606
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
6-10-72-ல் திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து மணியம்மையார், நாயைக் காணவில்லை, என்று “விடுதலை”யில் செய்தி தந்தார்கள். பப்பி என்னும் 2 வயதுடைய அல்சேஷன் அது. செயிண்ட் ஜோசப் கல்லூரியருகே கிடைத்ததாக யாரோ 9-ந் தேதி அதனைச் கொண்டுவந்து விட்டனர். அம்மையார் மகிழ்ச்சியுற்றார்.
8-ந் தேதி பெரியமேட்டில் பேசிய பெரியார் “கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். இதில் கடமைக்கும் கண்ணியத்துக்கும் நேரம் இடம் காலம் பார்த்து வெவ்வேறு அர்த்தம் சொல்ல முடியும். ஆனால் கட்டுப்பாடு என்பதற்கு, எப்போதும் எல்லாருக்கும் ஒரே அர்த்தம்தான். வியாக்கினம் வேறுபட முடியாது. தி.மு.க.வுக்கு இப்போது மறுபடியும் கட்டுப்பாடு பற்றி நான் ஞாபகப்படுத்த வேண்டியவனாயிருக்கிறேன். முன்பு நேப்பியர் பார்க்கில் மாண்புமிகு அன்பழகன், கலைஞரைத் தலைவரென்று ஒத்துக் கொண்டால் என் மனைவியே என்னைக் கோபிப்பாள் என்று சொன்னபோதும் நான் இதையே குறிப்பிட்டேன். கட்டுப்பாடு குலைந்தால் நீதிக்கட்சியின் கதிதான் உங்களுக்கும் ஏற்படும்” என்று எச்சரித்தார். பூண்டி பொறியியல் விஞ்ஞானி, தலைசிறந்த பகுத்தறிவாளர் குமாரசாமி அவர்கள் தலைமையில் பெரியார் பூண்டியில் பகுத்தறிவாளர் கழகத்தை 9-10-72 அன்று துவக்கினார். இதன் செயலாளர் கோபாலசாமி, சிறந்த சுயமரியாதை வீரராவார். 10-ந்தேதியன்று “விடுதலை”யில் தி.மு.க.வும் கட்டுப்பாடும் என்ற தலையங்கக் கட்டுரை ஆசிரியரால் எழுதப்பட்டிருந்தது.