களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/ஜைன சமய வளர்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

ஜைன சமய வளர்ச்சி

ஜைன பௌத்த மதங்கள் செழித்து வளர்ந்ததையும் சைவ வைதிக மதங்கள் ஒடுங்கிப் போவதையும் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெளிவாகக் கூறுகிறார்.

மேதினிமேல் சமண்சையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதி அரு மறைவழக்கம் அருகி அரன் அடியார் பால்
பூதிசாதன விளக்கம் போற்றல் பெறாதொழியக் கண்டு
ஏதமில் சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்'[1]

களப்பிரர் காலத்தில் வளர்ந்து சிறப்படைந்திருந்த ஜைன பௌத்த மதங்கள் அவர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகும் சிறப்படைந் திருந்ததைச் சேக்கிழார் கூறுகிறார்.

மெய்வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக்
கைவகை முறைமைத் தன்மை கழியமுள் கலங்குங்காலை[2]

என்றும்

பூழியர் தமிழ்தாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிகள் எல்லாம்
பாழியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
சூழிருட் குழுக்கள் போலத் தொடை மயிறபீலி யோடு
மூழிநீர் கையிற்பற்றி அமணரே யால் மொய்ப்ப[3]

என்றும்

பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
செறியு முக்குடையுமாகித் திரிபவர் எங்கும் ஆகி
அறியுமச் சமயநூலின் அளவினில் அடங்கிச்சைவ
நெறியினில் சித்தஞ் செல்லா நிலைமையில் நிகழுங்காலை [4]

என்றும் சேக்கிழார் கூறுகிறார். இது களப்பிரர் வீழ்ச்சிக் காலத்துக்குப் பின் கி.பி.7-ம் நூற்றாண்டில் சமயங்கள் இருந்த நிலை. இந்தநிலை களப்பிரர் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்தது.

மதுரையை யாண்ட களப்பிரர் அரசன் ஒருவன் சிவன் கோவில்களில் வழிபாடு செம்மையாக நடக்காதபடி தடை செய்தான். சிவன் கோவிலில் சந்தனக் காப்பு வழிபாடு நடக்காத படி தடைசெய்தான்.[5] அவன் சடையள் (சிவன்) அடியாரை வன்மை செய்தான்.

மடக்குகைகளிலே சமண (ஜைன) சமயத்து முனிவர்கள் தங்கித் தவஞ் செய்தார்கள். அவர்கள் பாண்டிய நாட்டிலே எட்டுக் குன்றுகளில் இருந்தனர். அந்த மலைகளை 'எண்பெருங் குன்றம்' என்றும், அங்கிருந்து தவஞ்செய்தவர்களை 'எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்' என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார்.[6] ' ஆனைமாமலை ஆதியாய இடங்களில்' ஜைனமுனிவர் இருந்ததைத் திருஞானசம்பந்தர் கூறுகிறார்.[7] 'எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்' என்று கூறுவதன் பொருள் மலை யொன்றுக்கு ஆயிரம் பேராக எட்டுமலைகளில் எட்டாயிரம் சமணர் என்று கருதக் கூடாது. ஆயிரம் என்பது இங்குப் பெருந்தொகையைக் குறிக்கிறது.

ஆனைமலை, அழகர்மலை, திருப்பரங்குன்றம், சமணர்மலை கழுகுமலை, சித்தன்னவாசல், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, நாகமலை (விக்கிரம மங்கலம்), சித்தர்மலை, விருச்சியூர், மருகால்தலை முதலாள மலைக்குன்றுகளில் ஜைனத்துறவிகள் தங்கித் தவஞ்செய்ததற்கு அடையாளமாக இன்றும் அங்கெல்லாம் ஜைனத் தீர்த்தங்கரர்களின் திருமேனிகளும் வட்டெழுத்துச் சாசனங்களும் காணப்படுகின்றன. களப்பிரர் வருவதற்கு முன்னேயே இந்தக் குகைகளில் ஜைன முனிவர் இருந்து தவஞ்செய்தனர். சில குகைகளில் பௌத்தப் பிக்குகளும் தங்கித் தவஞ்செய்தார்கள்.

களப்பிரர் ஆட்சிக் காலத்திலே, பல்லவ அரசர் ஆட்சி செய்த தொண்டை நாட்டிலும் ஜைனமதம் சிறப்பாக இருந்தது. குணபரன் என்றும் குணதரன் என்றும் சிறப்புப் பெயர் படைத்த மகேந்திரவர்மனும் ஜைன சமயத்தவனாக இருந்தான் என்று அறிகிறோம். தொண்டை நாட்டிலே பாடலிநகரத்தில் (திருப்பாதிரிப் புலியூரில்) அந்தக் காலத்தில் பேர் போன திகம்பர ஜைனமடம் இருந்தது. அந்த ஜைனமடத்தில் சிம்ம சூரி என்னும் ஜைனப்பெரியார் இருந்து லோகலிபாகம் என்னும் பெயருள்ள ஜைன மத நூலைச் சமஸ்கிருத பாஷையில் மொழி பெயர்த்தார் என்று அறிகிறோம். பாணராஷ்டிரத்தில் (தொண்டைநாட்டில்) பாடலி நகரத்தில் இருந்தபோது சகர ஆண்டு 380-ல் (கி.பி. 4598-ல்) சிம்மவர்மன் என்றும் அரசனுடைய 22-ம் ஆட்சியாண்டில் இந்த நூலை அவர் பெயர்த் தெழுதினார்.[8] இந்த ஜைனமடத்திலே கி.பி.7-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருள்நீக்கியார் என்பவர் (பிற்காலத்தில் திருதாவுக்கரசர்) தருமசேனர் என்றும் பெயர்பெற்று மடத்தலைவராக இருந்தார்.[9]

தேவசேனர் என்றும் ஜைன சமய ஆசாரியர், விக்கிரம சம்வத்ரம் 909-ல் (கி.பி.853-ல்) திகம்பரதர்சனம் என்னும் நூலை எழுதினார். அந்த நூலில் அவர், பாண்டி நாட்டில் வச்சிரநந்தி ஆசாரியர் திரமிள (திராவிட - தமிழ்) சங்கத்தை நிறுவினதாக எழுதியுள்ளார். பூஜ்ஜிய பாதர் என்றும் தேவ நந்தி ஆசாரியரின் மாணாக்கர்களில் வச்சிர நந்தி ஆசாரியரும் ஒருவர். வச்சிர நந்தி விக்கிரம் ஆண்டு 525-ல் (கி.பி. 170ல்) தக்கிண மதுரையில் (பாண்டி நாட்டு மதுரையில்) திரமிள சங்கத்தை நிறுவினார். இந்தக் காலம் மதுரையில் களப்பிர அரசர் ஆட்சிசெய்த காலம். களப்பிரர் ஜைனமதத்தை ஆதரித்தவராகையால் அவர்கள் காலத்தில் வச்சிரநந்தி திராவிடசங்கத்தை (ஜைன முனிவர்களின் திராவிட சங்கத்தை) நிறுவினார். ஏற்கனவே பாண்டி தாட்டில் வேர் ஊன்றி நிலைத்திருந்த சமண சமயம், ஜைனத் துறவிகளைக் கொண்ட திராவிட சங்கத்தை வச்சிர நந்தி மதுரையில் நிறுவினபோது, மேன்மேலும் தழைத்து வளர்வதற்குக் காரணமாக இருந்தது. சமண சமயத்தை வளர்ப்பதற்காக வச்சிர நந்தி அமைத்த திரமிள சங்கத்தையும் சங்ககாலத்தில் பாண்டியர் தமிழ் மொழியை வளர்க்க அமைத்த தமிழ்ச் சங்கத்தையும் ஒன்று என்று கருதுவது தவறு. இந்த இரண்டு சங்கங்களும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணத்துக்காக அமைக்கப்பட்ட சங்கங்கள். இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறுவது வரலாறு அறியாதவரின் தவறான கூற்றாகும். (இணைப்பு 2 காண்க)


  1. திருஞான சம்பந் நாயனார்புராணம் 18 சமண் - சமணர்; சாக்கியர் பௌத்தர்; அருவறை வழக்கம் - வேத வேள்வி செய்யும் வைதிக மதம்: அரன் - சிவன், பூதிசாதனம் - திருநீற்றுச் சாதனம்)
  2. திருஞானசம்பந்த நாயனார் புராணம் 599
  3. திருஞான சமபந்த நாயனார் புராணம் 601. (பூமியர் தமிழ்நாடு பாண்டி நாடு; பாழி குகை; அருகா ஜைனர்)
  4. திருஞானசம்பந்த நாயனார் புராணம் 602
  5. மூர்த்தி நாயனார் புராணம் 17
  6. திருஞானசம்பந்த நாயனார் புராணம் 631, 635
  7. திருவாவாயப் பதிகம்
  8. Mysore Armacological Report for the year 1909-10
  9. திருநாவுக்கரசு நாயனார் புராணம் 38, 39, 40