இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42 ☐ கனிச்சாறு - மூன்றாம் தொகுதி
40 பூட்டறுக்கப் புறப்படுவீர்!
ஏட்டகத்துப் பலவாறாய்த் தமிழுணர்வை
ஆள்வோருக் கெழுதிக் காட்டி,
நாட்டகத்துத் தமிழர்நலம் நசுக்குகின்ற
போக்குக்கு நயன்மை கேட்டோம்!
வேட்டெஃகத்தை எடுத்தால்தான் விடுதலையே
தமிழகத்தில் விளையும் என்றால்,
பூட்டறுக்கப் புறப்படுவீர் மறவர்களே;
உரிமைநலம் புதுக்கு தற்கே!
வாட்டுகின்ற வறுமைக்கும் எந்தமிழர்
அடிமையிலே வாடுதற்கும்,
நீட்டுகின்ற வெடிக்குழல்தான் ஒருமுடிவைத்
தமிழகத்தில் நிகழ்த்தும் என்றால்,
காட்டுங்கள் தமிழ்மறத்தை தொல்லடிமைக்
கட்டறுக்கும் காளை யோரே,
தீட்டுகின்ற பட்டயத்தில் நும்பெயரை
முதல் பெயராய்த் தீட்டு தற்கே!
-1975