பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த சிப்பாய்க் கிளர்ச்சிக்கு முன்பே தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் வெடித்தது. பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மு, சிவகெங்கைச் சீமையில் மருதிருவர், மற்றும் பல எண்ணற்ற வீரர்கள் விடுதலைப் போரில் தம் இன்னுயிரை ஈந்த வரலாற்றை நாம் அறிவோம். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில், வெள்ளையனை எதிர்த்து, தன்னாட்சிக்கு வீர சபதம் ஏற்று, போர்க்கொடி உயர்த்திய ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியைப் பற்றிய வரலாறு இதுவரை முழுமையாக அறிய முடியாமலே இருந்து வந்துள்ளது. இப்பொழுது அந்தக் குறையினை டாக்டர் எஸ். எம். கமால் விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்' எனும் இந்நூலைப் படைத்ததன் மூலம் நிறைவு செய்துள்ளார். அரசு ஆவணக் காப்பகத்திலிருந்து சேதுபதி மன்னரைப் பற்றிய பல அரிய உண்மைகளைச் சேகரித்து இந்நூலில் தந்துள்ளார்.


1760-ல் பிறந்த இம்மன்னர் இளம் வயதிலிருந்தே ஆங்கிலேயரால் சுமார் 22 ஆண்டுக் காலம் திருச்சி, சென்னை ஆகிய கோட்டைச் சிறைகளில் அடைக்கப்பட்டு, 1809-ல் சென்னை கோட்டைக்கு அருகிலுள்ள பிளாக் டவுனில் உயிர் நீத்தார்.


சேதுபதி மன்னர் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி இராமநாதபுர மக்களின் வாழ்க்கையை எவ்வாறு சூறையாடியது என்பதனையும் அங்கு குறிப்பாக கைநெசவாளர் தயாரித்த மஸ்லின்வகை போன்ற துணிகள் எவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதனையும் ஆதாரங்களுடன் இந்நூல் விளக்கிக் கூறுகிறது.


இந்நூலுக்கு தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி, எம். ஏ., பிஎச்.டி., அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அன்னாருக்கு எமது நன்றி உரியது.


தமிழக வரலாற்று ஆய்வாளர்களும், மாணவர்களும், பொதுமக்களும் இதனை வரவேற்பார்கள் என்னும் நம்பிக்கையுடன் இந்நூலை வெளியிட்டுள்ளோம்.

சர்மிளா பதிப்பகம்