பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழ்த் தாத்தா

அப்போது மாம்பலத்தில் இருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு அவர் 22—5—37 அன்று ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

'நமஸ்காரம், கலைமகளின் சில இதழ்கள் நான் பார்க்காமலே தவறிவிடுவது உண்டு. என் தொல்லைகளின் மத்தியில் சில இதழ்களே அதிருஷ்டவசத்தால் பார்த்துப் படிக்கவும் நேரிடுகிறது. இவ்வாறு தங்கள் பிச்சைப் பாட்டுக் கட்டுரையைப் படித்து ஆனந்தம் தாங்காமல் இதை எழுதுகிறேன். அதற்குத் தலைப்பு ஊரைச் சுடுமோ என்று வைத்திருக்கலாம். இத்தகைய ஓர் இரத்தினத்தை நான் எழுதியிருந்தால் அவ்வாறுதான் பெயர் வைத்திருப்பேன், என்ன அழகான கதை! என்ன ரஸம்! "

—இராஜகோபாலாச்சாரி


காந்தியடிகளைக் கண்டது

1937-ஆம் ஆண்டு சென்னையில் பாரதீய சாகித்ய பரிஷத்தின் மகாநாடு நடந்தது. அதற்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார். வரவேற்புக் குழுவின் தலைவராக யாரை நியமிப்பது என்கிற கவலை அந்த மகாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டாயிற்று. பிறகு ஆசிரியப் பெருமானையே அழைத்து வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து வரவேற்புரை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆசிரியர் அதற்கு இசைந்தார்.

மகாசபை கூடியது. தமிழின் பெருமையும், தமிழர்களின் பெருமையும் ஆசிரியர் சங்க நூல்களில் எவ்வாறு வருணிக்கப் பெற்றுள்ளன என்பதைத் தம் வரவேற்புரையில் எடுத்துக்காட்டி, மகாத்மா காந்தியை வரவேற்பதில் தாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார் என்பதையும் எடுத்துச் சொல்லிச் சபையில் உள்ளவர்களையும், காந்தியையும் மகிழ்வித்தார்.

அந்த வரவேற்பைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள், "தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ?' என்று சொன்னார்.


குறுந்தொகைப் பதிப்பு

ஆசிரியப் பெருமான் குறுந்தொகையை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தார். முன்பு ஒருவர் அதைப் பதிப்பித்திருந்தார். சங்க நூல்களின் மரபு தெரியாத காரணத்தினால் பல பிழைகள்