பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 173
131
அறுபது பொங்கல்!
(அறுபது அகவைக் கிழவி, தன் பெயர்த்தியிடம் சொல்கிறாள்.)
நீண்ட சுருட்குழல் சேல்விழி மேவியென்
நெஞ்சை யிழுத்திடும் பாவையே,
ஆண்டுக் கொருமுறை பொங்கல் வந்தே, உளத்
தாக்கிய கூத்தினைக் கேளடி!
1
பொங்கல் பிறக்குமுன் நான்பிறந் தேன்எனப்
பெற்றவர் என்னிடம் சொல்லியே,
பொங்கி மகிழ்ந்து மகிழ்ந்தத னால்,இரு
பொங்கல் கழிந்தது வல்லியே!
2
மூன்று கழிந்தது; நான்கு கழிந்ததென்
முல்லைப்பல் கண்டு மகிழ்ந்தனர்;
ஆன்று சிறந்த தமிழ்மொழி யை, என்றன்
அன்னை எனக்கறி வித்தனள்.
3
பள்ளியிற் குந்தினேன்! ஐந்தெனப் பொங்கல்
பறந்தோடி வந்ததே! ஆறினில்,
துள்ளி மகிழ்வுட னாடுதற்கே என்றன்
தோழிகளும் உடன் சேர்ந்தனர்!
4
சிற்றில் கட்டி விளையாடி மகிழ்வெய்திச்
செம்மலர் ஊஞ்சலில் உந்தியும்.
நெற்றி சுழித்திரு நீள்விழி யால், இசை
நேருக்கு நேராக ஆடியும்,
5
பூத்த மலர்க்கொம்பை எட்டிப் பிடித்தற்குப்
புன்னை யிலையடி தாவியும்,
கோத்த மலர்ச்சர மிட்டிரு பெண்களைக்
காதலர் ஆக்கியும் ஆடிட,
6
பத்தும் இரண்டும் பறந்து, பதின்மூன்றிற்
பாதியும் தீர்ந்ததப் போதிலே
பத்தரை மாற்றுப் பொன் மேனியென, எனைப்
பார்த்தவர் கூறிடக் கூசினேன்!
7
அன்றொரு பொங்கலில், ஆறுசென்றேன்; மக்கள்
ஆட்டினை மாட்டினை மூழ்க்கியே,
நன்று கழுவிய வாறிருந்தார்; கண்டு
நின்றிருந்தேன்; எனை நோக்கியே,
8