விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
13
விட்டால்...மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிது அல்லவா? அரசியாரும் கோட்டையில் உள்ள மகளிரும் அக்கினி புகுவதற்கு ஆயத்தமாக வெடிமருந்து பொதிகளை கொண்டு அமைத்த மேடை ஒன்றில் தயாராக இருந்தனர்.[1]
போர் துவங்கி பத்தொன்பது நாட்கள் முடிந்து விட்டன. தஞ்சை மன்னர் திருப்புல்லானி அரண்மையில் தங்கி இருந்து கொண்டு இராமநாதபுரம் முற்றுகைப் போரை கவனித்து வந்தார். அடிக்கடி பாசறைக்கு வந்து தமது படைகளுக்கு உற்சாகம் ஊட்டி வந்ததுடன், தங்க வெள்ளி நாணயங்களையும் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி ஆக்கம் தந்து வந்தார்.[2] எந்தவகையிலும் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்தே திருவேன் என துல்ஜாஜி மன்னர் இறுமாப்பாகப் பேசிவந்தார். இராமநாதபுரம் மறவர்கள் நாலைந்து நாட்களில் சரணடைந்து விடுவர் அல்லது தமது வாளுக்கு இரையாகி விடுவர் என காலக் கெடு நிர்ணயம் செய்து இருந்தார். அத்துடன், நாலு கோட்டைச் சீமையையும் (சிவகங்கைச் சீமை), தொண்டமான் சிமையையும், கைப்பற்றும் ஆசைக் கனவுகளில் அவர் ஆழ்ந்து இருந்தார்.[3] யாருக்கும் வெற்றி தோல்வி என்ற இறுதி நிலை ஏற்படாததால், அநேகமாக, இந்த 'ஊமைப்' போரினால் இருதரப்பினரும் இளைத்து களைத்துப் போன நிலைக்கு வந்துவிட்டனர்.
இருபதாவது நாள் பொழுது புலருவதற்கு இன்னும் சில நாழிகைகள் நேரம் இருந்தன. திடீர் என கடல் ஆர்ப்பரிப்பது போன்ற இரைச்சல். இராமநாதபுரம் கோட்டைக்கு மேற்கே உள்ள பெரிய கண்மாய் நீர்த் தேக்கத்தின் வெள்ளம் கரையை உடைத்து பிரவாகமாக வந்து கொண்டிருந்தது[4] கோட்டையின் மேற்கு, வடக்கு பகுதிகளைக் கடந்து கிழக்குப் பகுதியில் அமைந்து இருந்த தஞ்சைப் படைகளின் பாசறையை அந்த வெள்ளம் சில நிமிடங்களில் மூழ்கச் செய்தது. ஆயுதங்கள், வெடி மருந்து, அரிசி மூட்டைகள், சாராயப் பீப்பாய்கள். பொதி