இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 125
124
மென்னீர்க் குமிழிகள்!
வழலை நீரில் குழலைத் தோய்த்து
வாயால் அண்ணன் ஊதினான்! - அட!
சுழல் சுழலாக மென்னீர்க் குமிழிகள்
சுழன்றன! மிதந்தன! மின்னின!
சிறிதும் பெரிதுமாய்ப் பன்னிறக் குமிழிகள்
சீர்த்தன! பூத்தன! பொங்கின! - அட!
வறிதே தோன்றின! வறிதே மறைந்தன!
‘வாழ்க்கையும் இதுதான்’ என்றன!
கையில் நனைந்தன! தலையில் வெடித்தன!
கன்னம் தீண்டி உடைந்தன! - அட!
பொய்யில் பூத்த புகழுரை போலப்
பொங்கின! மங்கின! காய்ந்தன!
காற்றில் தோன்றின! காற்றில் மிதந்தன!
காற்றில் கரைந்தன, குமிழிகள்! - அட!
தோற்றமும் வாழ்வும் மறைவும் எல்லாம்
துல்லிய மாகவே விளங்கின!
-1982