான் வருஞ் சாவினின்றுந் தப்புதல்.

தேய்கால் ஓயச் சென்று கேட்குநர் அல்லேம்யாமே - தேய்வுற்ற கால்கள் ஓயுமாறு தேடிச்சென்று பொருள் வேண்டுவேமல்லேம் யாம்

அலைச்சலாய்ப் பலரிடத்துஞ் செல்லுதலின் தேய்கால் என்றும் பலகாலுஞ் செல்லுதலின் ஓய என்றுங் கூறினார்.

கேட்டல் என்னுஞ் சொல் செவிமடுத்தல் என்னும் பொருளதே யாயினும் இக்காலத்து வேண்டுகோளைக் குறிப்பதாக அது பெரு வழக்குப் பெற்றுள்ளமையின் கேட்குநர் என்னுஞ் சொல்லில் வேண்டற் பொருளில் நின்றது.

அற்றை நாட் கவளம் அலைந்து உண்மாரை- அற்றைநாள் சிற்றுணவையும் பாடுபட்டுத் தேடி உண்ணுபவரிடத்து.

அற்றைநாட் கவளம் அலைந்துண்ணல் செல்வச் சேமிப்பற்ற அவர் தம் வறிய நிலையைக் குறித்தது. அன்றாடங்காய்ச்சி’ என்பது உலக வழக்கு.

கவளம் : சோற்றுத் திரளை - ஒருவாய்ச் சோறு என்னுமாறு அளவானும் சுவையானும் சிறுமைப் பொருள் பயந்து நின்றது.

அலைந்து - கடிதின் முயன்று தேடி

ஒன்றும் பெறுவேம் அல்லம் ஆயினும் - யாம் ஏதும் பெறுவேம் அல்லம் ஆயினும்

ஒன்றும் பெறுவேம் அல்லம் என்றமையான்' - யாம் பெறுமாறு அவர் ஏதும் உடையரல்லர் என்பதனைப் புலப்படுத்தினார். அன்றியும், அவர் வருந்தி பீட்டிய சிறுபொருளைத் தங்கட்டாயத் தேவைகளையும் மட்டுப் படுத்திக் கொண்டு எம்பால் வைத்த அன்பால் உவந்து வழங்கினும் அவர்தம் இன்னல்நிலை நோக்காது அதனைப் பெறும் வன்கண்மையுடையே மல்லேம் என்று கூறியதாகக் கொள்ளினும் அமையும்.

தெள்நீர் நனையடி ஏறி - தெளிந்த நீரின் கண்ணே நனைந்திருக்கும் படுகையின்கண்ணே ஏறிச்சென்று

நனைஅடி - நீரில் நனைந்த நிலப்பகுதி, படுகை.

அடர்த்த தண்புல் சில்நிழல் தங்குவது அன்றி - செறிந்த குளிர்ச்சி பொருந்திய பொதும்பரின் சிறுநிழலில் தங்குவதல்லாது

புல் - புல்வளர்ந்த பொதும்பர்

சில் - சிறு சின்மை சிறுமை குறித்து நின்றது.

கரிநிழல் மடங்கல் - யாண்டுமிலானே. கரிந்த பெருமரங்களின் நிழலில் அரிமா தங்காது பரந்த நீர் சூழ் உலகில் எங்கும் இல்லையாதலின்

பொதும்பர் நிழல் சின்னிழல் எனப்பட்டமையால் கரிந்தமரம் மரம் பருமரம் என்பது பெறப்படும். கரிந்த மரத்தின் நிழல் கரி நிழல், மரம் வருவிக்கப்பட்டது.

அரிமா, தண்ணிய புன்னிழல் தங்குதன்றி நிழல்தரமாட்டாத கரிமரக் கானில் படுக்காது என்றமையின் வறியாரேனும் நன்னெஞ்சினாரை நாளுங் காண்பதன்றி குன்று சீர் வைத்த கொடையிலாளரைத் தேடிக் காணமாட்டேம் என்னும் கருத்தை உலகியல் நிகழ்ச்சியால் வலியுறுத்தினார்.

யாம் அரிமாவனையேம் என்றவாறு,

இப்பாடல் பொதுவியல் திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.