பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அறிமுகம்

அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான நமது விடுதலைப் போராட்டம், நாடு தழுவிய தேசிய இயக்கமாக முதன் முதலில் வட இந்தியாவில் கி.பி. 1857-ல் இந்திய சிப்பாய்களது கிளர்ச்சியுடன் தொடங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் அண்மைக் காலம் வரை எண்ணி வந்தார்கள். எழுதி வந்தார்கள்.

ஆனால், அந்தக் கிளர்ச்சிக்கும் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், தெற்கே தமிழ்நாட்டில் விடுதலை இயக்கம் துவங்கிவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத வரலாற்று உண்மை. அந்த இயக்கத்தின் பல பகுப்புகளை, மோதல்களை, போராட்டங்களை விவரமாக அறியத்தக்க வாய்ப்பு இல்லை. அவைகளைத் தொடர்ந்து தலைமை தாங்கிய தீரர்களை வீரர்களை . தியாகிகளைப் பற்றிய விவரங்களை வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில், முறையாகத் தொகுத்து வழங்கும் பணி மேற்கொள்ளப்படாததுதான் அதற்குக் காரணமாகும்.

அதனைத் தொடரும் முகமாக, இந்த நூலில், மறவர் சீமையின் தன்னாட்சிக்கு வீரமுழக்கமிட்டு, நமது நாட்டு விடுதலை வேள்வியைத் துவக்கிய, வேந்தர் திலகம் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னர் (1760-1809) தமிழக மக்களுக்கு அறிமுகம் பெறுகிறார்.

ஆயுத பலத்தை ஆதாரமாகக் கொண்ட ஆற்காட்டு நவாப் முகம்மது அலி-ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார்-ஆகியோரது ஆதிக்க வெறியை அழித்து ஒழிக்க துடிதுடித்து செயல்பட்ட அந்த இளம் மன்னரைப் பற்றிய செய்திகளை வரலாற்று ஆவணங்களில் இருந்து தொகுத்து இங்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வீர மறவரைப் பற்றிய செய்தியை முதன் முதலில் கி.பி. 1891-ல் வெளியிடப்பட்ட ஆங்கில நூலான இராம்நாட் மானுவலில் (Rammad Manual-1898) "முத்துராமலிங்க சேதுபதி மன்னர் கி.பி. 1792-ல் ஆங்கில அரசுக்கு எதிராகப் புரட்சி செய்யும் போக்கினைக் கொண்டு இருந்தார்" (பக்கம் 248). "அதனால் அவரது சீமையை நிர்வகிக்க கும்பெனிக்கு கலெக்டர்