பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 83


நாச்சியாரும் முடிவு செய்தார். பிரதானி தாண்டவராய பிள்ளை விட்டுச் சென்ற பணிகளை, குறிப்பாக சிவகங்கை சீமையின் நாட்டார்கள், சேர்வைக்காரர்களுடன் ஓலைத் தொடர்புகளைத் தொடர்ந்து வந்தார். தமது கணவருக்கு விசுவாசத்துடன் பணிகள் ஆற்றி வந்த அந்தரங்கப் பணியாளர்களான மருது சேர்வைக்காரர்களையும் ராணியார் தமது புதிய அரசியல் பணியில் ஈடுபடுத்தினார்.

விருபாட்சியிலிருந்து சிவகங்கைச் சீமை நாட்டுத் தலைவர்களுக்கு அனுப்பிய ஓலைகளுக்கு தக்க பலன் கிடைத்தது. பிறந்த பொன்னாட்டின் விடுதலைக்கு தங்களை ஆகுதியாக வழங்க வேண்டும் என்ற வேட்கையில் சிவகங்கைச் சீமை குடிமக்கள் பலர், சிறுசிறு குழுக்களாகத் தங்களது ஆயுதங்களுடன் விருபாட்சி போய்ச் சேர்ந்தனர். ராணியாரைச் சந்தித்து தங்களது விசுவாசத்தை தெரிவித்ததுடன், அங்கேயே தங்கத் தொடங்கினர். தியாகி முத்து வடுக நாதர் சிந்திய இரத்தத்திற்குப் பழி வாங்க வேண்டும், காளையார் கோவில் போர்க்களத்தில் பெற்ற களங்கத்தை அழித்து புதிய வரலாறு படைக்க வேண்டும் என்பதே அவர்களது வேட்கையாக இருந்தது. விருபாட்சி பாளையத்தில் சிவகங்கை மறவர்களது நடமாட்டம் அதிகரித்தது. ராணி வேலு நாச்சியாரது நம்பிக்கையும் வலுத்தது. சிவகங்கைச் சீமையை மீட்டி விடலாம் என்ற உறுதி அவரது மனதில் நிலைத்தது.

கலித்தொகையும் புறப்பாட்டும் நினைவூட்டும் காட்சியாக ராணி நாச்சியார் காணப்பட்டார். நாள்தோறும் காலை நேரத்தில் வீர மங்கை வேலு நாச்சியார் சீருடை அணிந்து, போர்ப்படை தாங்கி விருபாட்சி கிராம மந்தைவெளியில், சிவகங்கை மறவர்கள் பொருதும் வீர விளையாட்டுக்களை பார்வையிட்டார். தமது இளமைப் பருவத்தில், சக்கந்தியிலும், அரண்மனை சிறுவயலிலும் தமது பாட்டானர்களிடம் பெற்ற போர்ப் பயிற்சி, களஅணி வகுப்பு, பொருதும் பொழுது கையாளும் போர் உத்திகள் - ஆகியவைகளை, அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை முறையாக மேற்கொண்டிருந்தார். சிவகங்கைச் சீமையில் இருந்து வந்த மறவர்களுக்கு ராணியாரது ஊக்கமும் உணர்வும் நாட்டுப்பற்றையும் ராஜவிசுவாசத்தையும் தூண்டும் அகல் விளக்காக அமைந்தது.

நாட்கள், மாதங்கள் வருடங்கள் என ஏழு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ராணி வேலுநாச்சியாரது முயற்சிகள் முழுமை பெறுவதற்கான வாய்ப்பும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆங்கிலப் பரங்கிகளையும், ஆர்காட்டு நவாப்பையும், ஒரே நேரத்தில் அழித்து ஒழிக்கும் திட்டம் ஒன்றினை மேல் நடத்துவதற்கு மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆயத்தமானார். அப்பொழுது சிவகங்கை சீமையை, ஆற்காட்டு நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுவதற்கு உதவும் படைகளையும் திண்டுக்கல் கோட்டையில் இருந்து, பெற்றுக் கொள்ளுமாறு மைசூர் மன்னர்,