பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62 / அயோத்திதாசர் சிந்தனைகள்


சீர்கேட்டையும்,தற்கால பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் செய்து வரும் சீர் சிறப்பையும் விளக்கி இராஜாங்கத்தார் மீது குடிகள் அன்பு பாராட்டவும் குடிகள் மீது இராஜங்கத்தார் அன்பு பாராட்டவுஞ் செய்ய வேண்டியது.

கனவான்கள் இத்தகைய இராஜவிசுவாசத்தைத் தற்காலம் நோக்காமல் இராமன் ஆண்டாலென்ன இராவணனாண்டாலென்னவென்னும் பாராமுகமாய் இருப்பார்களாயின் இராஜதுரோக சிந்தனையால் குடிகள் சீர்கெடுவதுமன்றி அவன் கெட்டால் நமக்கென்ன என்போரையும் அலக்கழிக்காது விடாது.

ஆதலின் நம்தேய கனவான்கள் ஒவ்வொருவரும் முன்னேறி குடிகளுக்கு நல்லறிவூட்டி இராஜவிசுவாச சுடரேற்றல் வேண்டும்.

அப்போது தான் நமக்கும் நமது தேசத்தோருக்கும் ஆறுதல் பிறக்கும். அவ்வகை ஆறுதலினால் குடிகள் ஒவ்வொருவரும் ஆங்கிலேயருக்குள்ள சுருசுருப்பையும் விடாமுயற்சியையும் பின்பற்றி தாங்களும் சுகமடைவார்கள். ஈதன்றி குடிகளுக்குள்ள இராஜதுவேஷத்தை நீக்குவதுடன் அன்னிய தேசிய சரக்கை விலக்கும் ஆர்ப்பாட்டங்களையும் அமைதி செய்யவேண்டும்.

ஏனென்பீரேல் இவ்விந்து தேசத்திற் பஞ்சம் உண்டாயதென்று கேழ்விப்பட்டவுடன் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ஏழைகள் மீது கருணை கூர்ந்து வேணவுதவி புரிந்தார்கள்.

அதுபோல் நந்தேயத்துள்ள கனவான்கள் ஏழைகளுக்குள்ள கஷ்டங்களை கவனித்து பஞ்ச நிவர்த்திக்கான உதவிகள் ஏதேனும் புரிந்ததுண்டோ, இல்லை.

இத்தகைய சுயப்பிரயோசன கனவான்களுக்கு உதவியாய் கற்றுமுள்ள ஏழைக்குடிகள் ஒன்றுகூடி அன்னியதேச சரக்குகளை வாங்காது விடுவது யாதுபயன்.

அன்னிய சரக்கு விலக்கினால் குடிகளுக்கு ஏதேனும் சுகமுண்டோ, வீண் குதூகலிப்பேயாம்.

அன்னியதேச விளைவாகும் கோதுமை மாவை அத்தேச வியாபாரிகள் இத்தேசத்தில் கொண்டுவந்தது முதல் நாளுக்குநாள் விலை சரசமாக விடுத்து சகலருக்கும் உணவளித்து வருகின்றார்கள்.

சுயதேச உணவாகும் அரிசியோ எனில் “நாளுக்குநாள் நகுந்ததடி யம்மானே” என்பதுபோல் ரூபாயிற்கு எட்டுபடி, ஏழுபடி, ஆறுபடி, ஐந்துபடி, நான்குபடி என்று குறைந்துக் கொண்டே வந்துவிட்டது. ஏழைக்குடிகளோ நொந்து கெட்டது.

இவ்வகையாய் அன்னியதேச சரக்குகள் நாளுக்குநாள் விருத்தியடைந்து வரவும் சுயதேச சரக்குகள் நாளுக்குநாள் குறைந்துகொண்டு வரவும் காரணம் யாதென்பீரேல்.

அன்னிய தேசத்தோருக்குள்ள விடாமுயற்சியும் கருணையும் சுதேசிகளுக்குள்ள சோம்பலும் பொறாமெயுமேயாம்.

தற்காலத் தோன்றியுள்ள இராஜதுவேஷிகள் யாதார்த்த சுதேசிகளாய் இருப்பார்களாயின் பஞ்சகாலத்தில் ஏழைகள் படும் பரிதாபத்துக்கிரங்கி பல முயற்சிகளால் பஞ்ச நிவர்த்திக்கான பாடுபட்டு பலனடையச் செய்வார்கள்.

அங்ஙனமின்றி நீங்கள் பஞ்சத்தில் மிஞ்சிகெட்டாலும் கெட்டுப் போங்கள். பெருவாரிமாறிகளால் மடிந்தாலும் மடிந்துப்போங்கள் அல்லது எங்கள் வார்த்தைக்கு இணங்கி இராஜத்துவேஷிகளாய் அழிந்தாலும் அழிந்துப்போங்கள் என்று அல்லலடையச் செய்வார்களோ, ஒருக்காலுஞ் செய்யமாட்டார்கள்.

பொதுநல சுதேசிகளன்றி சுயநல சுதேசிகளாதலின் அரசன் கெட்டாலென்ன குடிகள் கெட்டாலென்ன என்னும் கெடு எண்ணத்தால் இத்தியாதி கேடுகளையும் விளைவித்து வீண்கலகங்களை விருத்தி செய்கின்றார்கள். மற்றுமுள்ள கனவான்கள் இத்தகைய கேடுகளுக்கு இடம்கொடாது இராஜாங்கத்தோரால் பெறவேண்டிய சுகங்கள் யாவும் சகல குடிகளின் சம்மதத்தின்