ஞா. தேவநேயப் பாவாணர்
91. எந்நாட் கண்ணி
1
ஆட்பெயர் போல்ஊர்ப் பெயரும் அழகான செந்தமிழில் ஏற்பட்டுத் தமிழகமே இன்புறுவ தெந்நாளோ?
2
சீரங்கம் தன்னைத் திருவரங்க மென்று முன்போல் கூறுங்கள் என்றாள்வார் குறிப்பதுவும் எந்நாளோ?
3
வேதா ரணியமென விளம்புகின்ற பேர்மறைந்தே ஈதே மறைக்காடென் றியம்புவதும் எந்நாளோ?
4
மாயூரந் தன்னை மயிலாடு துறையென்று
வாயாரச் சொல்லி வழங்குவதும் எந்நாளோ?
5
வைத்தீசு வரன்கோயில் வினைதீர்த்தான் கோயிலென்று வைத்தபழம் பெயர்மீண்டும் வழங்குவதும் எந்நாளோ?
6
சிதம்பரம் தன்னைச் சிற்றம்பலம் அல்லது தில்லையென்று கூறித் திளைப்பதுவும் எந்நாளோ?
7
விருந்தா சலந்தன்னை விரும்புபழ மலையென்று கருத்தாகக் கூறிக் களிப்பதுவும் எந்நாளோ?
8
திண்டி வனந்தன்னைத் திகழ்புளியங் கானமென்று பண்டே போலெங்கும் பகர்ந்திடுவ தெந்நாளோ?
9
நீல கிரியை நீலமலை யென்றுமுன்னோர்
போலப் புகன்றுமகிழ் பொங்குவதும் எந்நாளோ?
81