உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/அப்பாவின் ஆசை

விக்கிமூலம் இலிருந்து

21. அப்பாவின் ஆசை

விதி மனிதனை எதிர்காலத்தை நோக்கித்தான் இழுத்துச் செல்கிறது. இறந்த காலத்துக்குச் செல்ல அது அவனை அநுமதிப்பதில்லை. அந்த மகாசக்தியைப் பற்றி எண்ணிக் கொண்டே ஹரி நடந்தான். பாகவதர் அவனை முதல் நாளே ‘ஊருக்குப் போய்ப் பெற்றோரை வணங்கி ஆசி பெற்று வா’ என்று அனுப்பினார். அப்போது அவன் அந்தக் குடும்பத்தைச் சென்று காண விரும்பவில்லை. ஆனால், தெய்வம் சோதனையைப் போல் அவனை மறுநாளே அந்தக் குடும்பத்தை நோக்கிக் கோலெடுத்து விரட்டியனுப்பிய விந்தையை எண்ணிக் கொண்டே அவன் அரசூரை அடைந்தான்.

ஹரி தன் வீட்டுக்குள் நுழைந்த போது, பெரியசாமி தன் மனைவியின் படுக்கைக்கு அருகில் குத்திட்டு உட்கார்ந்திருந்தான். சாணமிட்டு மெழுகிய தரையில், அங்கும் இங்கும் அழுக்குத் துணிகள் பரப்பிக் கிடந்தன, பெரியசாமி ஒரு முறை தன் எதிரில் நின்ற உருவத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

எத்தனை வருஷங்களுக்குப் பிறகு, எப்படி மாறு வேஷத்தில் வந்தால் என்ன, பெற்றவர்களுக்குப் பிள்ளையைத் தெரியாமலா போய் விடும்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் வீடு தேடி வந்திருக்கும் மகனைப் பெரியசாமிக் கிழவனும், முனியம்மாளும் அடையாளம் கண்டு கொள்ள எவ்விதக் கஷ்டமும் இருக்கவில்லை .

“அப்பா!” என்று அழைத்த அவனது குரலைக் கேட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டான் பெரியசாமி. ஆனால், படுக்கையில் கிடந்த முனியம்மாள்தான் ஹரியைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்து, “வா கண்ணப்பா, இப்படி என் பக்கத்திலே வந்து உட்காரு. உன்னெப் பார்த்து எம்மாம் நாளாச்சு! எங்களை எல்லாம் ஒரே முட்டா மறந்துட்டியே!” என்று அழைத்தாள்.

ஹரி ஒரு கணம் வியப்புற்றான்.

கடுகடுப்பும், கோபமும், குரோதமும் கொந்தளித்த அந்தக் குரலில்தான் இப்போது எத்தனை அன்பு! முனியம்மாளின் பழைய குரல் எங்கே? உருவத்தில்தான் எத்தனை மாறுதல்? தெருக் கூத்தில் ராணி வேஷம் போட்டு, சிம்மாசனத்தில் உட்கார வைக்கலாம் போல இருந்த அழகும்; கட்டுமஸ்தான உடலும் எங்கே போய் விட்டன?

“உங்களுக்கு என்ன உடம்புக்கு? ஏன் இப்படி ஒரேயடியாக இளைத்துத் துரும்பாய் போய் விட்டீர்கள்?” என்று கவலையுடன் கேட்டான் ஹரி.

“இனிமே இந்த உடம்பு துரும்பாத்தான் ஏன் தம்பி இருக்கணும்? ஒவ்வொரு நாளா எண்ணிக்கிட்டேதான் இருக்கேன். ஆனால், அது என்னை ஏமாத்திட்டுப் போய்க் கிட்டே இருக்கு. இப்பனாச்சும், உனக்கு எங்க ஞாபகம் வந்து பார்க்க வரணும்னு தோணிச்சே; அதுவே எனக்குப் போதும். சின்ன வயசிலே உன்னை நான் ரெம்பக் கொடுமைப் படுத்திட்டேன். விறகுக் கட்டையாலே அடிச்சு வீட்டை விட்டுத் தொரத்தினேன். அந்தப் பாவத்துக்குள்ள பலனையும் நான் நல்லா அநுபவிச்சுட்டேன். ஆனால், இப்பக் கூட எனக்குத் தோணுது; நானா உன்னை அப்படிச் செய்யல்லே. நீயும் இங்கேயே இருந்தால், உங்க அப்பனைப் போலே கழுத்து ஆட்டங் கண்டாக் கூட லைட்டைக் கீழே போடாமெத் தூக்கிக் கிட்டுத்தான் அலையணும். ஏதோ தெய்வம் உனக்கு இம்மானாச்சும் கருணை காட்டிச்சே, அதுதான் எனக்கு வேணும்” என்று கொட்டித் தீர்த்தாள்.

பெரியசாமி திரும்பவும் மனைவியருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, “இப்போ இங்கே எதுக்கு அவன் வந்திருக்கான்னு கேளு. ஒன் ராமாயணத்தை எல்லாம் கேட்டுக்க அவன் வரல்லே” என்று அலுப்போடு கூறினான்.

“உனக்கு இப்போ என்ன வந்துட்டுது? ஒரே முட்டாக் காயறே. வீட்டுக்கு வந்து நிக்கிற பிள்ளே, கூப்பிட்டாக் கூடப் பேச மாட்டேங்கறியே? அவன் கூடப் பேசினா என்ன, உன் வாய் முத்து உதிர்ந்தா போகும்? இல்லே, போறப்பே உன் தலையிலே அவன் கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போனானா?” என்று கணவனைக் கடிந்து கொண்டாள் முனியம்மா.

ஹரி யோசித்தான்; ‘அடிக்கவோ, கோபிக்கவோ பெற்றவர்கள் உரிமையுள்ளவர்கள்; ஆனால், அவர்களிடம் அன்பும், பணிவும் கொண்டிருக்க வேண்டியதுதானே பிள்ளைகளின் கடமை? வெறுப்பை, வெறுப்பால் வெட்டி வீழ்த்தி விட முடியுமா? அதைத் தடுக்க அன்பென்னும் கேடயம் அல்லவா வேண்டும்?’ தந்தையின் சீற்றம் அவன் மனத்தை வருத்தவில்லை.

ஹரி நெடுஞ்சாண் கிடையாகத் தந்தையின் பாதங்களில் விழுந்து வணங்கினான். பதறிப் போன பெரியசாமி, “டேய் டேய், எழுந்திருடா! என்னை ஒன்னும் நீ கும்பிட வேண்டாம். நான் ஆசீர்வாதம் பண்ணினவுடனே, நீ பெரிய சங்கீத வித்வானாயிடப் போறியா? இல்லே, ஊர் உலத்திலே பெரிய பெரிய ஜரிகை வேஷ்டி போட்டுக் கிட்டு மகா வித்வானுங்க இருக்கச்சே, நீதான் பாடிக் கிழிக்கப் போறியா? உனக்கும் சங்கீதத்துக்கும் என்ன, சம்பந்தம்? உன் அப்பன் வித்துவானா? இல்லே, உங்க ஆயி வித்துவானா? உனக்குத்தான் புத்தி கெட்டுப் போச்சுன்னா, அவங்களுக்குமா புத்தி கெட்டுப் போகணும்? என் தொழிலை ஆசையாக் கத்துக் கொடுத்தேன். பெரிய கெட்டிக்காரனாகிச் சுயமாச் சம்பாதிச்சு, மாயாண்டியைப் போலே, பெரிய கடையெல்லாம் வச்சு முன்னுக்கு வருவேன்னு நினைச்சேன். இந்தக் குடும்பத்திலே அக்கறை இருந்தா, நீ இப்படி எங்களை விட்டுட்டு ஓடிப் போவியா? இங்கே குழந்தைகளை வெச்சுகிட்டு, நான் என்ன கஷ்டப் படறேன்னு உனக்குத் தெரியுமா? இப்பவும் கண்ணப்பா, ஒன்னும் கெட்டுப் போகல்லே. நீ சரின்னு என் தொழிலைச் செய்யறதாச் சொல்லு. நாளைக்கே நல்ல கம்பெனியிலே வேலை வாங்கித் தறேன். ரெண்டு வருஷம் கஷ்டப் பட்டாலும் சொந்தக் கம்பெனி சின்னதா ஆரம்பிச்சுடலாம். குடும்பத்தை உன் கையிலே ஒப்படைச்சுட்டு, நான் நிம்மதியா இருப்பேன். இல்லேன்னா நீ உருப்பட மாட்டே” என்று கூறிய போதே முனியம்மாள் சீறி விழுந்தாள்.

“உனக்குப் பைத்தியந்தான் பிடிச்சிருக்கு. வீடு தேடி வந்த பிள்ளையை இம்மாந்தான் பேசுவியா; இன்னமும் பேசுவியா? ஏதோ கும்பிட்டா, கடவுளை நெனச்சுக் கையைக் காட்டுவியா; ஒன் மனசிலே பெரிய விசுவாமித்திர மவரிசின்னு நெனப்போ? பெரிய சாபம் கொடுக்கறியே! நீ பொழுதுக்கும் லைட்டைத் தூக்கிச் சம்பாரிச்சு எம்மாங் காசு வச்சிருக்கே; அவனையும் அந்தத் தொழில் பண்ணலேன்னு திட்டறே. ஏதோ அதினாச்சியும் நல்லாப் பாட்டுப் பாடி, நாலு எடத்துக்குப் போய்க் கை நிறையச் சம்பாரிச்சா… அது ஒனக்கும், எனக்கும் இல்லாமே வேறே யாருக்கு?” என்று முனியம்மாள் பேசிக் கொண்டிருந்த போதே “நான் இங்கே ஒரு முக்கியமான விஷயமாக வந்தேன்” என்று கூறிய ஹரி, “ஆமாம், சிங்கப்பூர் மாமா எங்கே?” என்று குறுக்கே ஒரு கேள்வியைக் கேட்டான்.

“அது எங்கனாச்சும் ஊரை சுத்தப் போயிருக்கும். போற இடம், வர்ற இடம் தெரிய நம்மகிட்டே சொல்லிக் கிட்டாப் போவுது? என்ன தம்பி, ஏதாவது விசயமா?” என்றாள் முனியம்மாள்.

பக்கிரியைப் பற்றிய பேச்சை எடுத்தவுடனே, முனியம்மாளின் முகம் போன போக்கை ஹரி கவனித்தான். அதில் பிரதிபலித்த துயரமும், வேதனையும் அவன் மனத்தையும் தொட்டன.

சிங்கப்பூர் மாமா பக்கிரியைச் சிறு வயதில் கண்ணப்பனாக இருந்த போது, பார்த்திருக்கிறான் ஹரி. எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு, ஒரு முறை சமீபத்தில் பார்த்தான். ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து வந்து கொண்டிருந்த தன்னை, எப்படியோ அடையாளம் கண்டு கொண்டு, பக்கிரியே வலுவில் கூப்பிட்டுப் பேசியதை நினைக்கையில் ஹரிக்கே ஆச்சரியம் தாங்கவில்லை.

ஆனால், முனியம்மாளுக்கோ - அவன் ஒரே தம்பியாகையால் - பக்கிரியிடம் அளவுக்கு மீறிய வாஞ்சை. பக்கிரியும், எப்போதாவது ஒரு தடவை சிங்கப்பூரிலிருந்து இந்தப் பக்கம் வருகிறவர்கள் வசம் அக்காவுக்கென்று அருமையான சிங்கப்பூர் வாசனைச் சோப்பு இரண்டை வாங்கி அனுப்புவான். அதைப் பூசிக் கொண்டு, தன் தம்பிக்குத் தன் மீது எத்தனை அன்பு, எத்தனை பாசம் என்று ஊர் முழுக்கப் பறை சாற்றி மகிழ்ந்து போவாள். “சிங்கப்பூரிலே தம்பி பெரிய உத்தியோகம் பாக்குது. கை நிறையச் சம்பாரிச்சுக்கிட்டு வரும். அதுக்கு நம்ப பக்கத்திலே நவ்ல பெண்ணாப் பார்த்துக் கட்டி வைக்கணும்” என்று, வருவோர், போவோரிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்.

இப்போது ஊரோடு வந்து விட்ட பக்கிரியைப் பார்த்தவுடனே அவன் அங்கே என்ன உத்தியோகம் பார்த்திருக்க முடியும் என்பது அவளுக்கு நன்கு புரிந்தது. ‘என்றைக்குத் தலையில் கல் விழப் போகிறதோ?’ என்று நடுங்கிக் கொண்டேதான் இருந்தாள்.

இடுப்பில் சில்க் கைலியும், பச்சைப் பட்டைப் பெல்ட்டும், ஹாங்காங் பனியனுமாகக் காட்சியளிக்கும் பக்கிரி அந்தப் பிராந்தியம் முழுவதும் பிரபலமாகியிருந்தான். எப்போதும், பத்து நண்பர்கள் அவனைச் சுற்றிலும் இருப்பார்கள். அவன் பழகுவதையும், இனிக்க, இனிக்கப் பேசுவதையும் கண்டு மயங்காதவர் இல்லை. ஊரிலிருந்து எவ்வளவு புதையல் கொண்டு வந்தானோ, அதை எங்கே புதைத்து வைத்திருக்கிறானோ, அது பக்கிரிக்குத்தான் வெளிச்சம். ஆனால், இடுப்புப் பெல்ட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

அந்த ஊரிலுள்ள டீக்கடைக் காரனுக்குச் சிங்கப்பூர்ப் பக்கிரி கண் கண்ட தெய்வம். கடை வாசலில் யாருடனோ, கம்பீரமாக நின்று கொண்டு “டேய் காளி, சைனா டீ இரண்டு போடு. அர்ஜண்ட்!” என்று ஆர்டர் கொடுக்கிற அழகும், குடித்து முடித்ததும் இடுப்பிலுள்ள பெல்ட்டைத் திறந்து புத்தம் புதுப் பத்து ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டி, அங்கே நிற்கும் தன் நண்பர்களுக்கெல்லாம் சேர்த்துத் தானே டீக்குப் பணம் கொடுத்து விட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு போய் விடுவதும், டீக்கடைக்காரனுக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இதனால், பக்கிரியுடன் சுற்றுவதற்காகவே சிலர் ஆசைப்பட்டனர். வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிடுவான்; பிறருக்கும் வாங்கித் தருவான். ‘தஞ்சாவூர் மிலிடரி ஹோட்டலி’ல் பக்கிரிக்குப் பற்று வரவே இருந்தது. ஆனால் அவன் உள்ளூரில் என்ன தொழில் செய்கிறான்; இன்னும் இவனிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்னும் விவரம் யாருக்கும் தெரியாது.

பக்கிரி மட்டும், அடிக்கடி “இந்த ஊரிலே ஒரு டூரிங் டாக்கீஸ் போட்டா, எப்படி இருக்கும்?” என்று தன்னைச் சுற்றிலும் இருப்பவர்களைப் பார்த்துக் கம்பீரமாகக் கேட்பான்.

“பிரமாதமா இருக்கும் அண்ணே!” என்று குரல் வரும்.

“நல்லா வசூல் ஆகும் அண்ணே. என்ன படம் கொண்டாறப் போறீங்க?” என்று இன்னொரு கேள்வி பிறக்கும்.

இப்படியே அனைவரும் அவனது எண்ணத்தை ஆதரிப்பார்கள். ஆனால், இப்படி டூரிங் டாகீஸைப் பற்றிய பேச்சிலேயே பருவம் மாறி, மழைக் காலம் வந்து விடும். வருண பகவான் மீது பழியைப் போட்டு விட்டுப் பக்கிரி சினிமாக் கொட்டகையை இழுத்து மூடி விடுவான்.

வேறு ஏதாவது புது வியாபரத்தைப் பற்றி ஆலோசனை நடக்கும். இத்தனை சாமர்த்தியமும், அவன் சிங்கப்பூரிலேயே கற்றுக் கொண்டதல்ல. இந்தியாவிலும், அவன் சுற்றாத ஊர் இல்லை. சென்னையும், பம்பாயும் அவனுக்கு நல்ல அத்துப்படி. கல்கத்தா, சிங்கப்பூரிலிருந்து காற்று வாங்கப் போகிற இடம் மாதிரி.

“அடிக்கடி வியாபார விஷயமாக இங்கே எல்லாம் வருவேன். உடனே போய் விடுவேன்” என்று அவனே கூறுவான். அது என்ன வியாபாரம், அப்படி என்ன அவசரம் என்று மாத்திரம் சொல்ல மாட்டான்.

ஒரு சமயம் நாகப்பட்டினத்தில் பக்கிரியைப் பார்த்ததாகப் பெரியசாமியின் சிநேகிதன் ஒருவன் வந்து சொன்னான். ஆனால், ‘இது வரை வந்தவன், அரசூருக்கு வந்து என்னைப் பார்க்காமல் போயிட்டானே பாவி!’ என்று முனியம்மாள் வெகு நாள் வரை முனகிக் கொண்டே இருந்தாள். இப்போது அவளுடைய ஆசையைத் தீர்க்கத்தானோ என்னவோ, நிரந்தரமாக அவளுடனேயே வந்து தங்கி விட்டான். ஆனால், இப்போது முனியம்மாளுக்கு அவன் முன் போலவே, எங்காவது கண் காணாத சீமையில் இருந்தால் தேவலை போலிருந்தது.

பேசிக் கொண்டிருந்த போதே, பெரிய பெண் திரௌபதி இரண்டு குவளைகளில் ஆவி பறக்கக் காபி என்ற பெயரில், ஒரு கரிய நிறப் பானத்தைக் கொண்டு வந்து, எதிரில் வைத்து விட்டு ஓடப் போனாள்.

முனியம்மாள் அவளைக் கூப்பிட்டாள். “என்னடி, ஒரே முட்டா பாவலா எல்லாம் காட்டறே? இது யாருன்னு நெனைச்சுகிட்டு ஓடறே? அண்ணன் காலிலே வந்து விளுடி!” என்று விரட்டினாள். உடனே திரௌபதி விழுந்து கும்பிட்டாள். பிறகு, எழுந்து சற்று ஓரமாக நின்று கொண்டாள். வறுமை அந்த வீட்டை எப்படி ஆட்சி செய்து வருகிறது என்பதை அவனால் உணர முடிந்தது. தெரு வாசலில், கூச்சலும், கும்மாளமும் போடும் குழந்தைகளையும் பார்த்தான். உறை கழற்றிய தம்பூரா மாதிரி இருந்த அவர்களது தோற்றம், அவன் கண்ணில் நீரை வரவழைத்தது.

“என்ன தம்பி, காப்பியெக் குடிக்காமெ, பார்த்துக்கிட்டே இருக்கே; ஆறிப் போனா, இந்த இளவு காபி நல்லாவா இருக்கும்? சீக்கிரம் சூட்டோடு குடிச்சுடு” என்று முனியம்மாள் துரிதப்படுத்தினாள். அப்போதுதான், ஹரிக்குத் தன் எதிரிலுள்ள காபியின் ஞாபகம் வந்தது. திரௌபதியின் பக்கம் திரும்பி, “தங்கச்சி, எனக்கு வேண்டாம். நான் இப்போது வரும் போதுதான் குடித்து விட்டு வந்தேன். அப்பாவும், நீயும் குடியுங்கள். கொண்டு போ” என்று ஹரி கூறிய போது, “என்ன கண்ணப்பா, கொண்டு வந்த காபியை யாராவது திருப்பி அனுப்புவாங்களா? உனக்குப் பிடிக்கா விட்டால் போகிறது; கொண்டா இப்படி” என்றவாறு பக்கிரி உள்ளே நுழைந்தான்.

“நல்லாக் குடி; வேளா வேளைக்குக் கிளப்பிலே நீ மட்டும் தின்னுபுட்டு ஊரைச் சுத்த வேண்டியது; எப்பனாச்சும் நெனச்சா வந்து குதிக்கிறே; அக்காங்கறே, தங்கச்சிங்கறே. கையிலே ஏதோ பெரிசாப் பணம் வெச்சிருக்கேன்னு பயமுறுத்தறே; கண்ணிலேயும் காம்பிக்க மாட்டேங்கறே. எங்கனாச்சும் ஒழுங்கா ஒரு இடத்திலே, கையிலே இருக்கிற பணத்துக்குக் கடை, கண்ணி வச்சிருந்தாலும், யாருனாச்சும் வந்து பொண்ணு தருவாங்க. நமக்கும் மருவாதை இருக்கும். இப்படியே போய்க் கிட்டிருந்தா, என்னதான் முடிவு? ஆமா, நான்தான் கேக்கிறேன்; இந்த வீட்டுக்குள்ளாற நீ அடி எடுத்து வச்சு எத்தனை நாளாச்சு? எங்கே போயிருந்தே? கண்ணப்பன் உன்னைப் பாக்கணும்னு எம்மா நாழியாக் காத்துக்கிட்டு இருக்குது தெரியுமா?” என்று முனியம்மாள் ஆவேசத்தோடு கூறிய போது, பக்கிரி ‘ஆங்’ என்று ஒரு முறை சூள் கொட்டினான்.

“அவன் ஏன் என்னைத் தேடி வரப் போறான்? நீ சொன்னாலும், நான் நம்ப வேண்டாமா? பெரிய கலெக்டரே அல்ல வந்து ஐயாவுக்கு மாலை போட்டிருக்காரு! அதுவும் ரோஜாப் பூமாலை மாத்திரமா? தங்கச் சங்கிலி, கையிலே காப்பு! என் கூட எல்லாம் பேசுவானா” என்று கூறியபடியே கையிலிருந்த காபியை ரசித்துக் குடித்தான். ’இரு இரு. உன்னையும் போலீஸ்காரன் கொண்டு போய்த் தங்கக் காப்புப் போடத்தான் போகிறான்’ என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்ட ஹரி, பக்கிரி தன் கச்சேரிக்கு வந்திருந்ததை ஊர்ஜிதம் செய்து கொண்டு, தன் சித்தி பக்கம் திரும்பினான்.

“சித்தி, இப்படி நான் சொல்லுகிறனே என்று என்னைக் கோபித்துக் கொள்ளாதே. மாமாவுக்கு வியாபகம் ஜாஸ்தியாகி விட்டது. அவருடைய சக்திக்கு மேலே பணம் தேவை போலிருக்கிறது; மாமா குறுக்கு வழியில் இறங்கி விட்டார். நீ என் மீது வருத்தப்பட்டுப் பிரயோசனம் இல்லை. நான் உண்மையைத்தான் சொல்லுகிறேன். மாமாவைப் போலிஸ் தேடுகிறது. அவரைப் பிடித்துக் கொண்டு போகப் போகிறார்கள். ஒரு திருட்டுக் கேஸிலே மாமா இப்போது சரியாக மாட்டிக் கொண்டாயிற்று. நான் இதைச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன்” என்று கூறினான்.

‘போலிஸ்’ என்ற வார்த்தையைக் கேட்டதும், முனியம்மாளுக்கு உடம்பெல்லாம் உலுக்கியது. பக்கிரிக்கும் உள்ளூற நடுக்கந்தான்; என்றாலும், அதை அவன் வெளிக்குக் காட்டிக் கொள்ளவே இல்லை. ஆனால், கலவரமடைந்த முனியம்மாள், “என்ன கண்ணப்பா, என்ன விஷயம்? கொஞ்சம் சீக்கிரமாச் சொல்லு” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

“விஷயம் ரொம்ப முற்றிப் போய் விட்டது சித்தி. சற்று முன்பு மாமா கூடச் சொன்னாரே, கலெக்டர் எல்லாம் வந்ததாக. நேற்று அந்த பஜனை மடத்தில், என் கச்சேரி நடந்தது. ஒரே கூட்டம். கூட்டம் சேர்ந்தால், யாருக்குக் கொண்டாட்டம் என்று சொல்ல வேண்டுமா?—எந்தத் திருட்டுப் பயலோ, கச்சேரி முடிந்து கூட்டம் கலைகிற போது, ‘லபக்’கென்று எங்கள் பாட்டு வாத்தியார் பெண்ணின் கழுத்திலே இருந்த நெக்லெஸை அறுத்துக் கொண்டு ஓடி விட்டான். போலிசில் புகார் கொடுத்தாயிற்று. போலிசார் நேற்று ராத்திரிக்குள் ஜரூராக வேலை செய்து, திருடனைப் பிடித்து உள்ளே அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், நகை அவனிடத்தில் இல்லை. போலீசுக்கு அந்தக் கேடியைத் தெரியுமாம். அந்தக் கேடிக்கும் அல்லது திருட்டுக்கும், மாமாவுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால், போலீசுக்கு மாமாவைப் பற்றிய தகவல் போயிருக்கிறது. சிங்கப்பூர் பக்கிரியிடந்தான் நகை இருப்பதாகவும், எல்லாரும் ஒரே கும்பல் என்றும் அவனே கூறி விட்டான். அது உண்மையோ, பொய்யோ, இன்னும் சிறிது நேரத்தில், போலீஸ் நம் வீட்டைத் தேடி வந்து விடும். அதனால்தான், இந்த விஷயம் என் காதில் பட்டதும், அப்படி ஏதாவது தவறுதலாக நடந்திருந்தாலும்; மீளுவதற்கு உண்டான வழியைப் பார்க்கலாம் என்று இத்தனை அவசரமாக இங்கு ஓடி வந்தேன்” என்று ஹரி கூறி முடிப்பதற்குள், முனியம்மான் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

அக்காள் அழுவதைப் பார்த்ததும், பக்கிரிக்கும் மனசு தாங்கவில்லை. வெளியில் பார்ப்பதற்குப் பக்கிரி எப்படித் தோன்றினாலும், உள்ளுக்குள் வெறும் கோழை. அதுவும் தன் அக்காளிடம் அவனுக்கு அளவுக்கு மீறிய பாசம். ஆகவே, எதற்கும் கலங்காத பக்கிரி, அக்காவின் கண்ணீரைப் பார்த்ததும் கலங்கி விட்டான்.

“தம்பி, உண்மையாச் சொல்லு; இந்தத் திருட்டிலே உனக்குச் சம்பந்தம் உண்டா? கண்ணப்பன் சொல்றதெல்லாம் நெசந்தானா?” என்று முனியம்மாள் பெரிசாகக் குரல் கொடுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.