சங்க இலக்கியத் தாவரங்கள்/034-150

விக்கிமூலம் இலிருந்து

 

கண்ணி–குன்றி
ஏப்ரஸ் பிரிகடோரியஸ் (Abrus precatorius, Linn.)

கபிலர், ‘குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி’ என்றார் (குறிஞ்: 72) இவ்வடியில் வரும் ‘கண்ணி’ என்பதற்குக் ‘குன்றிப்பூ’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர். இக்காலத்தில் இது குன்றி மணி என வழங்கப்படுகின்றது. குன்றி மணி பெரிதும் செந்நிறமானது. இதுவன்றி, சற்று மங்கிய வெண்ணிறமான குன்றி மணியும், தூய வெண்ணிறமான குன்றி மணியும், நன்கு கறுத்த கருநிறமான குன்றி மணியும் உண்டு. இவையனைத்தும் தாவரவியலில் ஒன்றாகவே கருதப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : கண்ணி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : குன்றி
உலக வழக்குப் பெயர் : குன்றி, குன்றிமணி
தாவரப் பெயர் : ஏப்ரஸ் பிரிகடோரியஸ்
(Abrus precatorius, Linn.)

கண்ணி–குன்றி இலக்கியம்

குறிஞ்சிக் கபிலர் ‘குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி’ (குறிஞ்: 72) என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். நச்சினார்க்கினியர் இதற்குக் ‘குன்றிப்பூ’ என்று உரை கூறினார். பாரதம் பாடிய பெருந்தேவனார், ‘குன்றி ஏய்க்கும் உடுக்கை’ (குறுந். 1 : 3) என்றும் குன்றிக்கொடியில் விளையும் விதையைக் கூறினார். முருகப் பெருமானது சிவந்த ஆடைக்குக் குன்றிமணி உவமையாகக் கூறப்பட்டது. திருவள்ளுவர் குன்றியின் சிவந்த விதையைக் ‘குன்றி’ என்று கூறுவர்.

குன்றி
(Abrus precatorius)

“புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
 மூக்கிற் கரியார் உடைத்து”
-திருக்குறள். 28 : 7

குன்றிமணியின் பெரும்பகுதி நல்ல செந்நிறமும், ஒரு புறத்தில் சிறிது கறுப்பு நிறமும் உடையதாக இருப்பதை உவமித்துரைக்கிறார். குன்றிமணியின் செந்நிறம் போன்ற செம்மை நலத்தைத் தோற்றத்தில் பெற்றாரும், அதன் மூக்கில் கருமை இருப்பது போல அகங்கருத்திருப்பர் என்று எச்சரித்துள்ளார். சங்கவிலக்கியத்தில், குன்றிக்கொடி, ‘கண்ணி’ என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1959-60ஆம் ஆண்டுகளில் எம்.எஸ்ஸி பட்டத்திற்கு, குன்றியில் யாம் ஓர் ஆய்வு மேற்கொண்டோம். அந்த ஆய்வுரை முழுவதும் வெளியிடப்படவில்லை. குன்றிமணிக் கொடி, அவரை இனத்தைச் சேர்ந்தது. மங்கலமான செந்நிறமுள்ள மலர்கள் நுனிவளர் பூந்துணரில் உண்டாகும். மலர்கள் கருவுற்று, நீண்ட பசிய தட்டையான காய்களைத் தரும். காய்கள் கொத்தாக இருக்கும். இக்காய்களில் விளைந்த விதைகள் வெண்ணிறமாக இருக்கும். முதிர்ந்த இதன் விதையில் காணப்படும் கறுப்புப் பகுதி மட்டும், இதன் காயில் சிவப்பாக இருக்கும். இதன் பெரும் பகுதி வெண்மை நிறமாக இருக்கும். விதை முதிருங்கால், இதில் உள்ள வெண்மை நிறம் சிவப்பாக மாறும். இது சிவப்புக் குன்றியின் இயல்பு.

இதுவன்றி, வெள்ளை நிறமான விதைகளையுடைய வெண்குன்றிக் கொடியும் ஒன்று உண்டு. இதில், வெண்ணிறமான குன்றிமணிகள் விளையும். இவ்விதையின் ஒரு புறத்தில் மங்கிய மஞ்சள் நிறம் சிறிது காணப்படும். இவ்விரு கொடிகளும் பெரிதும் தனித் தனியாக நமது நாட்டின் பல்வேறு சிறு காடுகளில் நன்கு வளர்கின்றன. இவ்வெள்ளைக் குன்றியைக் காட்டிலும் பளபளப்பான மாசற்ற மிக வெள்ளிய குன்றிமணியை உடைய செடியும், கறுப்பு நிறமான விதைகளையுடைய கருங்குன்றிச் செடியும் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள சிறு புறவுகளில் வளர்கின்றன. இவையனைத்தும் தாவரவியலில் ஏப்ரஸ் பிரிகடோரியஸ் என்றே தொன்று தொட்டு வழங்கப்படுகின்றன.

எமது ஆய்வுக்குச் செங்குன்றியும், வெண்குன்றியும் தனித் தனியாகவே வளர்க்கப்பட்டன. இவை இரண்டும் பல்லாற்றானும் வேறுபட்டிருந்தமையின், இவற்றுள் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆய்ந்து கணிக்க நேர்ந்தது. அவையாவன:

குன்றி
(Abrus precatorius)


எண்.
(1)
இயல்புகள்
(2)
செங்குன்றி
(3)
வெண்குன்றி
(4)

 1. கொடி 10-12 அடி நீளம் 10-18 அடி நீளம்
 2. இலை 10-16 சிற்றிலைகள் கூட்டிலை கூட்டிலை, 10-30 சிற்றிலைகள்
 3. மஞ்சரி நுனிவளர் பூந்துணர் நுனி வளர் பூந்துணர்
 4. மலர் மங்கிய செந்நிற மலர்கள் வெண்மை நிறமான மலர்கள்
 5. காய் பசிய கொத்தில் 4-8 காய்கள் பசிய கொத்தில் 4-12 காய்கள்
 6. காயிலுள்ள விதைகள் வெண்ணிறமும் செந்நிற மூக்கும் வெண்ணிறம்
 7. கனி செந்நிறமும் கருநிற மூக்கும் வெண்ணிறமும் மஞ்சள் நிற மூக்கும்
 8. விதை எளிதில் ஊறாது, அதனால் முளைக்காது. விதையுறை மிக வலியது. எளிதில் ஊறு முளைக்கும். விதையுறை மென்மையானது.
 9. குரோமோசோம் எண்ணிக்கை 2 என் - 22 2 என் = 22
10. தண்டின் உட்பகுதி இரு வித்திலைக் கொடிகட்குரிய இயல்பானது. நார் அணுக்கள் மிகுதியாக உள்ளன. அதனால் கொடி வலியது.
11. குரோமசோம் அளவு சிறியது சற்றுப் பெரியது
12. குரோமோசோம் 2.1 மைக்ரான்கள் 2.8 மைக்ரான்கள்
காம்பிளிமென்ட் 0.8 மைக்ரான் 1 மைக்ரான்
13. அடிப்படைக் குரோமோசோம் எண்ணிக்கை 5 — —
14. அதன் அமைப்பு A A A
B B
C C
D D
E E
காணவில்லை.
15. செல்லியல் பெயர் அல்லோபாலிபிளாயிட் (Allopolyploid) — —
16. இலைகள் இரவில் மூடுமியல்பு 21.00 மணி 19-00 மணி
17. இலைகள் காலையில் விரியுமியல்பு 08.00 மணி 05-00 மணி
18. இரவில் நீலநிற ஒளியில் (200) மைக்ரான் விரியாது விரியும்
19. இரவில் செந்நிற ஒளியில் (25) விரியும் விரியாது


இங்ஙனம் பல்லாற்றானும் வேறுபாடுடைய வெண்குன்றிக் கொடியைச் செங்குன்றிக் (Abrus precatorius) கொடியினின்று வேறுபடுத்திச் சிற்றினப் புதுப் பெயர் சூட்டப் பெற்றது. அதனால் வெண்குன்றிக் கொடிக்கு ஏப்ரஸ் லுகோஸ்பர்மஸ் (Abrus leucospermus, Srin. sp. nov.) எனப் பெயரிடலாம் என்று எழுதப் பட்டது. (1961).

இவ்விரு கொடிகளையும் செயற்கை முறையில் புணர்த்தி, புதுச்செடி பிறப்பித்தற்குச் செய்த முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போயின. அதனால் இவ்விரு கொடிகளையும் ஒருங்கே நட்டு, ஒன்றோடொன்று பின்னிப் பிணைத்து இவை வளர்க்கப் பட்டன. உரிய காலத்தில், இவ்விரு கொடிகளும் ஒரு வாரம் முன்பின்னாக மலர்ந்தன. எப்படியோ, இவையிரண்டும் இயற்கையாகவே ஓரிணரில் இணைந்தன போலும். அதன் பயனாகச் செங்குன்றிக் கொடியில் ஒரு கொத்து மட்டும் செம்மை கலந்த ஊதா நிறமான (Pink) குன்றிமணிகளைக் கொண்டிருந்தன. அவற்றைத் தனித்து முளைக்க வைத்து வளர்த்துப் பார்த்த போது, இக்கொடியில் செம்மை கலந்த ஊதா நிறமான விதைகள் விளைந்தன என்ற உண்மையைத் தெரிவிக்க எமதுள்ளம் விழைகின்றது.

கண்ணி—குன்றி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-அகவிதழ்கள் பிரிந்தவை
தாவரவியல் துணைக் குடும்பம் : பாப்பிலியோனாய்டியே
தாவரப் பேரினப் பெயர் : ஏப்ரஸ் (Abrus)
தாவரச் சிற்றினப் பெயர் : பிரிகடோரியஸ் (precatorius)
தாவர இயல்பு : பசிய மெல்லிய கம்பி போன்ற நீண்ட கொடி.
இலை : பல சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகள் சுற்றடுக்கில் உண்டாகும்.

மணிச்சிகை–குன்றி
(Abrus precatorius)

மஞ்சரி : நுனிவளர் பூந்துணர்
மலர் : மங்கிய செந்நிறம். அவரைப் பூப் போன்றது.
புல்லி வட்டம் : 5 பசிய, மெல்லிய சிறு புல்லிகள் பிரிந்து சிறு பற்கள் போன்றிருக்கும்.
அல்லி வட்டம் : 5 இதழ்கள், பதாகையிதழ் மேற்புறத்தும், 2 பக்கவிதழ்கள் இருபுறத்தும் அடியில் தோணி வடிவான இருவிதழ்களும் நீண்டு வளைந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : 9 தாதிழைகள் ஒரு தொகுதியாக உள்ளன. தனித்த மற்றொரு தாதிழை இல்லை.
சூலக வட்டம் : ஒரு சூலக ஓரறைச் சூலகம். பல சூல்கள் சூல்தண்டு குட்டையானது.
காய் : பசிய கொத்தில் பல காய்கள் (4-8)
கனி : வெடியாத உலர்கனி ‘பாட்’ எனப்படும்
விதை : மிகச் சிறந்த செந்நிறமானது. வலிய மூக்கில் கறுப்பு நிறமுள்ளது.புற உறை உடையது. எளிதில் முளைக்காது. அதனால் ஆஸ்மிக் அமிலத்தை (Osmic Acid) 5% கரைசலில் கண்களை நன்கு மூடிக் கொண்டு ஊற வைத்தால், 24 மணி நேரத்தில் விதையுறையில் நுண்ணிய வெடிப்புகள் உண்டாகும். அப்போது முளைக்க வைத்தால், முளை பழுதின்றி வெளி வரும்.

குன்றியின் விதை குன்றிமணியாகும். இதனைப் பொற்கொல்லர் தங்கம் நிறுப்பதற்குப் பயன்படுத்துவர். இதன் நிறத்தைக் கண்டு மயங்கி உண்ணுங் கனியென்று புள்ளினம் பற்றிச் சென்று வேறிடங்களில் வீசி விடுவதால், விதை பரவுதல் நிகழும். இதன் பருப்பு, துவரையின் பருப்புப் போன்றது. ஆனால், இதில் ஏப்ரலின் (Abralin) என்ற நச்சுப் பொருள் (Alkaloid) உள்ளபடியால் உணவாகப் பயன்படாது.

செங்குன்றிமணிகளை விளைவிக்கும் செங்குன்றிச் செடியைப் போன்றது. வெண்குன்றி மணிகளைத் தரும் வெண்குன்றிச் செடி. இதன் மலர்கள் வெண்ணிறமானவை. இவையன்றி, கருங்குன்றி விளையும் குன்றிச் செடி ஒன்றுண்டு. பச்சை நிறமுடைய குன்றியுமுண்டு. இதன் மலர் செந்நிறமானது. இவையனைத்தும் ஏப்ரஸ் பிரிகடோரியஸ் என்றே பயிலப்படும்.

மணிச்சிகை

“செங்கொடு வேரி தேமா மணிச்சிகை”-குறிஞ். 64

என்றார் குறிஞ்சிக் கபிலர். ‘மணிச்சிகை’ என்பதற்குப் பொருள் கூறிய நச்சினார்க்கினியர், ‘செம்மணிப்பூ’ என்றார். சங்கச் செய்யுள்களில் இப்பெயர் வேறெங்கும் காணப்படவில்லை. பிற்கால அகரமுதலி [1] ஒன்று மட்டும் இதனைக் குன்றிமணி என்று கூறுகின்றது. குன்றிக்கொடியின் முதிர்ந்த பூங்கொத்தைப் போன்று, மலர்க் கொத்தின் மேல் உச்சியில் செம்மணியைப் பெற்றுள்ள மலரை உடைய தாவரம் எனக் கொள்வதல்லது வேறு விளக்கம் பெறுமாறில்லை. இப்போதைக்கு இதனைக் குன்றி என்றே கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இதனையும் ஏப்ரஸ் பிரிகடோரியஸ் (Abrus precatorius) என்று குறிப்பிடலாம்.


  1. அகரமுதலி