பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


ஆனால், அதே வரிசையில் வசீகரப்பூச்சுகளுடன், மயக்கமூட்டத் தக்க பேச்சுகளையும் குறிக்கோள் என்ற பெயரால் நிற்கவிடுகின்றனர். தெளிந்து அறிதல் வேண்டும்.

நாட்டிலே ஒற்றுமை வேண்டும்--இது குறிக்கோள்--அனைவரும் ஏற்கத் தக்கது; இதன் வெற்றிக்காக அரும்பணியாற்றுவது மாணவர் கடன்.

“நாட்டின் ஒற்றுமைக்காக--உன்மொழி, உன் மரபு அழிந்திடவும் ஒருப்படவேண்டும்; பிற மொழியின் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளவேண்டும்;"--இஃது அறிவுள்ள எவரும் ஏற்க முடியாதது. தன்மானமுள்ள எவரும் எதிர்த்தாக வேண்டியது.

இதனை இலட்சியம் என்றோ திட்டம்
என்றோ கூறுவது, வட்சியம் என்பதற்குக்
களங்கம் தேடுவதாக முடியும்.

நாட்டுப் பொதுச்செல்வம் நாளும் வளரவேண்டும். அதற்கான முறையில் அனைவரும் உழைத்திட வேண்டும்--இஃது எல்லோரும் ஒப்புக்கொள்ளத்தக்க லட்சியம்.

ஆடுகின்ற ஓநாய் கூறுவதுபோல
நாம் நடந்திடக் கூடாது

நாட்டுச் செல்வம் பெருகட்டும்; அது நாலாறு பேர்களிடம் சென்று சிக்கிக்கிடப்பினும் கவலைவேண்டாம் என்றுரைப்பது, லட்சியமாகாது--அதனைக் கேலிக்கூத்தாக்குவதாகும்.

கூடிவாழ்ந்தால் கோடி இன்பம்.--
இனிய எளிய லட்சியம்.