நூறாசிரியம்/மானுங் கடமையள்

விக்கிமூலம் இலிருந்து

'97 மானுங்கடமையர்'


உற்றே மெனநீ பற்றிய ஞான்றே
முற்றும் நினக்கவள் உரியளங் குழலும்
கற்பின் மானுங் கடமையள், கரவின்று
நேர்ந்த காலையும் நெகிழ்ந்த காலையும்
ஊர்ந்தண் நினைவும் வினையும் ஒழுங்குறப் 5
பூணியற் பேணுந் தகையளே வாணுதல்!
அவளைப் பிரிவுறு மாயிடைப் பொழுதின்
குவளை விழிநீர் வார்தலை எண்ணாது
இன்னா வொழுக்கத்து நீயிவண் படுதல்
என்னமைந் துரைக்கினும் இழுக்கே எலுவ! 10
ஆயுங் காலைச் சால்பிற்கு
நீயும் உரியை அவள்தனி யன்றே!


பொழிப்பு:

காதலால் ஒன்றினேம் என்று நீ அவளை கைப்பிடித்த போதே முழுவதும் நினக்கே அவள் உரிமையுடையளாயினள். அழகிய கூத்தலையுடையளான அவளும் கற்பினால் மாட்சியமையுற்ற கடமையுடையாள். கள்ளமில்லாமல் நீ அவளொடு பொருந்தியிருந்த காலத்திலும் கைநெகிழ்ந்த காலத்திலும் உள்ளத்துப் பரவிய குளிர்ந்த நினைவும் அதற்கேற்ற செயலும் உடையளாய்ச் செம்மையாகக் கொழுநனைப் போற்றிப் புரக்கும் தகுதியுடையவளே ஒளி பொருந்திய நெற்றியை யுடையாள் அவளை நீ பிரிவுற்ற அந்த இடைக்காலத்தே அவளுடைய குவளை மலர் போலும் விழியினின்றும் நீர் வழிதலை எண்ணிப்பாராது தீயொழுக்க முடையவனாய் நீ ஈண்டு இருத்தல் என்னவாறு அமைதி கூறினாலும் குற்றமேயாம். ஆராய்ந்து பார்க்குங்கால் தும் இல்லறம் பெருமையான் நிறைவுறுதற்கு நீயும் உரிமையுடையாய், அவள் நின்னின் வேறுபட்டவள் அல்லளே.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

தலைவனொருவன் தன் மனைவியைப் பிரிந்து கட்குடியுஞ் சூதாட்டமும் வரைவின் மகளிர் தொடர்பும் உடையவனாய்த் திரிதரக்கண்ட சான்றோர் ஒருவர் அவன்றன் மனைவியின் பண்புநலன்களைப் பாராட்டிக் கூறி அவன்றன் பிழையையுஞ் சுட்டிக்காட்டி அறிவு கொளுத்துமாறு அமைந்தது இப்பாட்டு.

உற்றேம் என நீ பற்றிய ஞான்றே - யாம் இல்லற வாழ்க்கையில் பொருந்தினேம் என்று நீ அவளது கையைப் பற்றிய போதே.

ஞான்று-காலம்.

முற்றும் நினக்கு அவள் உரியள் - அவள் நினக்கே குறைவற உரிமையுடையள் ஆயினாள்.

முற்றும் குறைவற முழுமையாக

அம் குழலும் கற்பின் மானும் கடமையள் - அவ்வாறு நினக்கே உரிமை பூண்டவளாகிய அழகிய கூந்தலை யுடைய அவளும் கற்பினால் சிறந்த கடப்பாடுனர்ந்து செய்யும் இயல்புடையாள்.

கரவு இன்று நேர்ந்த காலையும் நெகிழ்ந்த காலையும் - கள்ளமில்லாமல் நீ அவளொடு பொருந்தியிருந்த காலத்தும் கைநெகிழ்ந்த காலத்தும். கரவு- மறைவு, நேர்தல்-பொருந்துதல். நெகிழ்தல்-பிரிதல்.

ஊர்ம் தண்நினைவும் வினையும் உள்ளத்துப் பரவிய குளிர்ந்த நினைவும் அதற்கேற்பச் செயலும் உடையளாய்.

அன்பு நீரின் இயல்பினது ஆகலின் அன்பார்ந்த நினைவு குளிர்ச்சியுடையதாகக் கூறப்படும். ஊர்தல் பரவுதல் ஊரும் என்பது செய்யுள் நோக்கி ஊர்ம் என இடைய்யே உயிர்கெட்டு நின்றது.

ஒழுங்கு உறப் பூணியன் பேணும் தகையளே வான் நுதல் - முறையாகக் கொழுநனைப் போற்றிப் புரக்கும் தகுதியுடையவளே ஒளி பொருந்திய நெற்றியை யுடையாள்.

பூணியன் என்பது உரிமை பூண்டவன்; பூண்டான் எனப் பொருள்படுவதாகிய கணவனைக் குறிக்குஞ் சொல். கொண்டான் என்பது நோக்குக!

வாள் - ஒளி.

அவளைப் பிரிவு உறும் ஆ இடைப் பொழுதின் - அவளை நீ பிரிவுற்ற அந்த இடைக்காலத்தே

குவளை விழி நீர்வார்தலை எண்ணாது - குவளை மலர்போலும் அவள் கண்களினின்றும் நீர் வழிதலை எண்ணிப்பாராது.

வார்தல் - வழிதல்,

இன்னா ஒழுக்கத்து நீ இவண் படுதல் - தீயொழுக்கமுடையவனாய் நீ இங்கே இருப்பது. இன்னா ஒழுக்கமாவது சான்றோர் கடிந்த கட்குடியும் சூதாட்டமும் வரைவின் மகளிர் தொடர்பும் பிறவுமாம்.

என் அமைந்து உரைக்கினும் இழுக்கே - என்ன அமைதியைப் பொருந்தக் கூறினும் குற்றமாவதே.

அமைவு - ஏற்புறு கரணியம்; சமாதானம் என்பது வடசொல்.

எலுவ - இளந் தோழனே!

தோழன் எனப் பொருள்படும் எலுவன் எனுஞ்சொல் விளியேற்று நின்றது.

சான்றோர் கூற்றாகக் கொள்ளக் கிடத்தலின் இளந்தோழனே எனக் கொள்ளப்பட்டது.

ஆயும்காலை - ஆராய்ந்து பார்க்குமிடத்து. ஆய்தல் நுணுகிப் பார்த்தல்

சால்பிற்கு நீயும் உரியை - தும் இல்லறம் பெருமையான் நிறைவுற விளங்குதற்கு நீயும் உரிமையுடையாய்.

சால்பு - பெருமையின் நிறைவு.

அவள் தனியன்றே - அவள் நின்னின் வேறுபட்டவள் அல்லளே!

இப்பாடல் பெருந்திணை என்னும் புறத்தினையும் குறுங்கவி என்னும் துறையுமாம்.