இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 7
5 குழந்தை!
குழந்தை இங்கே வா!
கொஞ்சி முத்தம் தா!
பாலுஞ் சோறும் உண்ணு!
பத்து வரையில் எண்ணு!
அஆ இஈ என்றே
அப்பா வந்தால் சொல்லு!
பட்டுச் சட்டை தைப்பார்!
பதக்கம் வாங்கி வைப்பார்!
முத்துப் பல்லைக் காட்டு!
முன்னங் கையை நீட்டு!
சோற்றை வாயில் போடு!
சுவையாய்ப் பாடி ஆடு!
-1960
6 பாட்டி!
கூன் விழுந்த பாட்டி,
குட்டைக் காலை நீட்டிப்
பாலுஞ் சோறும் ஊட்டிப்
படுக்க வைப்பாள் ஆட்டி!
ஈரும் பேனும் பார்ப்பாள்!
எங்கும் தூய்மை சேர்ப்பாள்!
நோயை நன்கு தீர்ப்பாள்!
நாளும் அன்பை வார்ப்பாள்!
அண்டை வீடு செல்வாள்!
அரட்டை பேசி வெல்வாள்!
கொசுவை ஈயைக் கொல்வாள்!
கோடிக் கதைகள் சொல்வாள்!
-1960