12
இளங்குமரனார் தமிழ்வளம் -25
தமிழ்க் காசுவின் தமிழர் சமயம் 1940 இல் முதற்கண் வெளி வந்தது. பின்னர் 1969 இல்மறுபதிப்பு வந்தது. அந்நூலின் பிரிவுகள் 18, வரவேற்புரை 1. ஆக இப்பத்தொன்பது பகுதிகளையும் ஏழு தலைப்புகளில் அடக்கி இந்நூல் வெளிப்படுகின்றது.
இந்நூல் பொழிவு நூல். பொழிவாளன் கருத்தும்,ஆய்வும் மூலவர் கருத்துடன் இடம் பெறுவது. சில கூறுகள் மிக வலியுறுத்தல், சில கூறுகள் வலியுறுத்தாமை, சில கருத்துகள் விடுதல், சில கருத்துகள் இணைத்தல் என்பனவெல்லாம் பொழி வாளன் நோக்குக்கு ஏற்ப அமையும் என்பது வெளிப்படை
ஒருநூற் கருத்துகளைப் பற்றிய ஆய்வு ஆதலால் மூல நூல் ஆசிரியர் வழங்கிய செய்திகள் அப்படி அப்படியே இடம் பெறுதல் இயற்கை. ஏனெனில் அவர்தம் கருத்துகளுக்கு அழுத்தம் தர வேண்டிய இடத்துத் தருதல் வேண்டுமாயின், அவர் கருத்து களை அப்படியே தாராமல் இயலாதே!
'தமிழர் சமயம்' மீள்பார்வை பார்க்கப் பட்டு ஒழுங் குறுத்தியும் விரித்தும் எழுதப்பட வேண்டுமெனக் கா.சு. நினைந்தார். "இந் நூலின் கருத்துக்கள் செவ்வையாகக் கோவை செய்யப்பட வில்லை” என்றும் குறித்தார் (158). அக்குறிப்பின் தகவு கொண்டு இயன்ற அளவாற் கோவைப் படுத்தப்பட்டுள்ளது இஃது என்று கொள்ளலாம்.
'தமிழர் மதம்' (மறைமலையடிகள்), தமிழர் சமயம் (கா.சு) தமிழர் மதம் (பாவாணர்) என்னும் முந்நூல்களையும் ஒருங் கெண்ணி ஒரு மொத்தத் திறனாய்வு நூலொன்று செய்யின் தமிழ்ச் சமய நோக்கின் விரிவாக்கம் விளங்கும். அப்பணி செய்தலும் வரவேற்புக்குரியதே; நூலின் சுருக்கம் கருதி இப் பொழிவு நூல் அவ்விரிவாக்கத்தை மேற்கொள்ளவில்லை.
கா.சு.' அவர்களுக்கு நெல்லையில்நினைவுச் சான்று உண்டு. அவர் அருளிய நூற்சான்றுகள் உண்டு. இவற்றினும் மேற்சான்றாக உயிர்ப்புச் சான்றாக விளங்குவது குழித்தலை தமிழ்க்கா.சு. நினைவு இலக்கியக் குழு.
'கா.சு.' இலக்கியக்குழு கண்டு கண்ணெனக் காத்து வருபவர் மீ.சு.! ஆம்! மீ.சு.இளமுருகு பொற்செல்வியர்!