தமிழ் மன்னர் பெயர்
71
மக்கள் பெருகி வடக்கே வரவே சோழநாடு தோன்றிற்று. தென்றிசை யினின்றே மக்கள் ஆதியில் வடக்கே சென்று உலகமுழுதும் பரவினதாகச் சரித்திரம் கூறும். பல்வகைக் கலைகளும் இதற்குச் சான்று பகரும்.
சோழநாட்டின்பின் சேரநாடு தோன்றிற்று. சேரநாடு முதலாவது குடமலைக்குக் கீழ்ப்பட்ட கொங்குநாட் டளவாயிருந்து பின்பு மேல் கரையும் சென்று தாவிற்று.
தமிழ்மொழி பாண்டிநாட்டின் செந்தமிழாயிருந்ததும், வடக்கே சோழ நாட்டிற் சற்றுத் திரிந்ததும், அதை அடுத்து அதன் மேற்கே மிகத் திரிந்து கொடுந்தமிழானதும்,
கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில் பாண்டியன் தமிழ்நாட்டில் தலைமை வகித்ததும், பின்பு சோழன் தலைமை வகித்ததும், பின்பு சேரன் செங்குட்டுவன் தலைமை வகித்ததும், பாண்டிய சோழ சேர முன்மை இடைமை பின்மைகளை யுணர்த்துவனவாகும்.
சங்ககாலத்தோடு தனித் தமிழரசு தலைதாழ்த்ததனால் அதற்குப் பிற்பட்ட சிற்றிடைச் சிறுபோதைத் தமிழரசக் கிளர்ச்சிகள் இங்குக் கொள்ளப் பட்டில.
மேனாட்டுப் பழஞ் சரித்திர நூல்களில் தமிழரசரைப்பற்றிய குறிப்புகளிலெல்லாம் பாண்டியன் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழநாடு வடக்கே வரவர விரிந்திருத்தலால் மக்கள் மேற்கே சென்று குடியேறினர் என்க.
சேரநாட்டுத் தமிழ் தன் பெருந் திரிபினாலேயே வடமொழித் துணைகொண்டு மலையாளம் எனத் தனிமொழியாய்ப் பிரிந்தது.
ஆதலால் பாண்டியன் பெயர் மிகப் பழைமையான தென்க
- “செந்தமிழ்ச் செல்வி” கன்னி 1934