சங்க இலக்கியத் தாவரங்கள்/014-150

விக்கிமூலம் இலிருந்து
 

வழை-சுரபுன்னை
ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

“கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை” (குறிஞ்:83) என்று கபிலர் கூற்றில் வரும் ‘வழை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘சுரபுன்னை’ என்று உரை கண்டார். வழை என்பது ஒரு பெரிய மரம். எப்போதும் இலைகள் அடர்ந்து காணப்படும். மலைப் பகுதியில் அடர்ந்த காடுகளில் வளரும். இதன் மலர் வெண்ணிறமானது. நறுமணம் உடையது.

சங்க இலக்கியப் பெயர் : வழை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நாகம், புன்னாகம்
பிற்கால இலக்கியப் பெயர் : சுரபுன்னை
உலக வழக்குப் பெயர் : சுரபுன்னை
தாவரப் பெயர் : ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

வழை-சுரபுன்னை இலக்கியம்

“கோடல் கைதை கொங்கு முதிர் நறுவழை-குறிஞ் : 83

என்றார் குறிஞ்சிக் கபிலர்

“வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்”

(வாய் தப்பாத)

-புறநா: 132:2

என்றார் ஏணிச்சேரி முடமோசியார். இவ்வரிகளில் கூறப்படும், “வழை” என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியரும், புறநானூற்றுப் பழைய உரையாசிரியரும் ‘சுரபுன்னை’ என்று உரை வகுத்துள்ளார்கள். ‘வழை சுரபுன்னை’ என்று கூறும் நிகண்டுகள்.

“வழை அமல் அடுக்கத்து வலன் ஏற்பு வயிரியர்”

- அகநா. 328:1

“கழைஅமல் சிலம்பின் வழை தலைவாட”-அகநா. 177 : 7

கழைநரல் சிரம்பின் ஆங்கண் வழையொடு
 வாழை ஓங்கிய தாழ்கண்அசும்பில்”
-அகநா. 8 : 8

வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்”-பதிற். 41 : 13

வழைவளர் சாரல் வருடை நன்மான்”-கலி. 50 : 21

வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ்சாரல்”-கலி. 53 : 1

வாழை ஓங்கிய வழைஅமை சிலம்பில்”-நற். 222 : 7

கழைவளர் சிலம்பில் வழையொடு நீடி”-புறநா. 158 : 20

ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்
 அகருவழை ஞெமை ஆரம் இனைய”
-பரி. 12 : 4-5

கரையன சுரபுன்னை”-பரிபா. 11 : 17

இவ்வாறெல்லாம் சங்கவிலக்கியங்கள் கூறுதலின் மலைப் பகுதிக் காடுகளில் இம்மரம் ஓங்கி வளருமெனவும், கான்யாற்றுக் கரையிலும் காணப்படுமெனவும், சுரத்தில் வளரும் புன்னை போன்றதெனவும், நறிய மலரை உடையதெனவும் அறியலாம். மேலும், ஆய் அண்டிரன் என்பான் ‘வழை’ எனப்படும் சுரபுன்னை மலரைத் தனது முடிப்பூவாகச் சூடியிருந்தான் என்றும் தெரிய வரும்.

இம்மரம் மூங்கில், வாழை முதலியவற்றுடன் வளர்வதாகப் பேசப்படுகின்றது. வற்கடம் உறுதலை அறியாத வழை என்று இதனைக் கலித்தொகை குறிப்பிடுமாயினும் மூங்கில் நிறைந்த மலைப்பாதையில் வளரும் இம்மரமும் சற்று வாடிப் போகும் என்று கூறும் அகநானூறு 177 : 7.

கட்டிபெரே’ என்னும், இதனுடைய தாவரக் குடும்பத்தில் 45 பேரினங்களும், 900 சிற்றினங்களும் உலகில் உள்ளன என்றும், இவற்றுள் 6 பேரினங்களே இந்தியாவில் உள்ளன என்றும், தமிழ்நாட்டில் 5 பேரினங்களும், ஆக்ரோகார்ப்பஸ் என்ற இப்பேரினத்தில் ஒரு சிற்றினமாகிய லாஞ்சிபோலியஸ் மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்கிறதென்றும் கூறுவர். சுரபுன்னை

வழை
(Ochrocarpus longifolius)

யின் குரோமோசோம் எண்ணிக்கை இது காறும் கண்டு சொல்லப் படவில்லை.

வழை–சுரபுன்னை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : கட்டிபெரேலீஸ்-அகவிதழ் பிரிந்தவை
தாவரக் குடும்பம் : கட்டிபெரே
தாவரப் பேரினப் பெயர் : ஆக்ரோகார்ப்பஸ் (Ochrocarpus)
தாவரச் சிற்றினப் பெயர் : லாஞ்சிபோலியஸ் (longifolius)
தாவர இயல்பு : மரம்; மலைப்பகுதியில் அடர்ந்த காட்டில் வளரும் பெரிய மரம். எப்போதும் இலையடர்ந்து காணப்படும்.
இலை : தடித்த பசிய நீண்டகன்ற இலைகள்.
மஞ்சரி மலர் : மலர் தனித்தும் கொத்தாகவும் இலைக்கோணத்தில் இலை விழுந்த குழிந்த தழும்பிலிருந்து உண்டாகும். மலர் வெண்ணிறமானது. 0.7 அங். அகலமானது.
அல்லி வட்டம் : புல்லி வட்டம் மலரும் போது 2 பிளவுகளாகிவிடும்.
புல்லி வட்டம் : 4 அகவிதழ்கள் பிரிந்தவை:
மகரந்த வட்டம் : பல நேரான தாதிழைகள். தாதுப் பைகளும் நீண்டகன்று நிமிர்ந்துள்ளன.
சூலக வட்டம் : இரு சூலிலைச் சூலகம். 2 சூல்கள் சூல்தண்டு-சுபுலேட் சூல்முடி மூன்று பிளவுகளாக இருக்கும்.
கனி : பெர்ரி எனப்படும் சதைக்கனி, ஒரு அங்குல நீளமானது. பெரிய ஒரு விதை
மட்டும் உண்டாகும். கருவில் முளை வேர் அகன்றது. இரு வித்திலைகள் சிறியவை.

இதன் மரம் வன்மையானது; செந்நிறமானது; மர வேலைகளுக்குகந்தது. மலபார், கோவை முதலியவிடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் வளர்கிறது. இம்மரத்தை "வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ்சாரல்" என்றதற்கு ஏற்ப இம்மரம் மலைப்பாங்கில் வற்கடம் அறியாது-வஞ்சமில்லாமல் பஞ்சம் தெரியாமல் தழைத்துப் பருத்து வளரும் இயல்பிற்று. எக்காலத்திலும் பசுமையாக இலையடர்ந்து காட்சி தரும். இம்மரம் பூத்தவுடன் மலைப்பாங்கெல்லாம் இம்மலர் மணம் கமழும்.