239
ஐந்தாம் நிகழ்ச்சி : பன்னிரண்டாங் காட்சி
களம் : தஞ்சையிற் கம்பரது மாளிகை
காலம் : முற்பகல்
நயினார் பிள்ளை : (காவேரியைக் கட்டித் தழுவி அவள் கண்ணீரைத் துடைத்து) கண்மணி, அழாதே! அழாதே! நின்தமையன் அமராவதியுடன் இங்கே திரும்பி வந்தவுடன் சிறையினின்றும் விடுதலை செய்யப்பட்டேன்; நின்னை மீண்டுங்காணவும் பெற்றேன்.
காவேரி : ஆம், பெருமான், யானுந்தங்களை மீண்டும் காணப்பெற்றதில் ஒருவாறு மனந்தேறினேன், ஆனாலும் ..
நயினார் : நின் தமையன் இங்குத் திரும்பியதில் எனக்குச் சிறிதும் மனமகிழ்ச்சியில்லை. அரசன் என்னைச் சிறைப் படுத்தியதில் எனக்குச் சிறிதுங்கவலையே யில்லை. அரசன் என்னுயிரைப் போக்கினும் போக்குக! அம்பிகாபதி பிழைத்தாற் போதுமென்றே துணிந்திருந்தேன்.
காவேரி : பெருமான், என்தமையன் அமராவதியுடன் திரும்பி வந்தாலன்றி நீங்கள் சிறையினின்றும் விடப்பட மாட்டீர்கள் என்பது தெரிந்ததும், என்தமையன் துடி துடித்து உடனே எங்களுடன் இங்கே திரும்பிவர உறுதி செய்துவிட்டார். அதனைத் தடைசெய்ய அமராவதிக்கும் எனக்கும் நாவெழவில்லை.
நயினார் : என் செய்யலாம்! ஊழ்வினை எங்கட்கு மாறாய் நிற்கின்றது. நின்தமையன் சிற்றின்பப் பொருள் விரவாமல் நூறுபாக்கள் அரசவையிற் பாடி முடித்தால், அவற்கு அமராவதியை மணஞ் செய்து கொடுப்பதாக அரசன்