கவியகம், வெள்ளியங்காட்டான்/கலைச்செல்வி

விக்கிமூலம் இலிருந்து
கலைச்செல்வி


வெள்ளி முளைத்ததடா! - நமது
வேதனை தீர்ந்ததடா!
வள்ள லெனும்படியாய் - ஒளியை
வாரி வழங்குதடா!
கள்ள இருட்பகைவன் - நம்மைக்
கட்டிய கட்டவிழ்த்துத்
துள்ளி எழுந்திடுவோம் - கலைத்
தொண்டு புரிந்திடவே!

தூய மணங்கமழும் - விடியல்
தோன்றத் தொடங்குவதும்
தீயவர் எண்ண மெனப் - பனியும்
தேய்ந்து மறைந்துவிடும்!
நேய இனிமைதனை - நேர்ந்து
நெஞ்சில் நிறைத்திடுவோம்!
மாய உலகினிலே - மாயா
மகிழ்ச்சியுண் டாகிடவே!

காலை அமைதிதனைக் - காகம்
கத்திக் கலைத்திடுமுன்
நீலக் கடலலைபோல் - எழும்
நினைவுக் குவியலினால்
சீலச் சிறப்புடைய - கலைச்
செல்வியின் மாளிகைக்குச்
சாலை அமைத்திடுவோம் - சகம்
சாந்தி அடைந்திடவே!

கூகையும்மெய்ம்மறந்துபொந்தில்
குந்தி யிருக்கும்டா!
பாகின் இனிய குரல் - குயில்
பண்கள் மிழற்றுமடா!
தோகைக் களிமயிலும் - நடனம்
தொடங்கும் சமயமடா!
சோகம் தொலைந்திடவே - உலகம்
சொக்கி மகிழுமடா!

தாமரைக் கோவிலிலே - கதிரோன்
தாழை அகற்றிடுவன்!
சேமக் கலன்முழக்கி - வண்டுகள்
செய்தி பரப்பினதும்
மாமரச் சோலையிலே - கிளி
மங்கல வாழ்த்திசைக்க
கோமள மானகலைச் - செல்வி
கொலுவில் அமர்ந்திடுவாள்

தேனெத்த செந்தமிழில்-துதி
செப்பிச் சிரத்தையுடன்
வானக் கதிர்மதியை - மலராய்
வண்ணக் கவிதையெனும்
ஏனத்தி லிட்டெடுத்தே - எழிலாய்
இறைவியின் முன்படைப்போம்!
ஞானத்தை நல்கிடுக - தமிழ்
நாட்டுகிளியெனவே!