பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொல்லாமை

83


2.பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

தான் ஈட்டிய உணவைப் பல உயிர்க்கும் பகுத்துக் கொடுத்து, மிகுந்ததைத் தானும் உண்டு அவ்வுயிர்களைக் காப்பாற்றுதல், நூலாசிரியர்கள் தொகுத்துக் கூறியுள்ள அறச் செயல்கள் எல்லாவற்றிலும் முதன்மையான அறச் செயல் ஆகும். 322

3.ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

கொல்லாமை என்னும் ஓர் அறமே பிற அறங்கள் எல்லாவற்றிலும் சிறந்த ஒன்றாக இருக்கத் தக்க சிறப்பினையுடையது. பொய் சொல்லாமை அந்தக் கொல்லாமைக்கு அடுத்தபடி சிறந்த அறமாக நிற்கத் தக்க சிறப்பினையுடையது.

ஒன்றாக நல்லது-தனிச் சிறப்புடையது; பின்சார-அதற்குப் பின் சிறந்து நிற்க. 323

4.நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

எல்லா அற நூல்களாலும் மிகவும் நல்ல வழி என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எதுவென்றால், அஃது எத்தகைய உயிரையும் கொல்லாமலிருக்கக் கடைப்பிடிக்கும் நெறியே ஆகும். 324

5.நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

இல்லற வாழ்வில் நேரும் துன்ப நிலைக்கு அஞ்சி அதை விட்டுத் துறவறதினை மேற்கொண்டவர்களைக் காட்டிலும், பிற உயிரைக் கொலை செய்வதற்கு அஞ்சி, எந்த உயிரையும் கொல்லாதிருக்கும் விரதத்தைக் கைக்கொண்டவனே சிறந்தவனாவான். 325

6.கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று.

கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாள் மேல், உயிரைக் கொண்டு செல்லும் எமன் தன் கருத்தைச் செலுத்த மாட்டான். 326