அம்பிகாபதி அமராவதி *
மீனொக்குங் கண்ணுடையாள் மின்னோக்கிற் கொப்பன்றி மிகுந்தன் னாளைத்
தானொக்கும் பொற்பொன்றுஞ் சார்தலிலா மறிதன்னைச் சார்ந்தி லேனே!
115
அமராவதி : ஓ! நன்றாய்ப் பாட்டுப் பாடுகிறீர்! அம்மானைப் பிடியாததற்கு அது காரணமாயின், வேறென் செய்தீர்!
அம்பிகாபதி : என் செய்தாய் என்றா கேட்கிறாய்?
கண்மணி!
அமராவதி : என்ன! என்னைக் கண்மணி என்றழைக் கின்றீரே. நான் அரசி என்பதை மறந்துவிட்டீரா?
அம்பிகாபதி : இல்லை, இல்லை. என்னுயிருக்கும் என்னுடம்பிற்கும் என் அன்பிற்குமெல்லாம் நீங்களேதாம் அரசி. வாய்தவறிச் சொன்னதைப் பொறுத்தருளல் வேண்டும்.
அமராவதி : பொறுக்க முடியாது. அத்தவறுதலுக்காக உம்மை இதனால் அடிக்கின்றேன். (ஒரு மெல்லிய பூம்பந்தை அவன் மேலெறிகின்றாள்)
அம்பிகாபதி : இத்தகைய அடி கிடைப்பதாயின் இன்னும் பலமுறை அவ்வினிய சொற்களைச் சொல்ல விழைகின்றேன்.
அமராவதி : ஓ! நீர் பெருத்த வாயாடியாய் இருக்கின்றீர். அஃதிருக்கட்டும். மானைக் கைவிட்ட நீர் வேறென்ன திருட்டுத் தொழில் செய்தீர்?
அம்பிகாபதி:
புயலாருங் குழன்மடவாள் பொற்பினையே பொருவுமென மயிலாரை யான்நோக்க மற்றதுதான் ஆணாக,
இயலாத மயிற்பேடும் ஏந்திழையாட் கொவ்வாமை
அயிலாரும் விழியாய்! யான் அறிந்ததனை அகன்றெனனால்!
அமராவதி : ஆம்! அஃதுண்மைதான்; ஆண் மயிலை ஒரு பெண் மகளுக்கு உவமை கூறுதல் ஆகாதுதான்; பெண் மயிலோ அழகிலது. அங்ஙனமாயின் வேறென் செய்தீர்?