176
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
முடிவுரை
இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் சோழர் தலை நகராய் விளங்கிய இக்காவிரிப்பூம்பட்டினத்தின் தொன்மையும் பெருமையும் ஒருவாறு சுருக்கமாக விளக்கப் பெற்றன. பட்டினப் பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பண்டைத் தமிழ் நூல்களிலும் பிறவற்றிலும் இப்புகார் நகரத்தின் அமைப்பினைப் பற்றிய பலவகைக் குறிப்புக்களையும் இவ்வூரில் நெடுங்கால மாக வழங்கி வரும் செவிவழிச் செய்திகளையும் இக்காலத்தில் வழங்கும் இடப்பெயர் முதலிய வரலாற்றுக் குறிப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு காவிரிப்பூம்பட்டினமாகிய இப்பழம் பதியிலும் இதனைச்சூழ அமைந்த ஊர்களிலும் வரலாற்றுப் பழமையுடையனவாகத் தென்படும் குறிப்பமைந்த சில இடங்களைப் புதை பொருளா ராய்ச்சித் துறையின் துணை கொண்டு அகழ்ந்து ஆராய்ந்தால் இந்நகரத்தின் தொன்மை யமைப்பினையும் பிற சிறப்புக்களையும் இக்காலத்தார் உணர்ந்து மகிழ்வதற்குரிய பலவுண்மைகள் வெளியாகும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. நம் நாட்டின் வரலாற்றையுணர்ந்து கொள்ளுதற்கு இன்றிமையாத இக்கலைப் பணியினை சென்னையரசினரும் இந்திய அரசினரும் மேற்கொண்டு நிறைவேற்றும்படி தூண்டுதல் தமிழ் மக்களின் நீங்காக் கடமையாகும்.