களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/களப்பிரரும் பிராமணரும்

விக்கிமூலம் இலிருந்து

களப்பிரரும் பிராமணரும்

களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் என்று சிலர் எழுதியுள்ளனர். பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி, கொற்சைக்கிழான் நற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு முற்காலத்தில் வேள்விக்குடி என்னும் ஊரைத் தானங்கொடுத்ததை அவனுடைய குடும்பத்தார் பரம்பரையாக அனுபவித்து வந்ததைக் களப்பிரர் தங்கள் ஆட்சிக் காலத்தில் அந்த ஊரைப் பிடுங்கிக் கொண்டனர் என்னும் சாசனச் சான்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர். வேள்விக்குடிச் செப்பேடு இந்தச் செய்தியைக் கூறுகிறது. "கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாத் தவிர்த்த பல்யானை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்ட்யாதிராசன் தாகமா மலர்ச் சோலை தளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கண்ணாளர் சொலப்பட்ட ச்ருதி மார்க்கம் பிழையாத கொற்கை கிழானற் கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்க கேள்வி அந்தணானர் முன்பு கேட்க என்றெடுத்துரைத்து வேள்வி சாலை முன்பு நின்று வேள்லிகுடி என்றப் பதியைச் சீரோடு திருவளரச் செய்தார். வேந்தனப் பொழுதேய் நீரோடட்டிக் கொடுத்தமையால் நீடுபுக்திதுய்த்தபின்னளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ர னென்னும் கலியரைசன் கைக்கொண்டதளை இறக்கிய பின் [1] "அங்கொருநாண் மாடமாமதிற் கூடற்பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக் கொற்றனேய் மற்றவரைத் தெற்றென நன்கு கூவி'என்னேய் நுங்குறை' என்று முள்ளாகப் பணித்தருள 'மேனாணின் குரவராற் பான்முறையின் வழுவாமை மாகந்தோய் மலர்ச்சோலைப் பாகனூர்க் கூற்றத்துப் படுவது, ஆள்வ தானை அடல் வேந்தேய்! வேள்விக்குடி என்னும் பியர் உடையது ஒல்காத வேற்றாளை ஓடோதவேலி உடன் காத்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக்குடி என்னப்பட்டது. கேள்வியாற் றரப்பட்டதனை துளக்கமில்லாக் கடற்றானை யாய் களப்ர ராலிறக்கப் பட்டது என்று நின்றவன் விஞ்ஞாப்யஞ் செய்ய......"[2]

களப்பிரர், வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்று செப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் அல்லர். களப்பிரர் பிராமணருக்குத் தானங்கொடுத்து ஆதரித்ததை 'அகலிடமும் அமருலகும்' எனத் தொடங்குகிற செய்யுள் (இணைப்பு 1 காண்க) கூறுகிறது.

பொருகடல் வளாகம் ஒரு குடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்த்து
அருள்புரி பெரும் அச்சுதர் கோவே

என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர் என்பது தெரிகிறது.


  1. பாண்டியர் செப்பேடு பத்து, தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு 1967, வேள் விக்குடி செப்பேட்டு 31-40)
  2. வேள்விக்குடிச் செப்பேடு, வரி 104-112.